என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

சி.மணிவாசகன், செங்கல்பட்டு.

''சமீபத்தில் உங்கள் மனதைத் தொட்ட திரைப்படங்கள் எவையெவை?''

 ''சமீபத்திய திரைப்படங்கள் எல்லாவற்றை யும் பார்க்கவில்லை. பார்த்து நெகிழ்ந்தவை 'தாரே ஜமீன் பர்’, 'அங்காடித் தெரு’, 'பருத்தி வீரன்’, 'ராவணன்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'மைனா’, 'ஆடுகளம்’, 'கோ’. பொறாமைப்பட்டது சிலவற்றைப் பார்த்து. அதில் ஒன்று 'மதராசபட்டணம்’!''

எம்.சின்னாளன், தேனி.

''பாரதிராஜா ஸ்கூலில் இருந்துதான் பாக்யராஜ், மணிவண்ணன், பாண்டியராஜன்,  பார்த்திபன் என்று ஏராளமான இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், பாலசந்தர் ஸ்கூலில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகாதது ஏன்?''

 ''வஸந்த், சுரேஷ்கிருஷ்ணா, சரண், ஹரி, சமுத்திரக்கனி, அமீர்ஜான், சாணக்யா, நாகா. இன்னும் பலரும் வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் சக்கைப் போடு போடுகிறார்களே... பொதுவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பாலசந்தர் ஸ்கூல் என்றால், உதவியாளர்களை உட்காரவைத்து வகுப்பு எடுப்பது இல்லை. அவர்கள் தங்களை உடன்படுத்திக்கொண்டவர் கள். இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் எப்படித் துவங்குகிறார், எப்படி முடிக்கிறார், என்ன ஷாட் வைத்தால் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும்; எந்த நேரங்களில் க்ளோசப் வைக்கிறார், வசனங்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு இருந்தாலும் படப் பிடிப்பின்போது சில பகுதிகளை ஏன் மாற்றி எழுதுகிறார், அதனால், கூடுதலாக என்ன பயன் விளைகிறது, நடிகர்களை எப்படிக் கையாள்வது போன்ற பல அம்சங்களைப் படப்பிடிப்புத் தளத்தில் கூர்ந்து கவனித்துக் கற்றுக்கொள்பவர்களே முன்னுக்கு வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், எனக்கு எப்போதுமே மிகக் குறைவான உதவியாளர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.மூன்று பேர்களுக்கு மேல் இருந்தது இல்லை. அதிலும் பல ஆண்டுகள் என்னிடமே உதவியாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

வஸந்த் - 8 வருடம், சுரேஷ்கிருஷ்ணா - 7 வருடம். என்னிடம் பணிபுரிந்த மொத்த உதவியாளர்களின் எண்ணிக்கை 15 பேருக்கு மேல் இருக்காது!''  

##~##

சிங்காரவேலன், குன்றத்தூர்.

''நீங்கள் அறிமுகப்படுத்திய புதுமுகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த முகம்?''

'' 'நிழல் நிஜமாகிறது’ நினைவிருக்கிறதா? காது கேளாத அந்தக் கதாபாத்திரத்துக்குப் பல நாட்கள் நான் சல்லடை போட்டுத் தேடினேன். கடைசியில் கிடைத்தவர்தான் அந்தப் புதுமுகம். 'அனுமந்து’... அந்தக் கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் அவர் எத்தனை பொருத்தமாக இருந்தார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

அந்த முகம்தான் எனக்கு மிகமிகப் பிடித்த முகம். அவரது நடிப்பு எப்படி? எனது தேர்வு எப்படி?''

வித்யா, புதுச்சேரி.

''சினிமாவை வெறும் நாடக பாணிக் குக் கொண்டுசென்றீர்கள் என உங்களைப் பற்றி ஒரு கருத்து நிலவுகிறது... அது எந்த அளவுக்கு உண்மை?''

 ''வாழ்க்கை என்னும் நாடகத்தையே சினிமாவில் காட்டியதால் இருக்கலாம். நாடகக் கலையில் இருந்து உருமாற்றம் பெற்று வந்ததுதானே திரைக்கலை. 30 ஆண்டுகளுக்கும் முந்தைய எனது திரைப் படங்களில் நாடகத்தின் பாதிப்பும் தாக்கமும் இருந்து இருக்கலாம். திரைப்படங்களின் தாய், நாடகம். எனது நாடகங்கள் அனைத்தையுமே திரைப்படங்களாக ஆக்கி அதில் மிகப் பெரிய வெற்றி பெற்றவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன். நாடகங்களில் மக்களால் வெகுவாகரசிக்கப்பட்ட இடங்களை அப்படியே திரைப்படத்திலும் அமைத்துக்கொண்டு இருந்தேன். அந்த வகையில், நாடகத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது எனலாம். திரைப்படத்துக்கு என்று புதிதாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இந்தப் பாதிப்பு இருந்தது இல்லை!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

ஆ.பானுமதி, திருவாரூர்.

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''நீங்கள் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம்? செய்திருக்க வேண்டாம் என நினைக்கிற படம் எது? ஏன்?''

 ''பிடித்த படம் என்று சொன்னால் நிறையவே இருக்கின்றன. ஒன்றே ஒன்று சொல்லுங்கள் என்று நீங்கள் அடம் பிடித்தால் அந்த ஒன்று 'புன்னகை’ திரைப்படம். செய்திருக்க வேண்டாம் என்று நினைத்தது எதுவும் இல்லை. எனக்குப் பிடித்தவை ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது உண்டு. அதேபோல எனக்குப் பிடிக்காதவை ரசிகர்களுக்குப் பிடித்ததும் உண்டு!''

ஆர்.ரமேஷ், பெங்களூரு.

''உங்கள் மனதுக்குப் பிடித்த தமிழக அரசியல்வாதி யார்? ஏன்?''

 ''தேடிக்கொண்டு இருக்கிறேன். நேரம் தேவைப்படுகிறது. எடை போட்டுச் சொல்ல!''

க.பூங்கொடி, சித்தோடு.

''முற்போக்குச் சிந்தனையுடன் படம் எடுத்த நீங்கள் வீட்டில் எப்படி?''

'A bowler is only as good as a batsman allows him to be என்று கிரிக்கெட்டில் ஒரு வாசகம் உண்டு. வெளியே நீங்கள் பார்ப்பது கிளைகளும், இலைகளும், மலர்களும், கனி களும்தான். வேர் என்பது வீடுதான்!

நான் என் படங்களில் முற்போக்கான கருத்துக்களைக் காட்டி இருக்கிறேன் என்றால், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் என் குடும்பத்தினர்தான். எனவே, வீட்டில் நான் முற்போக்காக இருக்கிறேன் என்று சொல்வதை விட, வெள்ளித் திரையில் நான் முற்போக்காக இருந்ததற்கு வீடுதான் காரணம் என்றே சொல்ல வேண்டும்!''

அ.நிர்மலா, தேனி.

''இப்போதைய நடிகர்களில் தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என நீங்கள் கருதும் நடிகர்?''

''பிரகாஷ்ராஜ் (?).''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

திருமதி விஜயா முரளி, சென்னை.

''உங்களுக்கும், கடலுக்கும், கடல் அலைகளுக்கும் அப்படி என்ன ஒரு டச்? எந்தப் படமானாலும் ஒரு 'கடல் ஷாட்’ வந்துவிடுகிறதே?''

 'The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்திரநாத் தாகூர். ஏன்? கடல், நமது கேள்விகளை விழுங்கிவிடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரினாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்குப் பிரமிப்பாக இல்லையா? பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னைப் பிரமிக்கவைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டி.வி-யில் பார்த்தபோது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நம் கதி என்ன ஆவது?!

கடல், மனதைப்போல எப்போதும் சலனப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும் மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலைவிட வேறு எது என்னைக் கவர்ந்துவிட முடியும்?''

சக்சஸ் ராஜசேகர், செய்யாறு.

 '' 'மரோசரித்ரா’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது! அப்போது உங்கள் மகிழ்ச்சி எப்படி இருந்தது?''

 '''ஈலாண்டி சரித்ரா மல்லி எப்புடு ஒஸ்துந்தோ அனி’. ஓ... மன்னிக்க! இப்படி ஒரு சரித்திரம் மறுபடி எப்போது வரும் என்று ஏங்கச் செய்தது!''

த.சத்தியநாராயணன், சென்னை.

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''நீங்கள் அறிமுகப்படுத்திய நாயகிகளில் மிகவும் பிரமிக்கவைத்தவர் யார்?''

''நான் நாயகிகளை அறிமுகப்படுத்தியதே இல்லை. என் கதாபாத்திரங்களைத்தான் முன்னிலைப்படுத்தினேன்!

ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்திலும் நான் குடிபுகுந்து வாழ்ந்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னுள் நுழைந்து என்னை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டன.

நீங்கள் பார்த்தது சுஜாதா, நான் கண்டது கவிதா! நீங்கள் பாராட்டியது சரிதாவை, நான் சீராட்டியது கண்ணம்மாவை!''

எஸ்.கந்தசாமி, திருச்சி.

''நீங்கள் இயக்கிய படங்களில் சங்கீதத் துக்கும் நாட்டியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?''

''இந்தியக் கலைகள் மனதில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக அல்ல, உணர்ச்சிகளை மேம்படுத்துவதற்காக. They are not for entertainment. They are meant for enlightenment. நாதம் படைப்பின் ஆதி; நடனம் அதன் அந்தம் என்று சொல்வார்கள். எனவே, இசையும் நடனமும் மனிதனுக்கு முழுமை தருவதால், அவை மற்ற கலைகளைவிடவும் முதன்மையானவையாகக் கருதப்படு கின்றன. அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தவை. ஒரு காலத்தில் தமிழ் நாட்டில், ஆடல் பாடல் இல்லாத வீடே கிடையாது. அன்று ஒவ்வொரு வீட்டிலும் எந்தப் பெண்ணும் ஓரளவாவது ஆடுவாள்; கொஞ்சமேனும் பாடுவாள். இன்று, தொலைக்காட்சியை நம்பிக்கிடக்கிறது கலை!''

- அடுத்த வாரம்...

கமல் நடிப்புக்கும் சிவாஜி நடிப்புக்கும் என்ன வித்தியாசம்?

உள்ளாடை அணிந்துகொள்வது போல் ஒரு காட்சியிலாவது உங்கள் கதையின் நாயகிகள் வருகிறார்களே... அதில் என்ன 'சென்ட்டிமென்ட்’?

உங்கள் படத்தின் மூலம் எப்படியும் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் என் இளமைப் பருவத்தில் ஊரைவிட்டுக் கிளம்பி, ஆசை நிறைவேறாமல் ஊருக்கே திரும்பிவிட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் ஆறுதல் என்ன?

விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...