என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் மேடை - கே.பாலசந்தர்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

##~##

கே.ரமேஷ், திண்டுக்கல்.

''இதுவரை உங்களிடம் திட்டு வாங்காத நடிகர்கள்..?''

''இதற்குப் பதில் சொன்னால், திட்டு வாங்கியவர்களின் பட்டியல் அப்பட்டமாகத் தெரிந்துபோகும்! அவர்கள் என்னைத் திட்டுவார்கள். பின்னால் திட்டுவார்கள்... நேரில் வந்து திட்டினாலும் பரவாயில்லை. மற்ற நண்பர்கள் மத்தியில் என்னைத் திட்டுவார்கள்... எவ்வளவு குழப்பம் ஐயா உங்களால்! இந்த வயதில் எதற்கு ரமேஷ் எனக்கு இந்த வீண் பொல்லாப்பு!''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

ஜ.ஜம்ஷத், வாணியம்பாடி.

''இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று எந்தப் படத்தைப் பார்த்தாவது ஏங்கியது உண்டா?''

''ஒரு பெரும் பட்டியல் உண்டு! ஜம்ஷத் தவிர, மற்றவர்களும் இதே கேள்வியைக் கேட்டால் என்ன செய்வது? அதற்காகவே இரண்டு படங்களைப்பற்றி மட்டும் சொல்கி றேன். வஸந்த் இயக்கிய 'கேளடி கண்மணி’, மணிரத்னம் இயக்கிய 'ரோஜா’!''

கே.சுகன்யா, சென்னை-14.

'' 'சிந்துபைரவி’ படத்தில் சங்கீத மேதையான ஜே.கே.பி. தன் மனைவிக்கு இசை தெரியாது என்பதற்காக, இசை தெரிந்த சிந்துவைக் காதலிக்கிறார். ஆனால், ஜே.கே.பி-வுக்குச் சங்கீதம் தெரியுமே தவிர, சமைக்கத் தெரியாது. அதனால், ஜே.கே.பி-யின் மனைவி ஒரு சமையல்காரரைக் காதலித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?''

''சபாஷ்... சரியான போட்டி! பெண்ணியம் என்பதற்கு இதுதான் விளக்கம் என்று இத்தனை நாட்கள் எனக்குப் புரியாமல் போயிற்று.

அம்மணி சுகன்யா, நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் ஒப்புக்கொள்கிறேன். ஈர்ப்பு என்பது, நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம். நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம். ஈர்ப்பு என்பது வேறு, இருப்பு என்பது வேறு. இந்த மேகம் அந்த மேகத்துடன் எப்படிச் சேர்ந்தது என்பதை மேகங்கள் சேர்ந்த பின் தான் அறிகின்றன. அறிந்ததும் கலந்து பொழிந்து மறைகின்றன. THE MAGIC OF THE WIND REMAINS A MYSTERY!''

கே.கல்யாணராமன், முசிறி.

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''உங்களது எந்தப் படத்தை இப்போது ரீ-மேக் செய்ய ஆசை?''

'' 'ஒவ்வொரு படத்தையும்’ என்று சொல்லி நான் தட்டிக்கழிக்கப்போவது இல்லை! பெண் கதாபாத்திரங்களை நாயகிகளாக்கி நிறையப் படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இன்று பெண்கள் நிறையவே முன்னேறிவிட்டார்கள். அவர்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது... கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குச் சிலர் தங்களை 'வளர்த்துக்’கொண்டு இருக்கிறார்கள்.

ஆண்கள்பற்றிய கதையை ரீ-மேக் பண்ணலாம். அவர்கள் பிரச்னை செய்ய மாட்டார்கள். மன்னிக்கவும். அதற்காக ஆண்கள் இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நான் சொல்வதாக தப்பாக நினைத்துவிடாதீர்கள். ஆங்... அந்தப் படம்தான் கரெக்ட். இப்பவும் ரீ-மேக் பண்ணலாம் அதை. அதுதான்... சொல்லக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... பயம் என்று இல்லை... வேண்டாமே. அடுத்த கேள்விக் குப் போகிறேன். சரி... அடுத்த வாரம் சொல்றேனே!''

எஸ்.ஜனார்த்தனன், கடம்பூர்.

''ரஜினி, கமல் இருவரின் பலம்... பலவீனம் என்ன?''

''அயராத உழைப்பு, அசாத்தியமான திறமை 'இன்னும் மேலே... இன்னும் மேலே’ என்று அடுத்தடுத்து புதுப் புது பரிமாணங்களை நோக்கிச் செல்வது... தொடுவது... இதுதான் மிகப் பெரிய பலம்.

ஆனால், அது புலியின் மேல் சவாரி செய்வதுபோல... இறங்கவே முடியாது. அதுதான் பலவீனம்!''

சி.ராஜேந்திரன், திருவாரூர்.

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''கமல் - ரஜினி யாரை ரொம்பப் பிடிக்கும்... உண்மையைச் சொல்லுங்கள்?''

''வலது கண், இடது கண் இதில் உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்? சொல்லுங்கள் மிஸ்டர் ராஜேந்திரன். மாறு கண் இல்லை எனக்கு. ஒரு கண்ணில் வெண்ணெயும் இல்லை!''

கி.மோகனா, மேல்மருவத்தூர்.

''உங்கள் படைப்புகளில் மறக்க முடியாத கதாபாத்திரம்?''

'' 'ஒரு கலைஞனுக்கு அவனுடைய எல்லாப் படைப்பும் பிடித்தமானவைதான். அதே சமயம் ஒன்றுகூட முழு திருப்தி கொடுக்காதுதான். அதனால்தான் அவன் இன்னும் இயங்குகிறான்!’ இப்படி எல்லா படைப்பாளிகளும் சொல்லிக்கொள்வது உண்டு.

ஆனால், நான் சொல்கிறேனே!

நிறைய கதாபாத்திரங்கள்... குறிப்பாக இரண்டு. 'அபூர்வராகங்கள்’ பிரசன்னா (கமல்ஹாசன்), 'அவள் ஒரு தொடர்கதை’ கவிதா (சுஜாதா).''

ஆ.சுசீலா, கல்லிடைக்குறிச்சி.

''எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் படங்கள் இயக்காதது ஏன்?''

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''என்னுடைய இயக்கத்துக்கு அப்பாற்பட்ட உயரமானவர் அவர். அவருடைய 'தெய்வத் தாய்’ படத்துக்கு வசனம் எழுத வைத்து என்னை வெள்ளித் திரைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

'தந்தை மகற்காற்றும் நன்றி’யை அவர் செய்தார். 'மகன் தந்தைக்காற்ற வேண்டியதை’ நான் செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் சுசீலா!''

மா.நாதன், செய்யாறு.

 ''வொயிட் அண்ட் வொயிட் உடை ரகசியம் என்ன?''

''ஒரு ரகசியமும் இல்லை!

வெள்ளை என்பது மனதைக் குறிக்கிறது... என் மனம் வெள்ளை மனம் என்றெல்லாம் ஒரு காரணமும் இல்லை. நான் 'வெள்ளித் திரை’க்காரன். அதனால்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஏன்... இப்படிச் சொல்லலாமே! காட்சி முடிந்த பின்னே கைதட்ட யாரும் இல்லை. காலி இருக்கைகளின் இருளுக்கு எதிரே மிஞ்சி இருக்கும் ஒன்றே ஒன்று வெள்ளித்திரைதானே!

வெள்ளை ஷூ போடுவேன்... அதற்குள் ரகசியம் அடங்கி இருக்கிறது! வேறு இடங்களில் செருப்புகளைக் கழட்டி வெளியே விட வேண்டிய நேரங்களில் என் காலணியைச் சட்டென்று அடையாளம் கண்டுபிடித்துவிட முடிகிறதே!''

எஸ்.தாமரை, நெய்வேலி.

விகடன் மேடை - கே.பாலசந்தர்

''இயக்குநர் பாலசந்தர், வீட்டில் எப்படி?''

''நீங்கள் வீட்டில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் வீட்டிலும் 'பாலசந்தர்’ வெளியிலும் 'பாலசந்தர்’தான். அதாவது, பாரதி சொன்ன நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்!''

சிவச்சந்திரன், திருவெற்றியூர்.

''ரஜினி அரசியலுக்கு வருவாரா?''

''ஆனை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில் என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பது தானே அழகு! ஆனால் ஒன்று, வருவதைக் காட்டிலும், வருவாரா என்று கேட்க வைப்பதிலும், வரலாம் என்று எதிர்பார்ப்பதிலும் தானே சுவாரஸ்யம். THE JOY IS IN WAITING.

இன்னொண்ணு!

எது எங்கே... எப்போது... எப்படி வர வேண்டுமோ... அது அங்கே... அப்படி வந்தே தீரும்.

மூன்று!

அவர் தனது உடல்நலத்தில் முழுக் கவனம் செலுத்தி, நன்கு தேறி 'ராணா’வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அரசியல் எங்கே போகப்போகிறது?''

ரா.ராஜலட்சுமி, கொடுங்காலூர்.

''தற்போதைய ஆட்சி மாற்றத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''மாறும் உலகில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம்தான். ஏற்றமோ... மாற்றமோ வந்தால் அதை ஒப்புக்கொள்வதுதானே நியாயம்!''

ஆனந்த ராஜ், சென்னை-75.

''உங்கள் பார்வையில் தமிழின் சிறந்த 10 படங்களைச் சொல்லுங்கள்..?''

''இதே கேள்வியை 100 பேரிடம் கேட்டுப் பாருங்கள். 100 விதமான பட்டியல் வரும்.

இப்படிப் பட்டியலிடுவதே ஒரு SUBJECTIVE THINKING தான்.

நான் இயக்கிய படங்களைக் குறிப்பிட் டாலும், குறிப்பிடாவிட்டாலும் தவறாகிவிடும். எனவே, நீங்கள் செய்வதே பொருத்தமாக இருக்கும்!''

கி.ஜெயப்பிரகாஷ், திருவண்ணாமலை.

''நீங்கள் இயக்கிய நடிகைகளிலேயே  திறமையானவர் என்று யாரைச் சொல் வீர்கள்?''

''எனது இயக்கத்தில் வந்தவர்கள் எல்லோருமே மிகத் திறமையானவர்களாகத் தானே வெளியே போவார்கள். யாரைச் சொல்வது; யாரைக் குறிப்பிடாமல் விடுவது! ஒவ்வொருவருமே ஒரு பூ, புயல், பூகம்பம், புன்னகை, புது நெருப்பு!''

உ.குமார், வந்தவாசி.

''யாரை நடிக்கவைக்க ரொம்ப சிரமப்பட்டீர்கள்?''

''என்னால் அதிகம் சிரமப்பட்டவர்கள் யார் என்று கேட்டிருந்தீர்களானால், ஒருவேளை பதில் சொல்லியிருப்பேன்!

உங்கள் கேள்விக்குப் பதில்... உஷ்ஷ்ஷ்... ''

- அடுத்த வாரம்...

  ''உங்கள் அறிமுகங்களிலேயே நீங்கள் பெருமையாக நினைப்பவர்கள் யார் யார்?''

''பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன் படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால், உங்கள் பெண்ணியப் படங்களில் ஏன் பெரியாரைப்பற்றிய சித்திரிப்புகள் இல்லை?''

''ரஜினி - கமல் இருவரிடமும் நீங்கள் அதிகமான உரிமை எடுத்துக்கொள் கிறீர்கள்... சரியா?''

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - கே.பாலசந்தர்