நந்தினி.ரா
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய், 1994-ல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். மணிரத்னத்தின் 'இருவர்' படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், தமிழ், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
தனது சிறப்பான நடிப்பு மற்றும் நடனம் மூலம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகை ஐஸ்வர்யா, கிட்டத்தட்ட 48 வயதாகியும் கூட இன்னமும் அதே இளமையான தோற்றத்துடன் வலம் வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராயின் வசீகரமான தோற்றம் மற்றும் காந்த கண்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மணிரத்னம், ஷங்கர் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பணிபுரிந்த ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படங்களைப் பார்ப்போம். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை!
1994-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ படம்தான் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம். இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஐஸ்வர்யா உடன் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.
தனது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இரண்டு பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்டி சிறப்பாக தன் திறமையை நிரூபித்தார்.
இரண்டாவதாக அவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் 'ஜீன்ஸ்'. 1998-ம் ஆண்டு ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், உருவான 'ஜீன்ஸ்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க, ஐஸ்வர்யா ராயுக்கும் கிட்டத்தட்ட இரட்டை வேடம்தான். இந்தப் படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ராயின் புகழ் எட்டுதிக்கும் பரவியது. ஏ.ஆர்.ரஹ்மானின் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட இப்படம் கோலிவுட்டின் மறக்க முடியாத பிரமாண்டங்களில் ஒன்று.
அடுத்து, ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்மூட்டி, தபு, அப்பாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. படத்தில் மீனாட்சியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான காதலை ராஜீவ் மேனன் அழகாகச் சித்திரித்திருந்தார்.
'ராவணன்' - 2010-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விக்ரமால் கடத்திவரப்பட்டு சிறை பிடிக்கப்பட்ட ஐஸ்வர்யா, க்ளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 5வது தமிழ்த் திரைப்படம் 'எந்திரன்'. 2010-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினியின் காதலியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். காதல் அனுக்கள், கிளிமஞ்சாரோ பாடல்கள் அவரது நடனத் திறமையை வெளிப்படுத்தியது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.
'இருவர்', 'இராவணன்' போன்று மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்திருக்கிறார். நந்தினி கதாபாத்திரத்தில் பிரதான வில்லியாக ஐஸ்வர்யா நடித்திருப்பது அனைவரிடத்திலும் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.