
தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்பவர்களை நாம் சகமனிதராகக் கருதியதுமில்லை. பேரம் பேசி அவர்களுக்கான ஊதியத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்போம்.
ஒரு நோய்த்தொற்று உலகம் முழுதும் பரவியதும் பதறிப்போகிறோம். உயிர் வாழ்வதற்கான அச்சம் நம்மை நெருக்குகிறது. முழுவதுமாக நீங்காவிட்டாலும் இறப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால் மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே அள்ளும், கழிவுத்தொட்டிக்குள் இறங்கும் அவலத்துக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்க நமக்கு அவகாசமும் இல்லை; மனமும் இல்லை. ஏனெனில் இதில் இறங்குபவர்களும் இறப்பவர்களும் சமூகத்தின் அடித்தட்டில், சாதியத்தின் கடைசிப்படிக்கட்டில் இருப்பவர்கள்தாம். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்கும் முகக்கவசமே நம் மூச்சை அடைக்கிறது என்று சமயம் கிடைக்கும்போதெல்லாம் தளர்த்திக்கொள்கிறோம்; சில சமயங்களில் கழற்றவும் செய்கிறோம். ஆனால் நஞ்சாகிப்போன கழிவு வாயு தாக்கி மூச்சடைத்து இறந்துபோனவர்கள் எத்தனையோ பேர். அந்த மரணங்கள் வெறும் எண்களாகவே பலர் மனதில் பதிகின்றன. அப்போது மட்டும் சில பரிதாப உச்சுக்கொட்டல்களையும் சூடான விவாதங்களையும் உதிர்த்துவிட்டு, பரபரப்புச் செய்திகளுக்குள் பதுங்கிப்போகிறோம். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்பவர்களை நாம் சகமனிதராகக் கருதியதுமில்லை. பேரம் பேசி அவர்களுக்கான ஊதியத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைப்போம். அவர்களை அசுத்தமான மனிதர்களாக விலக்கிவைப்போம். இதோ தங்களை அசுத்தமாக்கிக்கொண்டு நம் அன்றாடங்களைத் தூய்மைப்படுத்துகிறவர்களின் அவலத்துக்குரிய அன்றாட வாழ்க்கை இது!








