
எஸ்.பி.பி சார் தங்கமான மனுஷன். அவர்கிட்ட பேசும்போதே நமக்கு ஒரு எனர்ஜி அள்ளும். சின்னவங்களையும் ‘சார்’னுதான் அழைப்பார்
மனம் லயித்து பியானோ இசைக்கிறார் இளையராஜா... `கடோத்கஜன்' கெட்டப்பில் கம்பீரமாகப் புன்னகைக்கிறார் மனோ... ஷெர்வானி காஸ்ட்யூமில் கனிவுடன் தோற்றமளிக்கிறார் எஸ்.பி.பி... மாடலிங் மயிலாக `பிக்பாஸ்' நமீதா மாரிமுத்து... இளமைத் துள்ளலில் கிறங்கடிக்கிறார்கள் சாக்ஷியும் யாஷிகாவும். இப்படித் தமிழ்த் திரை மற்றும் டி.வி உலகின் பிரபலங்களை ஒளிச்சித்திரமாக்கியிருப்பவர் ஆர்.பிரசன்னா வெங்கடேஷ். மாடலிங் மற்றும் விளம்பரப் பட உலகின் பிஸியான புகைப்படக்காரர் இவர். `பூமிகா', `கோடியில் ஒருவன்' என சினிமாவிலும் ஸ்டில் போட்டோகிராபராக ஸ்கோர் செய்துவரும் பிரசன்னாவிடம் பேசினேன்.
``இளையராஜா சாரை ரெண்டு முறை ஷூட் செய்திருக்கேன். அவர் ஒரு தீவிர புகைப்படக்காதலர். பாடல் கம்போஸிங்கை நேர்லேயே பார்க்கற வாய்ப்பு அமைஞ்சது. நெகிழ்வான அனுபவம். என்னோட படங்கள் அவரைக் கவர்ந்து, ஒருமுறை என்னை அவர் வீட்டுக்குக் கூப்பிட்டு டின்னரும் கொடுத்தார். மறக்க முடியாத தருணங்கள்’’ - பரவசம் குறையாத துடிப்புடன் பேசும் பிரசன்னா, பிரபலங்கள் குறித்துத் தன் அனுபவங்களையும் பகிர்கிறார்.

‘`தொழில்முறைப் புகைப்படக்காரரானபிறகு முதன்முதலா போட்டோஷூட் செய்த பிரபலம் சிம்ரன் மேடம். அதன்பிறகு சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவங்கள ஷூட் பண்ணினப்ப, கரெக்ட்டா ஞாபகம் வச்சு, என்னை நலம் விசாரிச்சாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. இசையமைப்பாளர் அனிருத், பாடகர்கள்ல எஸ்.பி.பி சார், மனோ, ப்ரித்வி, சரண்யா னிவாஸ் நடிகைகள்ல ஷ்ரேயா, காஜல் அகர்வால், யாஷிகா, சாக்ஷி அகர்வால், ‘ஜெயில்’ பட கதாநாயகி அபர்ணா, லீலா சாம்சன், ‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துன்னு பலரையும் ஷூட் பண்ணியிருக்கேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐ.பி.எல் டீம் கிரிக்கெட் வீரர்களை ஷூட் பண்ணினது சுவாரசிய அனுபவம். மொத்தமே பத்து நிமிஷம்தான் டைம் கொடுத்தாங்க. சவாலா எடுத்து, ஷூட் பண்ணினோம்.
எஸ்.பி.பி சார் தங்கமான மனுஷன். அவர்கிட்ட பேசும்போதே நமக்கு ஒரு எனர்ஜி அள்ளும். சின்னவங்களையும் ‘சார்’னுதான் அழைப்பார். அவரோடு அடிக்கடி ஒர்க் பண்ணியிருக்கேன். தமன்னா, ஜனனின்னு பலரும் மாடல்களா இருக்கும்போதே விகடனுக்காக நான் ஷூட் செய்திருக்கேன். சமீபத்துல ‘பிக்பாஸ்’ல பங்கெடுத்த நமீதா மாரிமுத்து மாடலிங்ல இருக்கும்போது, அவங்கள ஷூட் பண்ணியிருக்கேன். யாஷிகா, சாக்ஷி, பார்வதி, மிர்ணா புதுசு புதுசா ஸ்டைலிஷான காஸ்ட்யூம் செட் ஆனா, உடனே ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு ரெடியாகிடுவாங்க. ‘பூமிகா’, ‘என்றாவது ஒருநாள்’, ‘கோடியில் ஒருவன்’னு படங்களுக்கான போட்டோஷூட்டும் பண்றேன்’’ எனச் சொல்லும் பிரசன்னா தன்னைப் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார்.
‘`என் பூர்வீகம் தஞ்சாவூர். அப்பா டாக்டர். சின்ன வயசில இருந்தே போட்டோகிராபி மீது ஆர்வம் உண்டு. ஆனா, எம்.பி.ஏ படிச்சேன். சென்னையில ஒரு விளம்பரப் பட நிறுவனத்துல மார்க்கெட்டிங்லதான் வேலை பார்த்தேன். அங்கே இருக்கும்போதுதான் விளம்பரப் படங்களுக்கு போட்டோஷூட் பண்ற புகைப்படக்காரர்கள் பலரின் அறிமுகம் கிடைச்சது. போட்டோகிராபியில நானும் பெயரெடுக்கணும்னு ஆசை துளிர்விட்டது அங்கேதான். எங்க வீட்ல இதைச் சொன்னதும், என் கரியர் என்னாகுமோன்னு பயந்தாங்க. எங்க அப்பா மனசை மாத்தி, இந்தத் துறைக்குள் வந்தது சாதாரண விஷயமில்லை. ‘ஒரு வருஷம் டைம் எடுத்துக்கோ. அதுக்குள்ள சாதிக்க முடியலைன்னா, நீ படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைப் பார்க்கணும்’னு கண்டிஷன் போட்டாங்க. நானும் சவாலா எடுத்துட்டு, இந்தத் துறைக்கு வந்தேன். `தி இந்து’ நாளிதழ்ல அப்ப ‘ஃபோலியோ’ன்னு ஒரு புத்தகம் வந்துச்சு. அதுல என் படங்கள் பிரசுரமாகி, இந்தியா முழுவதுமே கவனம் ஈர்த்துச்சு. முதன்முதல்லா கேமரா வாங்கி, முதல் பிலிம் ரோல்ல தஞ்சாவூர் கோயிலைப் படமெடுத்தேன். அந்தப் போட்டோவுக்கு தேசிய அளவுல பரிசும் கிடைச்சது.



என் படங்களெல்லாம் பத்திரிகைகள்ல வருமான்னு ஏங்கிட்டு இருந்த நேரத்துல இப்படியான விஷயங்கள்தான் போட்டோகிராபி மீது எனக்குப் பிடிப்பு வரக் காரணம். திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் யேசுதாஸ் சார் பாடிட்டு இருந்தார். நான் கூட்டத்தோடு கூட்டமா நின்னு, அவரை போட்டோ எடுத்தேன். அதை பிரின்ட் போட்டு ஒரு ரசிகனா யேசுதாஸ் சாருக்கே அனுப்பி வச்சேன். ஒருநாள் திடீர்னு அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘சென்னை வந்து பாருங்க’ன்னார். என் முதல் செலிபிரிட்டி போட்டோன்னா யேசுதாஸ் சார்தான். அதன்பிறகு அவரோட ஆல்பத்துக்கு போட்டோஷூட் பண்ணினேன். அந்த நேரத்துலதான் விகடன்லேயும் நான் எடுத்த போட்டோஸ் நிறைய வந்துச்சு. விகடனின் அட்டையை அலங்கரித்த பெருமை என் படங்களுக்கும் உண்டு. என்னோட மாடல் ஷூட் விகடனில் வந்தபோது, பெரிய வரவேற்பு கிடைச்சது’’ என மகிழ்பவர், கார், ஸ்வீட்ஸ், நடனம், இசை எனப் பலதுறை விளம்பரப் பட ஷூட்களிலும் ஸ்கோர் செய்துவருகிறார்.




‘`சமீபத்துல ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷூட் பண்ணினது மறக்க முடியாது. பெரிய அளவிலான அங்கீகாரம். இப்படி டாப் கார்கள் ஷூட் பண்றது சாதாரண விஷயமில்ல. அந்தந்த பிராண்டுக்குன்னு சில கைடுலைன்ஸ் வச்சிருப்பாங்க. அந்த வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளோடுதான் நாம ஷூட் செய்ய முடியும். நாம ஷூட் செய்யும்போதே, சர்வதேச அளவில் அதோட நிபுணர்கள் நம்மகிட்ட அவங்க எதிர்பார்ப்பைச் சொல்வாங்க. சவாலான வேலைதான். கறுப்புக் காரை லைட்டிங் பண்ணுறது பெரிய சவால்.
அதைப் போல ஃபுட் போட்டோகிராபில ஸ்வீட்ஸை நாம எந்தக் கோணத்துல ஷூட் பண்றோம்ங்கறது ரொம்ப முக்கியம். ஒரு டிஷ்ஷை எடுக்கும் முன், அது மெனுகார்டுல இடம்பெறுதா, இல்ல, விளம்பரப் பலகையில வரப்போகுதான்னு கேட்டு, அதன்பிறகே அதை ஷூட் செய்வோம். உதாரணமா `சிக்கன் 65’ மெனுகார்டில் இடம்பெறுதுன்னா முன்னாடியெல்லாம் தட்டு நிறைய தாறுமாறா வச்சு ஷூட் செய்திடுவாங்க. ஆனா, அப்படிப் பண்ணக்கூடாது. நாம ஒரு பிளேட் ஆர்டர் செய்தால், அதிகபட்சம் எட்டுத் துண்டு இருக்கும். அந்த எட்டு பீஸ் மட்டும் வச்சு, ஷூட் செய்தாலே போதுமானது. ஏன்னா, தட்டு நிறைய வச்சு ஷூட் செய்தால், அந்த சிக்கன்65-ஐ ஆர்டர் செய்தவர்கள் ‘எட்டே எட்டு பீஸ் வரும்போது’ ஏமாற்றமாவாங்க. அதை நாம தவிர்க்கணும்’’ எனத் தொழில் ரகசியங்களைப் பட்டியலிடுபவர், போட்டோகிராபி கோர்ஸும் நடத்தி வருகிறார்.





‘`நான் யார்கிட்டேயும் உதவியாளரா வொர்க் பண்ணலை. நானாத்தான் கத்துக்கிட்டேன். இப்ப எனக்குத் தெரிஞ்ச கலையை மத்தவங்களுக்கும் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்கிறார் உற்சாகமாக.