தமிழில் `பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து தமிழில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகரான இவருக்கும், இவரின் மனைவிக்கும் இடையேயான வார்த்தை மோதல் சமீபமாக அதிகரித்து வருகிறது. நவாசுதீன், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும் அவரின் மனைவி ஆலியா, முதலில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள நவாசுதீன், ``நானும், ஆலியாவும் விவாகரத்து ஆனவர்கள். எங்கள் பிள்ளைகள் குறித்து சில புரிந்துணர்வு எங்களுக்குள் உண்டு. என் பிள்ளைகள் கடந்த 45 நாள்களாகப் பள்ளிக்கூடம் செல்லவில்லை. பணத்திற்காகப் பிள்ளைகளை துபாயில் இருந்து இந்தியா அழைத்துவந்துள்ளார். ஆலியாவுக்கு பணம்தான் முக்கியம். அதனால் பல்வேறு வழக்குகளை என் மீதும், என் தாயார் மீதும் அவர் தொடுத்துள்ளார். அவர் இப்படிச் செய்வது இது முதல் முறையல்ல. அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெறுவார். பிள்ளைகளை வைத்து தற்போது மிரட்டுகிறார். நான் சட்டத்தை முழுமையாக நம்புகிறேன். நிச்சயம் என் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் வெல்வேன்” என நவாசுதீன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் நவாசுதீன் பதிவுக்கு அவரின் மனைவி ஆலியா பதில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமில்லாத ஆலியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 8 பக்க கடிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ``உண்மை என்னவென்றால் நீங்கள் (நவாசுதீன்) ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற தந்தை. எனக்குத் தெரியாமல் என் 12 வயது மகளை உங்கள் ஆண் மேனஜருடன் வெளிநாட்டுக்குத் தனியாக அனுப்பி வைத்தீர்கள்.
அந்த மேனஜர் என் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நீங்களும் நானும் இல்லாத நேரத்தில் இந்தச் செயல் செய்யப்பட்டது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் இன்னும் அவரை கண்மூடித்தனமாக நம்புவதாகக் கூறினீர்கள். ஒரு தாயாக நான் இதை எதிர்த்தபோது எங்களை மிரட்டினீர்கள்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஆலியா.