விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி படமான `ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' படத்தை நடித்து இயக்கியிருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. இதையடுத்து நடிகர் மாதவன் இயக்குநர் குக்கி குலாட்டி இயக்கத்தில் 'தோகா: ரவுண்ட் டி கார்னர்' எனும் இந்தி மொழிப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாதவன் ``தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்றும் மக்களின் ரசனை மாறிவிட்டது, எனவே நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்" என்றும் பேசியுள்ளார்.

இது பற்றிக் கூறிய அவர், "எல்லா படங்களும் கடினமான உழைப்புடனும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் எடுக்கப்படுகின்றன. வெற்றி பெறாத படத்தை எடுப்போம் என்று நினைத்து யாரும் இங்கு படம் எடுப்பதில்லை. தென்னிந்தியப் படங்களைப் பொறுத்தவரை, பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தி நடிகர்களின் படத்தைவிட நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த ஆறு படங்களின் வெற்றியை வைத்து சினிமாவின் பாணி மாறியுள்ளது என்று கூறிவிட முடியாது. நல்ல படங்களை மக்கள் நிச்சயம் விரும்பி பார்ப்பார்கள். உண்மையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மக்கள் நிறைய உலக சினிமாக்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அதனால் அவர்களின் விருப்பங்களிலும், ரசனைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். எனவே மக்கள் பார்க்கும் வகையிலான திரைப்படங்களை, இன்றைக்கு வரும் திரைப்படங்களின் பாணியில் எடுக்க வேண்டும். நாம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார்.