சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கங்கனா ரணாவத் சினிமா, அரசியல், மட்டுமின்றி அவ்வப்போது சில அரசியல் கருத்துகளையும் பகிர்ந்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது பாலின அடையாளம் தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஒரு நபரை நாம் எப்போதும் ஆண், பெண், திருநங்கை என்று பாலின அடிப்படையில் மதிப்பிடக்கூடாது. இந்த நவீன உலகில் தற்போது பெண் நடிகைகள் அல்லது பெண் இயக்குநர்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக நடிகர்கள், இயக்குநர்கள் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர். அதனால் உங்களின் பாலினத்தை ஓர் அடையாள அட்டையாகவோ அல்லது பதக்கங்களாகவோ மாற்றிக் கொண்டு எங்கும் பறைசாற்றாதீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், உங்கள் பாலினம் உங்கள் அடையாளம் அல்ல. ஒரு மனிதரைப் பாலினத்தை வைத்தோ, உடல் அமைப்பைப் பார்த்தோ மதிப்பிடாதீர்கள். நான் கிராமத்திலிருந்து வந்தவள். நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த திரையுலகில் எனக்கான இடத்தை நானேதான் உருவாக்கிக்கொண்டேன்.
என்னை நான் ஒரு பெண்ணாக மதிப்பீடு செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன். பாலின அடையாளத்தை வைத்துக்கொண்டு குறுகிய மனப்பான்மையோடு இருந்தால் நிச்சயம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது. அதனால் அதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.