பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்தை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளனர். இத்திருமணம் நேற்று நடப்பதாக இருந்தது. தற்போது இன்று இத்திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெய்சால்மரில் குவிந்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ராவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பஞ்சாப் மற்றும் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். அவர்களை தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்ள சித்தார்த் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்.

திருமணம் நடக்கும் ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று உணவுகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் இத்தாலியன், சைனீஸ், அமெரிக்கா, தென்னிந்தியா, மெக்சிக்கோ, ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான உணவு வகைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்களை கவனிக்க 500 வெயிட்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 200 பேர் மும்பையிலிருந்தும், 300 பேர் டெல்லியிலிருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சீருடையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விருந்தினரையும் கவனிக்க தனித்தனி வெயிட்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். சித்தார்த் குடும்பத்தில் இருந்து 17க்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்துள்ளனர். சித்தார்த் தனது தந்தை சுனில் மல்ஹோத்ரா, தாயார் ரிமா மல்ஹோத்ரா மற்றும் சகோதரனுடன் கடந்த 4ம் தேதியே ஜெய்சால்மர் வந்துவிட்டார். கியாரா அத்வானி தரப்பில் அவரது உறவினர்கள் 10 பேர் வந்துள்ளனர்.

சித்தார்த் தரப்பில்தான் அதிகப்படியான உறவினர்கள் வந்துள்ளனர். பாலிவுட்டிலிருந்து கரண் ஜோகர், சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ஆர்த்தி ஷெட்டி, பூஜா ஷெட்டி, சாஹித் கபூர், அவரது மனைவி மீரா, நடிகை ஜூஹி சாவ்லா உட்பட பலர் வந்துள்ளனர். திருமணம் நடைபெறும் ஹோட்டல் இளஞ்சிவப்பு நிற வண்ண மின் விளக்குகளால் மின்னியது.