ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ஆலியா பட் - ரன்பீர் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் 14-ம் தேதி வியாழன் அன்று நடந்தது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஆலியா பட் - ரன்பீர் கபூரின் ரசிகர்கள், ஆலியா மற்றும் ரன்பீரின் உருவ பொம்மைகளுக்கு பெங்காலி முறையில் திருமணம் நடத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு பொம்மைகளுக்கும் பாரம்பர்ய பெங்காலி உடை அணிவித்து, திருமணக் கோலத்தில் அலங்கரித்து, மாலைகள் இட்டு, கொல்கத்தா பாரம்பர்யத்தின் அடையாளமான கையால் இழுக்கப்படும் ரிக்ஷாக்களில் 'மணமகனும் மணமகளும்' அழைத்து வரப்பட்டு, சங்குகள் முழங்க திருமணத்தை நடத்தினர்.
இந்த நிகழ்வும், அதன் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, ரன்பீர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களால் நடத்தப்பட்ட தங்கள் திருமணப் புகைப்படங்களைப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.