கடந்த 2009-ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில் அதன் இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாகத் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்குப் பிற மொழிப்படங்கள் வெளியாகும்போது அதன் முதல் வாரத்தில் 50 முதல் 55 சதவிகிதம் வரை ஷேர் கொடுப்பது வழக்கம். அதற்கு மேல் வழங்கப்பட்டால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது 60% தர வேண்டும் என இப்படத்தின் விநியோகஸ்தர்கள் கேட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் திரையரங்க உரிமையாளர்கள் கேரளாவில் ‘அவதார்-2’ பாகத்தை வெளியிடத் தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள ரசிகர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் பட ரிலீஸுக்கு இன்னும் 15 நாள்கள் உள்ளதால் அதற்குள் இது குறித்து ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.