
சனல் குமார் சசிதரண்... கேரளா கொண்டாடும் உலக சினிமா கலைஞன். `ஓராள்பொக்கம்', `ஒழிவுதிவசத்தே களி' என இதுவரை இரண்டு படங்கள்தான் இயக்கி இருக்கிறார். இரண்டுமே உலகம் முழுக்க பெரிய வரவேற்பைப் பெற்றவை. இப்போது `செக்ஸி துர்கா' என்ற மூன்றாம் படைப்புடன் வருகிறார் சனல் குமார்.
`` `சினிமா'ங்கிறது ஒரு விஷுவல் மீடியம்னு நான் நம்பவில்லை. அது அனுபவிக்கவைக்கும் கலையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு சினிமான்னா, அதுகூடவே விஷுவல், சவுண்ட்னு எல்லாம் சேர்ந்தே வரும். இப்போ ஸ்க்ரீன்ல விஷுவல் எதுவும் இல்லை. வெறும் கறுப்பா இருக்கு. ஆனா, பின்னணியில் வரும் சத்தங்களை மட்டுமே கேட்டுகூட உங்களால் என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முடியும்தானே! `ஒழிவுதிவசத்தே களி' படமே, எழுத்தாளர் உன்னி எழுதிய நான்கு பக்கக் கதையில் இருந்து எனக்குக் கிடைத்த அனுபவம். அதை என்னால் சினிமாவா கடத்த முடிஞ்சது. படமும் அந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தியது. அதனால், சினிமாங்கிறது விஷுவல் மீடியமோ, சவுண்ட் மீடியமோ இல்லை; என் பார்வையில் அது ஒரு அனுபவம்'' பளீரெனப் பேச ஆரம்பிக்கிறார் சனல் குமார் சசிதரன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``எந்த ஒரு மலையாள சினிமாவிலும் தொடர்ந்து அரசியல் பேசப்பட்டுவருகிறது. அது கவனிக்கவைக்கும் படியாகவும் இருக்கிறது. உண்மையில் நடக்கும் அரசியல் பிரச்னைகளை சினிமாவிலும் பதிவுசெய்வதுதான் நோக்கமா?''
``கேரளாவில் வாழ்க்கையும் அரசியலும் வேற வேற இல்லை. காலையில் பேப்பர் வாசிப்பதில் ஆரம்பித்து, இரவு தூங்கப் போவது வரை ஏதோ ஒரு அரசியலைச் சந்திச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. அதனாலதான் மலையாள சினிமாவில் அரசியல் பற்றியும் அரசியல் பற்றிய கேலிகளும் தொடர்ந்து இருக்கு. ஆனா, நீங்கள் பேசும் அரசியல் எந்த அளவுக்கு அர்த்தம் உள்ளதா இருக்குங்கிறது மிக முக்கியம்.''

`` `ஒழிவுதிவசத்தே களி' படம் முழுக்க ஒரு ஆவணப்படத்தின் டோன் இருந்ததே. உங்களுடைய பார்வையில் திரைப்படத்துக்கும் ஆவணப்படத்துக்குமான வித்தியாசம் என்ன?''
``என்னுடைய சினிமாவில் நிறையவே ஆவணப்படத்தின் காரணிகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். அதனால் அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு வந்திருக்கும். `ஒழிவுதிவசத்தே களி'யில் வரும் எலெக்ஷன் ஒரு ஆவணம். ஆனா, நான் அதை ஃபிக்ஷனா பயன்படுத்தியிருப்பேன். எந்த அளவில், எந்த விதத்தில் பயன்படுத்துகிறோமோ, அதைப் பொறுத்து ஆவணப்படமாகவோ, திரைப்படமாகவோ மாறும். என்னுடைய முந்தைய படமான `ஒராள்பொக்கம்' அடுத்த படமான `செக்ஸி துர்கா' இரண்டிலுமே ஆவணப்படத்துக்கான காரணிகள் இருக்கும். அதுக்காக முழுக்க அதை ஆவணப்படம்கிற ரீதியில் அணுக மாட்டேன். அந்த ஃபுட்டேஜோ, அது சார்ந்த விஷயங்களையோ என்னுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். இதுதான் என்னுடைய வே ஆஃப் மேக்கிங்.''
`` `செக்ஸி துர்கா' என்ன மாதிரியான களம்?''
``படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் துர்கா. ஒரு இரவில் அவளுடைய பயணம்தான் படம். த்ரில்லர் கலந்த ஹாரர் படம்னு சொல்லலாம். இதுவும் என் ஸ்டைலில் இயல்பான சினிமாவா இருக்கும்.''

`` `பெரிய ஸ்டார்கள் தேவை இல்லை. புதுமுகங்கள் போதும்'னு சொல்றீங்க. நீங்கள் பேசும் விஷயங்கள் ஒரு பெரிய ஸ்டார் மூலமாகச் சொன்னால், ரீச் இன்னும் பெருசா இருக்குமே?''
``முதல் காரணம், நான் என்ன ஷூட் பண்ணப்போறேங்கிறது எனக்கே தெரியாது. அப்படி இருக்கும்போது புதுமுகம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய ஸ்டார் இருந்தா, அது எனக்கு ஒரு சுமையாத்தான் இருக்கும். ரெண்டாவது காரணம், இதுதான் கதைனு முழுசா என்கிட்ட எதுமே தயாரா இருக்காது. எப்படி அதை எடுப்பேங்கிறதும் தெரியாது. அப்போ நான் என்னன்னு சொல்லி அந்தப் பெரிய ஸ்டாரை நடிக்கக் கூப்பிடுவேன்? சின்ன நடிகர்களே போதும். கதைதான் முக்கிய ஹீரோ. அது சரியா இருந்தா உங்க படத்தை கேரளாவுல மட்டும் இல்லை, சென்னையிலயும் கொண்டாடுவாங்க... துபாய்லயும் கொண்டாடுவாங்க.''