
ஆர்.வைதேகி, படங்கள்: மீ.நிவேதன்
``என்னுடைய முதல் ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு. நடுவர்கள் ஏதேதோ பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க என்னைத் திட்டுறாங்களா, பாராட்டுறாங்களானுகூடப் புரிஞ்சுக்க முடியாம, திருதிருனு முழிச்சுக்கிட்டு நின்னுட்டுருந்தேன். ஆனா, இன்னிக்கு எல்லாமே மாறியிருக்கு!'' என அழகுத் தமிழில் அசத்தலாகப் பேசுகிறார் சுனிதா. விஜய் டிவி-யின் பிரபல முகம்.
``நான் அசாம் பொண்ணு. சின்ன வயசுல இருந்தே டான்ஸ் பிடிக்கும். எங்க வீட்டுல எல்லாரும் நிறைய படிச்சவங்க. `நான் டான்ஸர் ஆகணும்'னு சொன்னபோது, 'உனக்கென்ன பைத்தியமா?'னு கேட்ட சொந்தக்காரங்கதான் அதிகம். ஆனா, என் அம்மாவும் அப்பாவும் என் விருப்பத்தைப் புரிஞ்சுக்கிட்டு என்கரேஜ் பண்ணினாங்க.

`டான்ஸ் இந்தியா டான்ஸ்'னு ஒரு ரியாலிட்டி ஷோவுல கலந்துக்க மும்பை வந்தேன். நான் முறைப்படி டான்ஸ் கத்துக்கலை. அந்த ஷோவுல கலந்துக்கிட்ட அத்தனை பேரும் பிரமாதமான டான்ஸர்ஸ். அவங்களோடு நான் எப்படிப் போட்டிபோடப்போறேன்னு பயமா இருந்தது. 'எப்பவும் ஜெயிக்கிறது முக்கியமில்லை. பங்கெடுத்துக்கிறதுதான் முக்கியம். ஜெயிச்சா சந்தோஷம். இல்லைனா அனுபவம்! தைரியமா போ'ன்னு அம்மாதான் என்கரேஜ் பண்ணினாங்க. அந்த ஷோவுல டாப் 5-ல ஒருத்தியா வந்தேன்.
அதுல என்னைப் பார்த்துட்டுதான் விஜய் டி.வி-யில் கூப்பிட்டாங்க. `ஜோடி நம்பர் 1 சீஸன் 4'ல ஆடினேன். அப்புறம் சீஸன் 7 வரைக்கும் பண்ணிட்டேன்!''- வார்த்தைகளில் அவ்வளவு ஆச்சர்யம்!

`3' படத்துக்குப் பிறகு, சுனிதா சினிமாவில் மிஸ்ஸிங். என்னாச்சு?
''ஒரு ரியாலிட்டி ஷோவுல என்னைப் பார்த்துட்டு, தனுஷ்தான் அந்தப் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படம் பண்ணியதும் அதே மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. ஒரே மாதிரி பண்றதுல எனக்கு விருப்பமில்லை. `மான் வேட்டை'னு ஒரு படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கேன். இன்னும் ரிலீஸாகலை. ஹீரோயினா பண்ணணும்னு அவசியம் இல்லை. பத்து நிமிஷம் வந்தாலும் சுனிதா கேரக்டர் பேசப்படணும். தமிழ் சினிமாவில் அசத்தும் அசாம் பொண்ணு! இதுதான் நம்ம டார்கெட், எப்படி?'' என்ற கேள்வியுடன் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார் தெற்றுப்பல்லழகி.

``சென்னையில் எங்கே பார்த்தாலும் வடகிழக்குப் பொண்ணுங்க கலக்கிட்டிருக்காங்க. அவங்க கடும் உழைப்பாளிகள், பிரமாதமான திறமைசாலிங்க. இந்த வேலை செய்றதால் உசத்தின்னோ, இது மட்டம்னோ நினைக்க மாட்டாங்க. ஆனாலும், வடகிழக்குப் பொண்ணுங்களைப் பலரும் கேவலமா பார்க்கிறாங்க. பிழைப்புக்காக எத்தனையோ பேர் தன் சொந்தபந்தங்களை விட்டுட்டு தமிழ்நாட்டுக்கு வர்றாங்க. நான் சந்திச்ச மாதிரியே பலரும் ஈவ்டீஸிங்கைச் சந்திக்கிறாங்க. அதனால என்னோட ஒரே வேண்டுகோள், வெளிமாநிலப் பொண்ணுங்கனு இல்லை, எந்தப் பொண்ணுங்களை எங்கே பார்த்தாலும் அவங்களை உங்கள்ல ஒருத்தரா பாருங்க.''
``கூல் சுனிதா... அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?''
``யார் உதவியும் இல்லாம தனி மனுஷியா சினிமா வாய்ப்புகளைத் தேடிக்கிட்டிருக்கேன். யார்கிட்ட எப்படிப் பேசணும், யார் நல்லவங்க, யார் கெட்டவங்கங்கிற பயம் இருக்கு. ஒவ்வோர் ஸ்டெப்பையும் ரொம்பக் கவனமா எடுத்து வைக்கவேண்டியிருக்கு. அம்மாவும் அப்பாவும் என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சு அனுப்பியிருக்காங்க. எந்த இடத்துலயும் இடறிடக் கூடாது, தப்பு பண்ணிடக் கூடாதுங்கிற எண்ணம் எப்பவும் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு!''