காயம்பட்ட நாயகன் களவைக் கற்றுக் கொள்வதே கதை!
குடும்பத்துக்கு ஒரு ரூபாய் என்கிற பெயரில் 'ஸ்டூடன்ட் பேங்க்' என்னும் திட்டத்தைக் கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. அதை வங்கி அதிகாரி சந்தானபாரதியிடம் சொல்கிறார். அவர் அந்த ஐடியாவைத் திருடி பேரைத் தட்டிச் செல்கிறார். வீட்டைவிட்டு ஓடி வந்த விஜயலட்சுமி, கிருஷ்ணாவோடு நட்பு நவில்கிறார். அவரைத் தூண்டிலாக்கி சந்தானபாரதியிடம் பணம் பறிக்கிறார் கிருஷ்ணா. களவுக் கூட்டணி கைகோத்து பண முதலைகளைப் பந்தாடுகிறது. இவர்களின் வலையில் மத்திய அமைச்சர் ஹனீஃபா சிக்கிக்கொள்கிறார். பதிலுக்கு இருவரையும் கொல்வதற்கு அவர் வலை விரிக்கிறார். ஜோடிகள் தப்பித்தார்களா என்பது க்ளைமாக்ஸ்!
'களவுக்குக் களவே பதில்' என்கிற கதையைப் ஸ்டைலிஷாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தேவி பிரசாத். கிருஷ்ணாவும் விஜயலட்சுமியும் மணக் கோலத்தில் ராமேஸ்வரத்தில் உயிர் பிழைக்க ஓடுகிற அறிமுகக் காட்சியே பரபரப்பு. '543 எம்.பி-க்கள், 234 எம்.எல்.ஏ-க்கள், மாவட்டத்துக்கு ஒரு கலெக்டர், ஊருக்கு ரெண்டு கவுன்சிலர்... இவ்வளவு பேர் நாட்டைக் காப்பாத்த இருக்காங்க. நாம நம்மளைக் காப்பாத்திக்குவோம் வா', 'எவ்வளவோ தப்புப் பண்ணிட்டேன். உன்னையும் கல்யாணம் பண்ணிக் கிறேன்', 'முடிஞ்ச வரைக்கும் பொய் சொல்ல மாட் டேன்' எனப் பல இடங்களில் கடந்து செல்லும் வசனம் 'அட!' என்று ஆச்சர்யம் கொடுக்கிறது.
தனது முதல் படமான 'அலிபாபா'வில் செய்த அதே 'திருடன்' கேரக்டரை இதிலும் தொட்டுத் தொடர்ந்திருக்கிறார் கிருஷ்ணா. ஏமாந்து பின் ஏமாற்ற ஆரம்பிக்கும் கேரக்டருக்கு அழகாகவே செட் ஆகி அசத்துகிறார். ரிஸ்க் எடுத்துச் சண்டை போடும்போது ஆச்சர்யம் கூட்டுகிறார். பூக்கடைக்குள் ஒளிந்துகொண்டு குறுகுறுவெனப் பார்க்கும்போது விஜயலட்சுமி கவனம் ஈர்க்கிறார். திருட்டுத்தனங்களுக்கு ஒத்துழைக்கும்போது முகத்தில் தயக்கம் தாண்டவமாட வேண்டுமே? அங்கே கோட்டை விட்டுவிடுகிறார். கிருஷ்ணாவைப் போட்டுத்தள்ளத் துடிக்கும் டெல்லி ஐ.பி. அதிகாரியாக டான்ஸ் மாஸ்டர் கல்யாண். சதா கொலை பற்றியே சிந்திக்கும், பேசும், செயல்படும் கல்யாணின் நடிப்பு ஆரம்பத்தில் மிரட்டுகிறது. ஆனால், கொடுத்த பில்டப்புக்கு எதுவும் செய்யாமல் கூலிப் படையிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்.
களவு ஜோடியைக் காப்பாற்றும் நல்ல போலீஸ் சம்பத், கொடுத்த கேரக்டரைக் கச்சிதமாக முடித்து விடுகிறார். அவர் ஏன் ஏரியா விட்டு ஏரியா வந்து ஜோடிகளைக் காப்பாற்ற வேண்டும்? அவருக்கு கிருஷ்ணாவை எப்படித் தெரியும்? என்கிற கேள்வி களுக்கு எந்தப் பதிலும் இல்லை.
|