என்ன வினையோ
என்ன விடையோ
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்!
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்!
நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்!
வலியும் வரலாம்
வாட்டம் வரலாம்
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்!
நேர்க்கோடு வட்டம்
ஆகலாம்
நிழல்கூட விட்டுப்
போகலாம்!
தாளாத துன்பம்
நேர்கையில்
தாயாக
கண்ணன் மாறுவான்!
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்!
அந்தக் கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா
மனமே!
உண்டு எனலாம்
இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்!
இணைந்தும் வரலாம்
பிரிந்தும் தரலாம்
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்!
பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டு பறவை
வாடலாம்!
புதிரான கேள்வி
யாவிலும்
விடையாக
கண்ணன் மாறுவான்!
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை அணைப்பான்!
அந்தக் கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா
மனமே!
|