சென்ற வாரத்தின் சென்சேஷன்... 'ராவணன்' ரிலீஸ்தான்!
ஆனால், எந்த ஆரவாரமும் இல்லாமல் மில்லி மீட்டரில் சிரிக்கிறார் இந்திய சினிமாவின் மௌன குரு.
"எப்பவும் நீங்க மிகப் பெரிய அரசியலுக்கு உள்ளே ஒரு சென்டிமென்ட் வைக்கிறீங்க. அதனால் அந்தப் பிரச்னையின் வீரியம் பின் நோக்கித் தள்ளப்படுவதை உணர்கிறீர்களா?"
"பிரச்னையை மட்டும் எடுக்கணும்னா, அதுக்கு வேற செய்யணும். எனக்குக் கதாபாத்திரம் மூலம், அவங்க பின்னணி வழியா என்ன சொல்ல முடியும்கிறதுதான் முக்கியம். பிரச்னையை அலசிப் பார்க்கணும்னா, விகடன் படிக்கலாம். இன்னும் இங்கிலீஷ் பத்திரிகைகள் பார்க்கலாம். கதவை மெதுவாத் திறக்கிறது மாதிரி சொல்லி, ஜனங்களையும் உள்ளே கொண்டுவந்துவிட்டால், படம் சொல்ல வந்ததைச் செய்திடும். சினிமா... பெரிய கேன்வாஸ். தெரிஞ்சு, அவங்களுக்குப் புரிகிற மொழியில் அவங்களைத் தொட முடிகிற உணர்ச்சியோடு சொல்லணும். பிரச்னையை அலசினால், அதை வேற யாராவது நல்லாப் பண்ணுவாங்க. நான் என் அளவில் முயற்சி பண்றேன்!"
"இந்து மரபில் காப்பியங்களின் மீது உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?"
"சின்ன வயசில் இருந்தே கதை கேட்டு வளர்ந்தவங்கதானே நாம். எதையும் கதையாச் சொல்லித்தானே நம்ம தலையில் ஏறியிருக்கு. 2000 வருஷத்துக்கு முன்னாடி எழுதினதில், இன்றைய தினத்தின் சாயல் இருக்கு. அதில் இருக்கிற உண்மையும் இப்பவும் இருக்கு. எனக்குக் காப்பியங்கள் பிடிக்கும்!"
" 'ராவணன்' வீரா யாரு? நக்சலா, மக்கள் தலைவனா, வீரப்பனா... நீங்க சொல்றது புரியலைன்னு சொல் றாங்க?"
"இவர் = இவர்தான்னு கணக்கு போட்டுச் சொல்லிடலாம். அப்படிச் சொல்லிட்டா, அது இன்னொரு கதை. நம்மோடு பாதிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நிறையப் பேர் இருக்கோம். இவங்க எல்லோரும் ஏதோ ஒரு திசையில் இருந்து குரல் கொடுத்துட்டே இருக்காங்க. இவங்க எல்லோருக்குமான பிரதிநிதித்துவம்தான் வீரா. எதை நாம் சாயம் போட்டுப் பூசிடறோமோ, அந்தச் சாயத்துக்குப் பின்னாடி உண்மையான மனிதக் குரல் இருக்கு. அதில் ஒரு நியாயம், ஆதங்கம் இருக்கு. அதை நாம் கேட்க ஆரம்பிக்கணும். எல்லாத்தையும் துப்பாக்கி முனையில் சரிபண்ணிட முடியுமான்னு தெரியலை. ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் வீராதான். இவங்களை மாவோயிஸ்ட்னுகூடச் சொல்றாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்திருந்தா, அப்படியும் சொல்ல முடியாது. எங்கே ஒடுக்கப்பட்டவர்கள் இருந்தாலும், அவங்க ஒரே கலர்தான். இதையே கதை என்று வெச்சுக்கிட்டாக்கூட எமோஷன் எல்லாமே உண்மை. ஓர் உண்மையை எதைப்போட்டு மூடினாலும் அது உண்மைதான்!"
"உங்க அளவில் சின்சியரா எடுக்கப்பட்ட படம் 'ராவணன்'. ஆனால், அமிதாப் படத்தின் எடிட்டிங் சரி இல்லை, அபிஷேக் கேரக்டர் சரியா வரலைன்னு குற்றம் சொல்றாரே?"
"அது அவர் கருத்து. அமிதாப்பிடம் நல்ல மார்க் வாங்கணும்னு நான் சினிமாவுக்கு வரலை. நமக்குத் தெரிஞ்ச சினிமாவை, நமக்கு என்ன முடியுமோ... அதைப் பண்றோம்.
இதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு உட்கார்ந்திருந்தால், சினிமா பண்ண முடியாது. யார் வேணும்னாலும், என்ன வேண்டும்னாலும் சொல்லலாம். இரண்டு வருஷம் உழைச்சுப் படம் பண்ணி இருக்கோம். இதுக்கு மேலே தாண்டினால், அதைப்பற்றி ஒண்ணும் பேசத் தேவை இல்லைன்னு தோணுது. என்னோட முழு கலர் இதில் தெரியும். இதுக்கு மேலே யார் சொல்லியும் இதைப் பெரிசும் பண்ண முடியாது, சிறிசும் பண்ண முடியாது!"
"விக்ரம் அருமையாகச் செய்திருக்கார். அபிஷேக் அந்த அளவுக்கு இல்லைன்னு சொல்றாங்க. உங்களுக்குத்தான் உண்மை தெரியும், யார் பெஸ்ட்?"
"விக்ரமும் அபிஷேக்கும் ரெட்டைக் குழந்தைங்க. (சிரிப்பு) இதைக் கேட்டால், எப்படிச் சொல்றது. தங்களோட அபார மான உழைப்பை இரண்டு பேரும் தந்து இருக்காங்க. நான் சொல்றதை அப்படியே பண்ணச் சொல்றது என் பாணி இல்லை. ஒரு நடிகர், தன்னோட சொந்த எமோஷனையும் கேரக்டர்களுக்குத் தரணும். அப்பத்தான் உண்மை வடிவம் வரும். இரண்டு பேரும் செய்தது அருமையான பங்களிப்பு. பயமே இல்லை. சொல்லிடுவேன்... இரண்டு பேருமே பெஸ்ட் என்பதுதான் உண்மை!"
"நீங்க தமிழ் சினிமாவைக் கூர்ந்து கவனிப்பீங்க. வருஷத்துக்கு 150 படங்களுக்கு மேலே வந்தும், வெற்றி குறைவான அளவில்தான் இருக்கு..."
"என்னைக் கேட்டால், தமிழ் சினிமா பிரமா தமா இருக்கு. புதுப் புது ஐடியா, அப்ரோச், யதார்த்தமும் இருக்கு. கமர்ஷியலா சக்சஸ் பண்றாங்க. அதே சமயம் புதுசாவும் பண்றாங்க. தமிழ் மக்கள் புது விஷயங்களை ஏத்துக்க இப்ப தயங்கறதே இல்லை. இந்தியாவிலேயே ஆரோக்கியமான சினிமா இண்டஸ்ட்ரி தமிழ்தான்!"
|