
சில்லுக் கருப்பட்டி’ படத்தோட 50வது நாள் வெற்றியை சூர்யா சார் வீட்டில் கொண்டாடினோம்.
`சில்லுக் கருப்பட்டி’ படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர், ஹலிதா ஷமீம். தற்போது சமுத்திரக்கனியை வைத்து ‘ஏலே’ படத்தை இயக்கியிருக்கிறார். ``சூர்யா சார் ‘சில்லுக் கருப்பட்டி’ படத்துக்குள்ள வந்ததுக்கு அப்புறம்தான், படத்துக்கு பெரிய ஓப்பனிங் கிடைச்சது. அவங்களோட பேனரில் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணுனதனாலதான், பெருசா புரொமோஷன் பண்ண முடிஞ்சது. படம் ரிலீஸாகி ஒரு வருஷம் ஆகிட்டாலும், இப்போதும் புதுசா யாராவது படத்தைப் பார்த்தால், அதைப் பற்றிப் பேசுறாங்க; பாராட்டுறாங்க” என்பதில் ஆரம்பித்த உற்சாகம் பேட்டி முடியும்வரை இருந்தது.
`` ‘ஏலே’ படத்தோட தொடக்கப்புள்ளி எது..?’’
``நான் எழுதுன முதல் கதை, ‘ஏலே’. `பருத்திவீரன்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘காதல்’ மாதிரியான மண் சார்ந்த படங்களாகப் பார்த்தப்போ, இந்தக் கதையை எழுதினேன். இதைத்தான் முதல் படமாகவும் எடுக்கணும்னு ஆரம்பிச்சேன். ஆனால், அது சாத்தியமாகலை. முதல் படமா `பூவரசம் பீப்பி’யை எடுத்து முடிச்சதுக்கு அப்புறம், `சில்லுக் கருப்பட்டி’க்கு முன்னாடியும், `ஏலே’ படத்தை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அப்போதும் சூழல் அமையலை. `சில்லுக் கருப்பட்டி’ படத்தை முடிச்சதுக்கு அப்புறம், புஷ்கர் சாரும் காயத்ரி மேடமும், ‘இப்போ ‘ஏலே’ படத்தை பண்ணலாமா? நாங்க தயாரிக்கிறோம்’னு சொன்னாங்க. நான் அவங்ககிட்ட உதவி இயக்குநரா இருந்தபோதே இந்தக் கதையை எழுதியிருந்ததனால, `ஏலே’ கதை அவங்களுக்கு நல்லாத் தெரியும்; ரொம்பவே பிடிக்கும். அவங்க கேட்டப்போ உடனே ஓகே சொல்லிட்டேன். இந்தப் படத்தை அவங்ககூட சேர்ந்து ஒய் நாட் ஸ்டூடியோஸும் ரிலையன்ஸும் தயாரிக்கிறாங்க. எனக்குக் கிடைச்ச முதல் சுதந்திரமே, நடிகர்களோட தேர்வுதான். ஏன்னா, இது அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்குற கதை. ரெண்டு கேரக்டர்களுக்கும் பெரிய நடிகர்களை நடிக்க வைக்கணும்னு முயற்சி பண்ணுனதுதான், இதுக்கு முன்னாடி இரண்டு முறை இந்தப் படம் நடக்காமல்போனதுக்குக் காரணம். இந்த முறை படத்தை ஆரம்பிக்கும் போதே, ’எந்த கேரக்டருக்கு யார் நடிச்சா நல்லா இருக்குமோ அவங்களையே நடிக்க வைங்க. ஸ்டார் வேல்யூ பார்க்கணும்னு அவசியம் இல்லை. கதைக்குத் தேவையான மாதிரி பண்ணுங்க’ன்னு தயாரிப்பாளர்கள் என்கிட்ட சொன்னாங்க. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு.”
`` ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் சமுத்திரக்கனியை வித்தியாசமாகக் காட்டியிருந்தீங்க; இதில் எப்படி..?’’
``நான் உதவி இயக்குநராக முதலில் வேலை பார்த்தது சமுத்திரக்கனி சார்கிட்டதான். அதனால, அவரை எனக்கு நல்லாத் தெரியும். `சில்லுக் கருப்பட்டி’ படத்துல அவரை நான் வித்தியாசமாகக் காட்டலை. அவர் எப்படியோ அப்படியேதான் காட்டினேன். `ஏலே’ படத்தில் அவரை நடிக்க வைக்கணும்னு, `சில்லுக் கருப்பட்டி’ சமயத்திலேயே முடிவு பண்ணிட்டேன். அப்போ கனி சார் நடிச்ச வேற ஒரு படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். அங்க சார் `ஏலே’ படத்தோட வயசான கெட்டப் சாயலிலேயே இருந்தார். எனக்கு உடனே `ஏலே’ கேரக்டரில் கனி சார் நடிச்சா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. கதை முன்னாடியே கனி சாருக்குத் தெரியும்கிறதனால, அவரும் `நடிக்கலாமே’ன்னு சொல்லிட்டார். கனி சாரோட பையன் கேரக்டர்ல மணிகண்டன் நடிச்சிருக்கார். கனி சாரும் மணியும் கிட்டத்தட்ட ஒரே சாயல்ல இருப்பாங்க. அப்பா, பையன்னு சொன்னா நம்புற மாதிரி இருக்கும். அதனாலதான், மணியையும் `சில்லுக் கருப்பட்டி’யில் அவர் நடிக்கும்போதே, இதுக்கும் சரியா இருப்பார்னு முடிவு பண்ணிட்டேன். ஹீரோயினா நடிச்சிருக்கிற மதுமதிக்கும் முக்கியமான கேரக்டர். இலங்கையைச் சேர்ந்தவர்.”
``ஒரு கிராமத்தில் இருக்கிற எல்லாரையும் நடிக்க வெச்சிருக்கீங்களாமே?’’
``படத்தோட சிறப்பே, அவங்கதான். முக்கியமான கேரக்டர்களில் நடிச்ச நடிகர்களைத் தவிர, மற்ற எல்லா கேரக்டர்களிலும் நாங்க ஷூட்டிங் எடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊர் மக்களைத்தான் நடிக்க வெச்சிருக்கோம். படத்தோட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் சார் அந்த ஊர் மக்களோட ஈடுபாட்டைப் பார்த்து ஷாக் ஆகிட்டார். ஊரில் இருக்கிற நிறைய பேர் ரொம்ப வயசானவங்க. சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு அப்புறம் சினிமாவே ஃபாலோ பண்ணாத ஆள்கள். அவங்க யாருக்கும் எங்களைப் பற்றி எதுவுமே தெரியலை. கனி சாரையும் அவங்களில் ஒருவராகத்தான் பார்த்தாங்க. ஷூட்டிங் முழுக்கவே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவங்களுக்கான டப்பிங்கையும் அவங்களையே பேச வெச்சோம். இந்தப் படம் மூலமா ஒரு ஊரே எனக்கு சொந்தமாகியிருக்குன்னு சொல்லலாம்.”
``உங்களோட முதல் இரண்டு படங்களுக்கும் நீங்கதான் எடிட்டர். இந்தப் படத்தை வேற ஒரு எடிட்டர்கிட்ட கொடுக்க என்ன காரணம்..?’’
``அந்தப் படங்களை நாங்க இண்டிபெண்டண்ட் படங்களா எடுத்தோம். அதனால, எடிட்டிங், ஆர்ட் டைரக்ஷன், காஸ்ட்யூம்னு கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் நான்தான் பண்ணினேன். ஆனால், `ஏலே’ அப்படியில்லை. இதில் பெரிய தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதால, அந்தந்த வேலைகளை அந்தந்த ஆட்கள்கிட்ட கொடுத்திட்டோம். அப்படித்தான், எடிட்டிங்கை ரேமண்ட்கிட்ட கொடுத்தோம்.”
``சூர்யாவும் ஜோதிகாவும் மறுபடியும் சேர்ந்து நடிக்கிறதுக்காக உங்ககிட்ட கதை கேட்டிருக்காங்களாமே..?’’
`` ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தோட 50வது நாள் வெற்றியை சூர்யா சார் வீட்டில் கொண்டாடினோம். அப்போதான், சூர்யா சாரையும் ஜோதிகா மேடமையும் முதல்முறையா நேரில் சந்திச்சேன். அதுக்கு முன்னாடிவரைக்கும் போனில்தான் பேசியிருக்கோம். என்னைப் பார்த்த கொஞ்ச நேரத்திலேயே, `நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ன்னு சூர்யா சார் சொன்னார். ‘சும்மா சொல்லியிருப்பாங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனால், சூர்யா சார் ஒரு பேட்டியிலும் ஜோதிகா மேடம் ஒரு விருது நிகழ்ச்சியிலும் அதைத் திரும்பவும் சொன்னபோதுதான், அதை அவங்க எவ்வளவு சீரியஸா சொல்லியிருக்காங்கன்னு தெரிஞ்சது. அவங்க திரும்பவும் சேர்ந்து நடிக்கிறதுக்காக எந்த மாதிரியான கதையை எதிர்பார்க்கிறாங்கன்னு அவங்ககிட்ட பேசும் போது என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன். சீக்கிரமே அதை வெற்றிகரமாக முடிச்சிடுவேன்.”
``விகடனுக்கு இயக்குநர் ஷங்கர் கொடுத்த பேட்டியில், உங்களோட ‘மின்மினி’ படத்துக்காக வெயிட் பண்றதா சொல்லியிருந்தார். அதைப் பார்த்தப்போ எப்படி இருந்தது..?’’
``எனக்கு முதல் ஆச்சர்யம் என்னென்னா, ஷங்கர் சார் `சில்லுக் கருப்பட்டி’ படம் பார்த்துட்டு ட்வீட் போட்டது. அதுவே செம ஹேப்பியா இருந்துச்சு. அடுத்து விகடன் பேட்டியில், என்னோட `மின்மினி’ படத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். எனக்கு என்ன பெரிய ஆச்சர்யம்னா, `மின்மினி’ படத்தைப் பற்றி நாங்க இதுவரைக்கும் எந்த விளம்பரமும் கொடுக்கலை. ஒரு சில பேட்டிகளில்தான், அப்படி ஒரு படம் பண்றதையும், அதில் முதல் பாதியில் நடிச்ச பசங்க வளர்ந்ததுக்கு அப்புறம் மீதிப் பாதியோட படப்பிடிப்பை எடுக்கணும்னு வெயிட் பண்றோம்னும் சொல்லியிருப்பேன். அதை அவர் ஞாபகம் வெச்சிருந்து சொன்னது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. `மின்மினி’ படத்தை அவர் எதிர்பார்க்கிறார்ங்கிற விஷயம் அந்தப் படத்தை நாங்க எடுக்கிறதுக்கான புது உத்வேகத்தைக் கொடுத்திருக்கு. `ஏலே’ ரிலீஸுக்கு அப்புறம் `மின்மினி’ வேலைகளைத்தான் ஆரம்பிக்கப்போறேன்.”