
மிஸ்டர் மியாவ்

தமிழ், தெலுங்கு என்று இரட்டைச் சவாரி செய்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘பாகமதி’ படத்தில் அனுஷ்காவுக்கு நிஜாம் காலத்து இஸ்லாமிய ராணி வேடம் என கோரஸாகக் கூவினார்கள். உண்மையில் ராஜா காலத்துப் படம் இல்லையாம். சமூகக் கதைதானாம். தமிழில் சூர்யாவுடன் இரண்டு ‘சிங்கம்’ படங்களிலும் டூயட் பாடிய அனுஷ்கா, ‘சிங்கம்-3’ படத்தில் டும்டும் கொட்டி, தாலி கட்டிக்கொள்ளும் காட்சியில் காரைக்குடியில் நடித்துள்ளார்.
‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள ராதிகா ஆப்தே நடிப்பை வானளாவ புகழ்கிறார், இயக்குநர் ரஞ்சித். ‘‘ரஜினி சாருக்கு ஜோடியா நடிக்கிற பொண்ணு. நம்பர் ஒன் நடிகையாப் பாருப்பா. எவ்வளவு சம்பளம்னாலும் கொடுத்துவிடலாம்’’னு தாணு சார் சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்ல சொல்ற காட்சிய அப்படியே உள்வாங்கி அசத்தலா நடிச்ச ராதிகா ஆப்தேவுக்கு கற்பூர புத்தி என்று சர்டிபிகேட் தருகிறார் ரஞ்சித்.
தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பின்புலம் அனைவரும் அறிந்ததே. அவரிடமே அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுத்தவர் காஜல் அகர்வால். இதுகாறும் தெலுங்கு சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்த ‘பிரம்மோற்சவம்’ குப்புறக் கவிழ்ந்ததால் மீண்டும் தமிழ் திசைக்குத் திரும்பி இருக்கிறார்.
சென்னையில் வெள்ளம் வந்தபோது ஐந்து லட்சம் அள்ளிக்கொடுத்த வள்ளல் உள்ளம் கொண்டவர் ஸ்ரீதிவ்யா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த தனக்கு, ‘ரெமோ’ படத்தில் கெஸ்ட் ரோல் கொடுத்துவிட்டு, கீர்த்தி சுரேஷுக்கு நாயகி ரோல் கொடுத்ததில் சிவகார்த்திகேயன் மீது வருத்தமாம் ஸ்ரீக்கு.

மியாவ் பதில்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா பற்றி இளைய தலைமுறைக்குத் தெரியுமா?
எம்.ஜி.ஆரை சுட்டவர் எம்.ஆர்.ராதா என்பது மட்டுமே பலருக்கும் மேலோட்டமாகத் தெரியும். ஒரு காலத்தில் எம்.ஆர்.ராதா நடத்திய நாடக கம்பெனியில் நடிகராக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வேலை பார்த்தனர். கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்கிற பட்டத்தைக் கொடுத்த எம்.ஆர்.ராதாவுக்கு நூற்றாண்டு விழா வந்தபோது தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்தும் ஏனோ கண்டுகொள்ளவில்லை.
கேரவன் பயன்படுத்தாத ஹீரோ யார்?
பூக்கள் இல்லாத பூங்கா இருக்கலாம்... நட்சத்திரம் இல்லாத வானம் இருக்கலாம். கேரவன் இல்லாத ஹீரோவா?
ஆஸ்பத்திரியில் இருந்த கமல்ஹாசன் ஆடியோவில் பேசியதுபோல, அமெரிக்காவில் இருக்கும் ரஜினியும் பேசியிருக்கலாமே?
‘கபாலி’ ரிலீஸ் ஆகிறவரை வாய் திறப்பதில்லை என்று ராகவேந்திரர் மேல் சத்தியம் செய்து இருக்கிறாரோ, என்னவோ?