
மாறாதய்யா க்ளைமாக்ஸு!

தமிழ்சினிமா எவ்வளவுதான் மாறிட்டு வந்தாலும் பல படங்களோட க்ளைமாக்ஸ் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஏன்னா டிசைன் அப்படி!
• ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன், நாத்தனார், மாமியார் சகிதம் ஏதோ குரூப்ஃபி எடுக்கப்போற மாதிரி கும்பலாகக் கூடுவார்கள். ஒரே ஃப்ரேமில் நின்னு கெக்கேபிக்கேவென சிரிப்பே வராத டயலாக்கை காமெடிங்கிற பேர்ல சொல்லி அவங்களாகவே சிரிச்சுக்கிட்டு ஒருத்தொருக்கு ஒருத்தர் பிடிச்சுத் தள்ளிக்கிட்டு, மொத்த பல்லும் தெரிய இளிச்சபடி ‘நன்றி’ கார்டு போடுவாங்க. இப்படியான படங்கள் மட்டும் ஆறு டஜன்களுக்கும் மேல இருக்கும்.
• ரெண்டாவது ரீல்ல இருந்தே வீறாப்பா முறைச்சிக்கிட்டு இருக்கிற வில்லன் குரூப்கள் அடுத்த ரெண்டுமணி நேரத்துக்குள் பாத்தா, பொசுக்குனு சரண்டர் ஆகிடுவாங்க. சரண்டர் ஆகிறதுகூட பரவாயில்லை. ‘உன் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு’, ‘உன் நகபாலீஷ் கலர் எனக்குப் பிடிச்சுருக்கு’, ‘என்னதான் இருந்தாலும் என் பொண்னு விருப்பப்படுறா’, ‘நீ பூப் போட்ட சட்டை போட்டுருக்கே. அதனால் என் பொண்ணைக் கொடுக்கிறேன்’னு சப்பைத்தனமான விளக்கம் கொடுத்துப் படத்தை முடிப்பாங்க. பல சேகர்கள் செத்ததுக்கு காரணம் இவங்கதான்!

• நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கும். திடீர்னு எண்ட்கார்டு போட்டுப் படத்தை முடிப்பாங்க. ஏன்னா, விறுவிறுப்பா போயிக்கிட்டு இருக்கிற கதையை டக்குனு ஒரு இடத்தோட முடிச்சாதான், அந்தப்படம் மேல ஒரு ஈர்ப்பு வருமாம். அட... ஓடுனவரைக்கும் படம் மொக்கையாதான் இருக்கு. க்ளைமாக்ஸாவது நல்லாருக்கும்னு எதிர்பார்த்துக் குத்தவெச்சிக்கிட்டு இருந்தவன் கதியெல்லாம் அதோகதிதான்!
• க்ளைமாக்ஸுக்காகவே ஹீரோயின் அல்லது ஹீரோயினோட குடும்ப உறுப்பினர்களை பாழடைந்த கட்டடத்துக்குள்ளேயோ, பழைய சாமான்களா குவிஞ்சு கிடக்கிற குடோனுக்குள்ளேயோ கட்டிப்போட்டு வெச்சிருப்பாங்க. அப்புறமென்ன? எல்லோருக்கும் தெரிஞ்ச கதைதான். கூரையைப் பிச்சுக்கிட்டு உள்ளே இறங்கி, இல்லைனா டூவீலர்ல கண்ணாடியை உடைச்சிக்கிட்டு உள்ளே புகுந்து ஃபைட் பண்ணுவார் ஹீரோ. ஓட்டைப் பிரிச்சு உள்ளே இறங்குறது ஹீரோயிஸமாய்யா?
• அநியாயம் பண்ற வில்லன்களையெல்லாம் அடிச்சுத் துரத்துறேன் பேர்வழினு நான்காவது மாடியில் இருந்து குதிக்கிறது, கை, காலை உதறிப் பிசைஞ்சு நெட்டி முறிச்சு சொடக்குப் போட்டு க்ளோஸ்-அப்ல மூஞ்சியைக் காட்டி பஞ்ச் பேசுறது. இப்படிப் பல அக்கப்போர்கள் நடக்கும். இப்படி, வில்லன்களைவிட ஹீரோக்கள் பண்றதைப் பார்த்தாதான் சத்தியமா பயம் வருது. முதல்ல இதுக்கு ஒரு சுபம் போடுங்கய்யா!
• இதெல்லாம் பத்தாதுனு இப்போ புதுசா ஒரு குரூப் கிளம்பியிருக்கு. க்ளைமாக்ஸ் முடியும்போதே இரண்டாம் பாகத்துக்கான காட்சியைச் செருகி வணக்கம் வைக்கிறாங்க. என்னது... மறுபடியும் முதல்ல இருந்தா? தாங்க முடியாது குருநாதா!
- ஜெ.வி.பிரவீன்குமார்