
நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: வீ.நாகமணி, பா.காளிமுத்து

``இப்பதான் டெல்லியில் இருந்து வர்றேன். கட்சி வேலைகள் எல்லாம் நிறைய இருக்கு. இது ஈ.வி.கே.எஸ்., குஷ்பு எல்லாம் பதில் சொல்லியிருக்காங்களே, அந்தப் பகுதியா? பார்த்துக் கேளுங்க தம்பி... புதுசா எதுவும் சிக்கல் வந்துடக் கூடாது'' - கவனமாகப் பேசுகிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர்.
`` `சவரக்கத்தி' படத்தின் பாட்டு கேட்டீங்களா... பிடிச்சிருக்கா? சூப்பர். எதுவும் வில்லங்கமா இல்லாம இருந்தால் சரி. எத்தனை கேள்விக்கு வேணாலும் பதில் சொல்றேன்'' - ஆர்வமாகிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி.
``எத்தனை பேர் இதுல மொக்கை வாங்கியிருக்காங்கனு எங்களுக்குத்தான் தெரியும். நான் நியூஸ்பேப்பர், ஆன்லைன் நியூஸ் எல்லாம் படிச்சுட்டுத்தான் கேம்ல கலந்துப்பேன். ஓ.கே-வா?'' - இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு லைனில் வருகிறார் நடிகை நீலிமா ராணி.
``கேள்வி கேட்கிற உங்களுக்குத்தான் ஜாலி, திருதிருனு முழிக்கிற எங்களுக்குத்தானே தெரியும் நாங்க காலினு. இவ்வளவுதான் பொதுஅறிவே இருக்குனு காட்டுவதற்காகவே ஒரு பகுதி நடத்துறீங்கப்பா. கேளுங்க, சமாளிஃபிக்கேஷனைத் தட்டிவிடுறேன்'' - எனர்ஜியுடன் பேசுகிறார் நடிகர் சாம்ஸ்.

``ஒரு முழம் பூ என்பது எத்தனை மீட்டர்?''
பதில்: கிட்டத்தட்ட 0.4 மீட்டர். இது பூக்கடைக்காரர்களின் கைக்குக் கை வேறுபடும்.
திருநாவுக்கரசர்: தொடர்ந்து சிரிக்கிறார் ``என்ன தம்பி, ஜோக் பண்ணுறீங்க. என் லைஃப்ல இதுவரை ஒருமுறைகூட பூக்கடைக்குப் போய் ஒரு மொழம் பூ வாங்கினதே கிடையாது. கோயிலுக்குப் போகும்போது என் உதவியாளர்கிட்ட சொன்னேன்னா, அவரே பூ வாங்கிட்டு வந்திடுவார். `பூக்கார அம்மாக்களின் ஒரு கை நீளம்தான் ஒரு மொழம்'னு சொல்வாங்க. அப்படிப் பார்த்தா, மூணு இன்ச் இருக்கும்'' மீண்டும் சிரிக்கிறார்.

அரோல் கொரேலி: ``சின்ன வயசுல அம்மாகூடப் போகும்போது ஒரு கையில் அளந்து மல்லிகைப் பூ தருவாங்க. அப்படிப் பார்த்தா, ஒரு அடி இருக்குமா? அடுத்த மாசம்தாங்க எனக்குக் கல்யாணம் நடக்கப்போகுது. அப்பதான் நிறைய பூ வாங்குவோம். அப்ப கரெக்ட்டா ஸ்கேல் வெச்சு ஒரு மொழம் பூ அளந்து பார்த்துடுறேன்.''
நீலிமா ராணி: ``இதை எல்லாம் நான் ஏத்துக்கவே மாட்டேன். நீங்க நியூஸ்ல இருந்து கேட்பீங்கனு எல்லா ஆப்ஸையும் ஒரு புரட்டுப் புரட்டிட்டு வந்தா, அவுட் ஆஃப் தி சிலபஸா கேட்கிறீங்களேப்பா...'' - சிரித்துவிட்டு தன் கையை வைத்து அளந்து பார்த்தவர் ``ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டைல்ல பூ அளப்பாங்க. 12-ல இருந்து 14 சென்டிமீட்டர் வரை இருக்கலாம். அப்படின்னா அரை மீட்டர் இருக்கலாம்.''
சாம்ஸ்: ``இது அவங்கவங்க கையைப் பொறுத்து மாறும். இப்ப முக்கால் கைதான் அளக்குறாங்க. நான் எல்லாம் பூக்கடை நடத்தினா, அந்தப் பூக்கடை போண்டிதான்னு சொல்வாங்க. ஏன்னா, எனக்கு கை ரொம்ம்ம்ம்ப நீளம். இதுல ஒரு மொழம் அளந்து கொடுத்தேன்னா, பூக்கடை ஓனர் ஒரே வாரத்துல காணாமல் போயிடுவார். ஒரு மொழம் அரை மீட்டர் அல்லது 50 சென்டிமீட்டர்னு வெச்சுக்கலாம். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சதால்தான் எனக்கு இவ்வளவு அறிவு'' எனப் பெருமிதமாகச் சிரிக்கிறார்.
``மன்னார்குடி ஊரின் ஸ்பெஷல் என்ன?''
விடை: ராஜகோபால சுவாமி கோயில்.
திருநாவுக்கரசர்: கேள்வியை இன்னொரு முறை கேட்டு ரசித்தவர், ``அங்கே ராஜகோபால சுவாமி ஆலயம் ரொம்ப ஃபேமஸ். மன்னார்குடினு சொன்னதும் எனக்கு 1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் நாங்க வேலைசெய்ததுதான் ஞாபகம் வருது. தி.மு.க சார்பில் நின்ற பாலகிருஷ்ணனை ஆதரித்து பல கல்லூரி மாணவர்களைக் கூட்டிச் சென்று பிரசாரம் செய்தோம். அது எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். பட், நீங்க எதிர்பார்க்கிற மாதிரி வேற எதுவும் ஸ்பெஷல் இல்லையே தம்பி'' என வெடித்துச் சிரிக்கிறார்.
அரோல் கொரேலி: ``அங்கே ரெண்டு ஸ்பெஷல் இருக்கு. ஒண்ணு, அங்கே இருக்கும் பெரிய கோயில். நான் சி.ஏ படிச்சுட்டு வேலை செஞ்சுட்டு இருக்கும் போது அந்த ஈஸ்வரன் கோயிலுக்குப் போனேன். இன்னொண்ணு, மன்னார்குடி ஈஸ்வரன்னு ஒரு பெரிய மிருதங்க வித்வான் இருக்கார். சரி...எவ்வளவோ ஊர் இருக்கும்போது மன்னார்குடியில் என்ன ஸ்பெஷல்னு கேட்குறீங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா பிரதர்?''
நீலிமா ராணி: ``ஒரத்தநாட்டுல நிலக்கடலை ஸ்பெஷல். அந்த ஏரியா கிடையாது. ஆங்... பிடிச்சுட்டேன் ஒரு பெருமாள் கோயில்தான் இந்த ஏரியா ஸ்பெஷல். ராஜகோபுரம் பெருசா இருக்கும். அங்கே அரிசிப்பொரியும் ஃபேமஸ். எங்க வீட்டுக்காரர் அந்தப் பக்கம் போகும்போது வாங்கிக் கொடுத்தார். தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் பண்ணதுக்கு இப்பதான் உருப்படியா ஒரு பதில் சொல்லியிருக்கேன். அப்புறம் சார்... தயவுசெஞ்சு எந்த பொலிட்டிக்கல் கேள்வியும் கேட்டுடாதீங்க. அதுதான் நமக்கு நல்லது.''
சாம்ஸ்: ``சசிகலா மேடம்தான் ஸ்பெஷல். அவரைப் பற்றி பத்திரிகையில் எழுதும்போது, `மன்னார்குடி வகையறாக்கள்'னுதான் எழுதுவாங்க. அதுதான் ஞாபகம் வருது. மன்னார்குடி, தஞ்சை பக்கம் இருக்கு. வேற என்ன ஸ்பெஷல்... தெரியலையே! உங்க ஒரிஜினல் பதில் என்னன்னு சொல்லிடுங்க?''

``இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கிய இசையமைப்பாளர் யார்?''
விடை: பாப் டைலன்.
திருநாவுக்கரசர்: ``போன கேள்வியில் `மன்னார்குடின்னா சசிகலா, நடராஜன்தான் ஸ்பெஷல்'னு சொல்வேன்னுதானே நீங்க எதிர்பார்த்தீங்க. ஐ நோ!'' மீண்டும் சிரிக்கிறார். ``சரி, இந்தக் கேள்விக்கு வருவோம். இவர் மியூஸிக் டைரக்டர். அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் பாப் தில்லன். நாம பாப் டைலன்னு சொல்வோம். அவங்க தில்லன்னு சொல்வாங்க.''
அரோல் கொரேலி: ``பாப் டைலன் நோபலுக்கு நாமினேட் ஆனார்னு படிச்சேன். நோபல் பரிசு கிடைச்சுடுச்சா? சூப்பர்! அவர் அமெரிக்கா ஃபோக் பாடல்களைப் பிரபலமாக இசையமைத்தவர். கவிதைகளும் எழுதுவார்.''
நீலிமா ராணி: ``இலக்கியம்னா லிட்ரேச்சர்தானே? இப்பகூட சமீபத்துல படிச்சேனே! அமெரிக்காவைச் சேர்ந்த ஒருத்தருக்குக் கொடுத்தாங்க. அய்யோ... அவர் பேரு ஞாபகம் வர மாட்டேங்குதே! ஆனா, முகம் ஞாபகத்துல இருக்கு. வெள்ளை கலர் டிரெஸ் போட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். டிரெஸ் கலர் எல்லாம் சரியா சொல்லிட்டேன்ல... மார்க் குடுத்துடுங்க ப்ளீஸ்!''
சாம்ஸ்: ``திருதிருவென விழித்தவர். இந்தப் பதிலை எழுதுங்க பாஸ்'' என்றார். ``இந்திய நாட்டைச் சேர்ந்தவங்க வாங்கி இருந்தாங்கன்னா, ஞாபகம் வெச்சிருப்பேன். வேற தேசத்துல யாரு வாங்கினா எனக்கு என்ன சார்? என் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய கேள்வி சார் இது''- எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!