
அக்கட தேசத்து அழகிகள்!

சினிமா ரசிகர்களை தித்திக்க வைக்கும் திரிலோக சுந்தரிகள்!
மல்லுவுட் பாரீஸ் லஷ்மி
நிஜமாகவே பாரீஸில் பிறந்த பாலாடைக்கட்டி. குடும்பத்தில் அனைவருமே இசைக்கலைஞர்கள். அம்மணி கிளாசிக்கல், ஹிப் ஹாப், பாலே, ஜாஸ் என எக்கச்சக்க இசை வகைகளில் பட்டையைக் கிளப்புவார். இந்தியாவில் ஏகப்பட்ட கோயில்களில் நாட்டியாஞ்சலி நடத்தியிருக்கிறார். அப்போது இந்திய மண் மிகவும் பிடித்துவிட, இங்கேயே செட்டிலாகிவிட்டார். ‘பிக் பி', ‘பெங்களூர் டேஸ்’, ‘சால்ட் மாங்கோ ட்ரீ’, ‘ஒலாப்பிப்பீ’ என இப்போது இவர் இல்லாமல் படங்கள் ரிலீஸ் ஆவதே இல்லை. சொந்தமாக வைக்கத்தில் நாட்டியப்பள்ளி வைத்திருக்கிறார். # சகலகலாவல்லிதான்!
டோலிவுட் வாமிகா ஹப்பி

பஞ்சாபில் பிறந்த கோதுமை அல்வா. சின்ன வயதிலிருந்தே நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை, லட்சியம் எல்லாம். எட்டு வயதிலேயே சின்னத்திரையில் எட்டு வைத்தார். அதன் பின் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க கபக்கென கேட்ச் செய்து ‘ஜப் வீ மெட்’, ‘பிட்டூ பாஸ்’, ‘இஷ்க் பிராண்டி’ என லைன் போட்டுத் திறமை காட்டினார். உடனே கொத்திக்கொண்டு பறந்தார்கள் மனவாடுகள். அங்கிருந்து தங்கத் தமிழ்நாட்டுப் பிரவேசம். செல்வராகவனின் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் வாமிகாதான் நாயகி. இவரின் லேட்டஸ்ட் ரவுண்ட் மலையாளத்தில். கன்னடத்தை மட்டும் ஏன் பாக்கி வைக்கணும்? # எங்கிருந்தாலும் வாழ்க!
சாண்டல்வுட் ஐஸ்வர்யா நாக்

பெங்களூரில் பிறந்த பெப்பரோனி பீட்ஸா. மாடலாகக் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் முதன்முதலில் ஹீரோயின் ஆனபோது வயது 16. ஆனாலும் வயதுக்கு மீறிய திறமை என முதல் படத்திலேயே பாராட்டு மழை குவிய, சூடு பிடித்தது மார்க்கெட். அதன் பின் ஆண்டுக்கு இரண்டு படங்கள் என்று வரிசையாக 12 படங்களில் மளமளவென நடித்தார். ஒரு சின்ன பிரேக். அம்மணியின் ரிட்டன்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். # நாங்களும்தான்!
- நித்திஷ்