7.8.2018 மாலை... காவேரி மருத்துவமனை அமைந்திருக்கும் சாலை, மக்களாலும், ``எழுந்து வா...தலைவா" என்கிற கோஷத்தாலும் சூழ்ந்திருந்தது. சென்னையின் மற்றப் பகுதி முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என மக்கள் தங்கள் இல்லங்களை நோக்கி விரைகின்றன, பெட்ரோல் பங்குகளில் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருந்தன. நெட்வொர்க் சிக்னல்கள் கிடைக்கவில்லையென்றாலும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் கேமாராக்களைவிட மொபைல் கேமாராக்கள் சூழ்நிலையை நேரலை செய்தன. 6.30 மணியளவில் அவர் மறைவு குறித்து வந்த செய்தியை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஒரு சகாப்தம் முடிந்த அந்தத் தருணத்தை உண்மைதான் என நம்பும் முன் கலைஞர் மிகவும் நேசித்த அண்ணாவின் நினைவிடம் அருகில் இடமில்லை என்ற செய்தியும் வர தொண்டர்களின் உணர்ச்சிமிகுதிக்கு சேதமாகின பேரிகார்டுகள். கருணாநிதி என்னும் ஒற்றை உணர்வால் கடந்த இரவு அது.
போராட்டக்காரன் அவ்வளவு எளிதில் ஓயமாட்டான். தனக்கு இதயம் தந்த தன் தலைவன் மடியிலேயே துயில சட்டக் கதவுகளை தட்டினார். காழ்ப்புஉணர்ச்சி அரசியலின் முகத்திரையைக் கிழித்தெரிந்தே தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டான் உன்னத மிக்க மக்கள் தலைவன். இவரது வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்தால் ஏற்ற இறக்கங்கள், பற்பல விமர்சனங்கள், சேது சமுத்திர திட்ட விஷயத்தில் சர்ச்சைகள் எனப் பல விஷயங்கள் இருக்கும். அத்தனைக்கும் மேல் தமிழ் நாட்டுக்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியவர். இவரால் பயனடையாதவர்கள் மிகக்குறைவே.
சினிமாக்காரர்கள் பலரும் மதிக்கும் ஓர் அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க சினிமாவை நேர்த்தியாகப் பயன்படுத்தியவர் கருணாநிதி. தான் எழுதிய நாடகங்களின் மூலம் பெரியார், அண்ணா கொள்கைகளை பரப்பி வந்த கதாசிரியர், வசனகர்த்தா எனப் பெயர் பெற்றிருந்தவர். நடிகர்வேள் தயாரித்த `தூக்குமேடை' நாடகத்தில் தன் பெயரை அறிஞர் கருணாநிதி என்று விளம்பரம் செய்ய, அதை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதன்பொருட்டே `அறிஞர்' மாற்றப்பட்டு `கலைஞர்’ கருணாநிதி என அச்சிடப்பட்டது. `நடிகவேள்' எம்.ஆர்.ராதா கருணாநிதியை கலைஞர் என அழைத்தார். இவரின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அந்த பயோபிக் எவ்வளவு உணர்வுபூர்வமிக்கதாய் இருக்கும் என எண்ணிப் பார்த்தால் அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவர் சந்தித்த சூழல்களும் மனிதர்களும் ஆச்சர்யமிக்கவை. அவ்வளவு காட்சிகள் இருக்கின்றன.
ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் எனத் தமிழக சட்டமன்றத்தை ஆண்டு வந்த நேரம் அது. சிறு வயதிலேயே மாணவன் நேசன் பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த 8 பக்க கையெழுத்து பத்திரிகையை தானே திருவாரூர் விதிகளில் விற்றார். பின்பு அது முரசொலி வாரப் பத்திரிகையாக மாறியது. அதைத் தொடர்ந்து ஆரம்பித்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் பின்னர் தி.மு.கவின் மாணவர் மன்றம் ஆனது. பேரறிஞர் அண்ணாவின் `திராவிடநாடு' கட்டுரை அனுப்பி அதன் வழியே அண்ணாவைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார். இவையனைத்தும் நடந்து முடியும்போது கலைஞருக்கு 18 வயது முடிவதற்குள் நடந்தது. பின்னாளில் அண்ணாவுக்குத் துணையாக நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் உருமாறினார் கலைஞர்.
திரைக்கதையாசிரியராக கோவை ஜூபிடர் பிக்சர்ஸில் சேர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம்.ஜி ராமச்சந்திரனுடன் நட்பு. அங்கே வசனம் எழுதிய `ராஜகுமாரி’ (எம்.ஜி.ஆர் முன்னணி வேடமேற்ற முதல் படம்) வெற்றிபெற, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் எழுத்தாளார் வேலைக்குச் சேர்ந்து எழுதுகிறார். அங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த கணேசன் என்ற இளைஞனுடன் நட்பு. ஏவிஎம் நிறுவனத்துக்கு தான் எழுதிய `பராசக்தி’ நாடகத்தைப் படமாக்க திரைக்கதை வசனம் எழுதித் தந்தார். அந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நட்பை மறக்காமல் அந்தப் படத்தில் கணேசனைப் பரிந்துரை செய்தார். பின்னர் அவர் சிவாஜி கணேசன் என்ற மதிப்பிட முடியா மகத்தான நடிகராகிறார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்தில் ஈ.வே.ராமசாமி (பெரியார்) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திராவிட கழகத்திலிருந்து விலகி சி.என்.அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார். இதில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் கருணாநிதி. இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு தலைமையேற்று, போக்குவரத்தை அரசுடைமையாக்கி, சினிமா மூலம் கழகத்தையும், கட்சிக் கொள்கைகளையும் பரப்பி, மதராஸ் மாநிலத்தை `தமிழ்நாடு' என உருவெடுக்கச் செய்தனர்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்கிறார். மூன்றே வருடங்களில் கட்சி உடைகிறது. நட்பு பாராட்டிய எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிக்கிறார். தனது மற்றொரு கண்ணான பெரியார் மறைவு. அரசு பதவி வகித்திடாத பெரியாருக்கு அரசு மரியாதை தருவதில் சட்டச் சிக்கல் இருந்தது; தலைமைச் செயலாளருடன் வாதாடுகிறார். ``ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை. அவருக்கு அரசு மரியாதை தர வேண்டும். `ஃபாதர் ஆஃப் அவர் நேஷன்'னு மகாத்மா காந்திக்கு எப்படி அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. அதுபோல் எடுத்துக் கொள்ளுங்கள்; பிகாஸ் பெரியார் இஸ் ஃபாதர் ஆஃப் தமிழ்நாடு’' என கெத்தாகச் சொல்லி ராஜாஜி ஹாலில் ராணுவ குண்டுகளில் பெரியாரின் மகத்துவம் முழங்கச் செய்தார்.
சிறிது காலத்தில் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் மீண்டும் ஆட்சியமைத்து வந்தார். அரியணை ஏற முடியாமல் தமிழகத்தில் எதிர்க் கட்சியாகவும், அதிமுகவின் எதிரிக் கட்சியாகவும் தி.மு.க இருந்து வந்தது. எம்.ஜி.ஆர் மறைவால் உடைந்தது அதிமுக. ஜெயலலலிதா தலைமையேற்க, ராஜிவ் காந்தி தி.மு.கவை எதிர்த்து பிரசாரம் செய்து மாபெரும் வெற்றியை அடைந்தார்கள். மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும், பொறுப்பு வகிக்கும் அரசியல் சாதுர்யம் தி.மு.க ஆட்சியை பலத் திட்டங்கள் கொண்டு வரும் ஆட்சியாக மாற்றியது. உலக மயமாக்கல் கொள்கையின் ஆரம்பத்திலிருந்தே எல்காட், சிப்காட், சிட்கோ எனப் பல வாரியங்களைத் தொடங்கி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டார். 90களின் ஆரம்பத்திலிருந்து திராவிடக் கட்சிகள் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தன. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது போலீஸாரால் அதிரடியாக கைதும் செய்யப்பட்டார். கட்டடக் கலையின் காதலனாக இருந்த கருணாநிதி மக்களுக்கு அத்தியாவசியமான சாலைகள், மேம்பாலங்கள் கட்டினார். சமூகம், கலை, இலக்கியச் சான்றோர்களுக்கு மணி மண்டபம், சிலைகள், நினைவுச் சின்னங்கள் நிறுவினார். 80 வருட அரசியல், கலைப் பயணத்தில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்திருந்தார், தனித்த ஆளுமையாகவே இருந்தார்.
1930களில் அவர் தொடங்கிய கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, இன்று ஃபேஸ்புக், ட்விட்டர் வரை கருணாநிதி தன்னைத் தகவமைத்துக் கொண்டதே அவரை பெரும்பாலான இளைஞர்களிடம் சேர்த்தது. பத்திரிகை, மேடைநாடகங்கள், பிளாக் அண்ட் வொயிட் திரைப்படங்கள், கலர் திரைப்படங்கள் என எங்கும் நிறைந்திருந்த அவரின் எழுத்துகள் தொலைக்காட்சித் தொடர்கள், யூ-டியூப் வரை வந்து சேர்ந்திருக்கிறது. 2009ல் ஈழப்போர் விவகாரம், அதற்கு முன் சேது சமுத்திரத் திட்ட ராமர் விவகாரம், எம்.ஜி.ஆர் புகாரால் ஏற்பட்ட சர்காரிய கமிஷன், குடும்ப அரசியல் என அவர் சந்தித்த எதிர்ப்பலைகளும் ஏராளம். நாடு போற்ற வாழ்ந்த மக்களின் மன்னாய் மறைந்த கருணாநிதியின் பயோபிக் சாகசம் நிறைந்த ஒரு அட்வெஞ்சராக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்து எடுக்க வேண்டும்.
கருணாநிதியின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் அதில் யார் நடிக்க வேண்டும் என இந்த சர்வே லின்க்கை க்ளிக் செய்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்...