Published:Updated:

நான் அகதி! - 13

நான் அகதி! - 13
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! - 13

நான் அகதி! - 13

வரலாற்றில் அகதிகளும் அகதிகளின் வரலாறும்

`என் கணவர் வீட்டில் இல்லை, வெளியில் போயிருக்கிறார்’ என்று சொல்லி, கதவை வேகமாக மூடிவிட

நான் அகதி! - 13

முயன்றார் அம்மா. ஆனால், அந்த இருவரும் கேட்பதாக இல்லை. கதவை அழுத்தித் திறந்து உள்ளே நுழைந்தார்கள். மொத்தம் இரண்டு பேர். ஏற்கெனவே சிறியதாக இருந்த எங்கள் வரவேற்பறையில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்துகொண்டார்கள். அவர்களை வெளியில் அனுப்புவது சாத்தியமில்லை என்பது புரிந்தது. வீடு திரும்பிய அப்பா அந்த இரு அதிகாரிகளையும் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டார். நான் குளியலறைக்கு ஓடிச்சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தேன். அம்மாவும் அழுதுகொண்டுதான் இருந்தார். ஆனால், என்னை வெளியில் வரச் சொல்லி அப்பாவுக்கு விடைகொடுத்து அனுப்பச் சொன்னார். நான் அழுகையுடன் முத்தமிட்டு அப்பாவை அனுப்பிவைத்தேன். அப்பா அழாமல் இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.

நான் அகதி! - 13

இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். மீண்டும் கதவு தட்டும் சத்தம். இந்த முறையும் இரண்டு பேர். அம்மாவை அழைத்துப் போக வந்திருக்கிறார்களாம். ``அப்படியானால் மகள் மட்டும் தனியாக இருக்கவேண்டுமா?’’ அம்மா கேட்டதற்கு அவர்களிடம் பதிலில்லை. என்னை என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை. இந்த வீட்டிலிருந்து ஒரு பெண்ணை அழைத்து வரவேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்கான உத்தரவாம். நானும் வருகிறேன் என்று தீர்மானமாக அவர்களிடம் சொன்னேன். என் அப்பாவும் அம்மாவும் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே நானும் இருந்துவிடுகிறேன் என்று சொன்னேன். வேறு வழியின்றி அவர்கள் என்னையும் அழைத்துப் போய்விட்டார்கள்.

மே 1940-ல் நடந்த இந்தச் சம்பவத்தை 55 ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்தார் அப்போது சிறுமியாக இருந்த ரெனேட். ஒரு யூதராக இருப்பது என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு முன்பாகவே அதற்கான தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது? லட்சக்கணக்கான யூதர்கள் அனுபவித்த துயரமல்லவா இது? பாவம் குழந்தை என்று நாஜிக்கள் எப்போதாவது தயங்கியிருக்கிறார்களா என்ன? எனில், எதற்காக ரெனேட்டைக் குறிப்பாக இங்கே நாம் கவனிக்கவேண்டும்? காரணம் ரெனேட்டும் அவருடைய குடும்பமும் கைது செய்யப்பட்டது ஜெர்மனியில் அல்ல, பிரிட்டனில். ரெனேட்டின் வீட்டுக் கதவைத் தட்டியவர்கள் நாஜிக்கள் அல்லர், பிரிட்டிஷ்  உளவு அதிகாரிகள்.

நான் அகதி! - 13
நான் அகதி! - 13

1940-வாக்கில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து தப்பி பிரிட்டனில் தஞ்சம் புகுந்திருந்தனர். ஜெர்மனியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சிதறடிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் சிலர் வணிகர்கள், சிலர் கலைஞர்கள், சிலர் செல்வந்தர்கள், சிலர் வீட்டு வேலை செய்துவந்த ஏழைகள்.  ஹிட்லரின் யூத வெறுப்பைக் கண்டு அஞ்சி ரெனேட்டின் குடும்பத்தினரைப் போல் அவர்கள் தப்பியோடி வந்திருந்தனர்.  ஜெர்மானியர்கள் போக, ஆஸ்திரியர்களும் இருந்தார்கள். ஹிட்லர் அந்நாட்டை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்குள்ள யூதர்களும் வேட்டையாடப்பட்டபோது ஆஸ்திரிய யூதர்கள் அடைக்கலம் நாடி பிரிட்டன் வந்திருந்தனர். அனுமதி பெற்று முறைப்படி கப்பலேறி வந்தவர்கள் ஒரு பக்கம். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பிரிட்டனில் குடியேறியவர்கள் இன்னொரு பக்கம். இந்த இரண்டும் சாத்தியமில்லை என்று நினைத்தவர்கள், உயிர்போனால் போய்த் தொலையட்டும் என்று துணிந்து, முட்கம்பி வேலிகளுக்குள் படுத்தபடியே ஊர்ந்துவந்திருந்தனர். 1942 வரை யூதர்களின் பிரிட்டன் வருகை தொடர்ந்துகொண்டிருந்தது. ஒரு குறிப்பின்படி கிட்டத்தட்ட 55,000 ஜெர்மானிய, ஆஸ்திரிய யூதர்கள் தங்களை அகதிகள் என்று பிரிட்டனில் பதிவு செய்துகொண்டார்கள். இவர்களில் 28,000 அகதிகள் பிரிட்டிஷ் அரசால் இழுத்துச் செல்லப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டபோது அவர்கள் அதிர்ந்துபோயினர்.

``நாங்கள் செய்த தவறு என்ன? ஹிட்லரிடம் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் ஓடிவந்தோம். அங்கே விடுதலைக் காற்று இல்லை என்பதால்தான் கடல்கடந்து இங்கே வந்தோம். நண்பர்களை, உறவினர்களை, குழந்தைகளைப் பறிகொடுத்த அதிர்ச்சியைத் தேக்கிவைத்தபடிதான் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பிரிட்டன் வந்துசேர்ந்தபிறகும் இன்னமும்கூட இரவில் அச்சமின்றி எங்களால் உறங்கமுடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? தலை குனிந்தபடியேதான் நாங்கள் சாலைகளில் நடக்கின்றோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொருமுறை பூட்ஸ் கால்கள் எங்களை நோக்கி விரைந்துவரும்போதும் நாங்கள் தன்னிச்சையாக நின்று, பின்வாங்குவது உங்களுக்குத் தெரியுமா? நண்பர்களே, எங்கள் உடலில் பாயும் ரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் அச்சம் குடிகொண்டிருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கடிக்கும் ஆற்றல் விடுதலைக்கு மட்டுமே இருக்கிறது. அதைத்தேடித்தான் பிரிட்டன் வந்தோம். இங்கும் ஏன் எங்கள் வீட்டின் கதவுகள் தட்டப்படவேண்டும்? இங்கும் ஏன் நாங்கள் கைது செய்யப்படவேண்டும்?  யூதர் என்பதற்காக அங்கே வேட்டையாடப்பட்டோம். இங்கு வேட்டையாடப்படுவது அகதி என்பதற்காகவா? எனில், சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான வேறுபாடு இதுதானா?’’

நான் அகதி! - 13

அமெரிக்காவிலும் இதுதான் நடந்தது. 7 டிசம்பர் 1941 அன்று பெர்ல் துறைமுகத்திலுள்ள (ஹவாய்) அமெரிக்கக் கடற்படைத் தளத்தின்மீது தாக்குதல் தொடுத்தது ஜப்பான். இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதுவரை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்த அமெரிக்காவை இந்தத் தாக்குதல் போருக்கு இழுத்து வந்தது. ஜப்பான்மீதான போர்ப் பிரகடனத்தை மறுநாளே வாசித்தார் அமெரிக்க  அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட். ஆனால் அதற்கும் முன்பே, அதாவது பெர்ல் துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்துக்குள் அமெரிக்காவில் வசித்துவந்த  1,200 ஜப்பானியர்களை எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர். போர் அறிவிப்புக்குப் பிறகு வேட்டை தீவிரமடைந்தது. ஒரு சில மாதங்களுக்குள் 1,10,000 ஜப்பானியர்கள் தடுப்புக்காவலின்கீழ் கொண்டுவரப்பட்டனர். அனுமதியின்றித் தங்கியிருந்த ஜப்பானியர்கள் மட்டுமல்ல, முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்று அமெரிக்கக் குடிமக்களாகவே மாறிவிட்ட ஜப்பானியர்களையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை.

இந்த ஜப்பானியர்கள்மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். ``இன்ன காரணத்தால் உங்களை அழைத்துச் செல்கிறோம்’’ என்று எதுவும் சொல்லப்படவில்லை. ``எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது, கிளம்பி வா’’ என்று சொல்லி இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. வண்டிகளில் கும்பல் கும்பலாக ஏற்றி அவர்களுடைய இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவில் தள்ளி அமைக்கப்பட்டிருந்த பெரிய தடுப்புக்காவல் முகாமில் கொண்டுசென்று மணல்போல் சரித்து, உதிர்த்துவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்துசென்றார்கள்.

முகாமுக்கு வெளியில் ஆயுதம் தரித்த அமெரிக்க வீரர்கள் காவல் காக்க ஆரம்பித்தார்கள். இரவு வேளைகளில் ராணுவ வீரர்கள் கவனமாக ரோந்து சென்றனர். கைதிகளின் அசைவுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. உணவுக்கு ஒரு பெரிய வரிசை இருந்தது. குளிப்பதற்கு ஒரு வரிசை. குடிநீருக்கு இன்னொன்று. அதிகாரிகளின் பார்வைபடாமல் எதுவொன்றையும் ஒருவரும் செய்துவிடமுடியாது. அந்த முகாமில் எரிந்துகொண்டிருந்த  அடுப்பு, அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் வரையறைத்து

வைத்துள்ள விதிமுறைகளையும் சேர்த்தே எரித்துப் பொசுக்கியது. ``எதற்காக இந்தத் தண்டனை என்று பல ஜப்பானியர்களுக்குத் தெரியவில்லை. எதற்காக இரும்பு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறோம்? எதற்காக கிரிமினல்களைப் போல் ஒவ்வொரு விநாடியும் கண்காணிக்கப்படுகிறோம்? நாங்கள் இந்த மண்ணில் உழைத்துச் சம்பாதித்துச் சேர்த்த உடைமைகளை விட்டு ஏன் நாங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறோம்? எங்கள் தவறுதான் என்ன?’’ பிரிட்டனில் யூதர்கள் கேட்ட அதே கேள்வி.

ஒப்பீட்டளவில் பிரிட்டனின் யூதர்கள் அமெரிக்காவின் ஜப்பானியர்களைக் காட்டிலும் பாக்கியசாலிகள்.  மேற்கூரை இல்லாத திறந்தவெளித் தடுப்புகளில் பல ஜப்பானியர்கள் அடைபட்டுக்கிடந்தனர். குதிரை லாயங்களில் பல கைதிகள் படுத்துத் தூங்கவேண்டியிருந்தது. கழிவுகள் கொட்டிவைக்கும் கிடங்குகளில் கும்பல் கும்பலாக ஜப்பானியர்கள் நெருக்கியடித்து வாழநேர்ந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பிவைத்தனர். கைதிகள் கட்டாய உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கடினமான, ஆபத்தான பணிகளில் ஈடுபட்ட பல ஜப்பானியர்கள் சரிந்து கீழே விழுந்தபோது அவர்களுடைய உடல்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு கைதிகளை அவர்களிடத்தில் அமர்த்தினார்கள் அமெரிக்கர்கள். தற்கொலை முயற்சிகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன.

நான் அகதி! - 13

ஹிகோஜி டக்கியூச்சி என்பவர் முகாமை விட்டுச் சற்று தள்ளி அமைந்திருந்த வனப்பகுதிக்குள் நுழைந்து விறகுகளைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது அவர் உடலில் குண்டு பாய்ந்தது. உடா என்னும் 63 வயது ஜப்பானியர் தன்னுடைய முகாமுக்கு அருகிலிருந்த வேறொரு முகாமுக்குச் செல்ல முயன்றபோது ஓர் அமெரிக்க வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ``அவர் தப்பிப்போகிறாரோ என்று அஞ்சி சுட்டுவிட்டேன்’’ என்று பதற்றமின்றி பதிலளித்தார் அந்த வீரர். இந்த அச்சுறுத்தும் கொடுஞ்சூழலால் பல ஜப்பானியர்கள் மனச்சிதைவு நோய்க்கு உள்ளானார்கள். நாற்பதுகளில் இருந்த இசிரோ ஷிமோடா மனப்பிறழ்வு கொண்டு இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போனார். அவர் உடல்நலம், மனநலம் சரியில்லாதவர் என்பது முகாமில் இருந்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சருகுபோல் உலர்ந்திருந்த அவரும்கூட `தப்பியோடிச்செல்ல முயன்றார்’ என்று சொல்லப்பட்டது.

முகாமில் அடைபட்டுக்கிடந்த ஜப்பானியர்களுள் 30,000 பேர் குழந்தைகள். ஹிட்லரின் வதைமுகாம்களுக்கும் அமெரிக்க முகாம்களுக்கும் வேறுபாடே இல்லை என்று ஒருவரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளுக்காக முகாமில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. நோட்டு, பென்சில்கூடக் கொடுக்காமல் வேண்டா வெறுப்பாக ஏதோ கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தது அமெரிக்கா. ஜப்பானியக் குழந்தைகளுக்குத் தேசப்பற்று ஊட்டும் வகையில், ``நான் அமெரிக்காவை நேசிக்கிறேன், இந்த மண்ணுக்காக உழைப்பேன், எந்தத் தப்புத் தண்டாவும் செய்யமாட்டேன்’’ என்பன போன்ற உறுதிமொழிகளை ஜப்பானியக் குழந்தைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அமெரிக்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்துவது அவர்களுடைய தினப்படி கடமையாக இருந்தது. ஜப்பானியக் குழந்தைகள் மெய்யான அமெரிக்கப் பற்றை வளர்த்துக்கொண்டுவருகிறார்களா என்பது கவனிக்கப்பட்டது.  அதே சமயம், வகுப்புகள் நடைபெறும் கட்டடத்தில் ஜன்னல்கள்  அதிகம்   இல்லாதவாறும்   பார்த்துக்கொண்டனர். குழந்தைகள்தாம் என்றாலும் ஜப்பானியர்கள் அல்லவா?

நான் அகதி! - 13

பிரிட்டனில் யூதர்களும் அமெரிக்காவில் ஜப்பானியர்களும் தடுப்புக்காவலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதற்குக் காரணம் ஒன்றுதான். ஹிட்லர் அடுத்து பிரிட்டன்மீது போர் தொடுக்கப்போகிறார் என்னும் செய்தி அங்கிருந்த யூதர்களைக் கைது செய்யப் போதுமானதாக இருந்தது. அமெரிக்காவிலிருந்த ஜப்பானியர்களைக் கைது செய்ததற்கு பெர்ல் துறைமுகத் தாக்குதல் மட்டுமே காரணம். இந்த இரு காரணங்களையும் ஆராய்ந்து பார்த்தால் கசப்பான, கோரமான ஓர் உண்மை வெளிப்படுகிறது.

``ஆயிரம் இருந்தாலும் யூதர்கள் ஜெர்மானியர்கள் இல்லையா? ஹிட்லர் படையெடுத்துவரும்போது அவர்கள் கட்சி மாறி ஹிட்லரை ஆதரித்து இங்கே ஓர் எழுச்சியையோ கலகத்தையோ நடத்தினால் என்னாகும்? ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் யூதர்களுக்கு ஜெர்மானிய தேசப்பற்று இருக்கத்தானே செய்யும்? அதை  அவர்களுடைய ரத்தத்திலிருந்து துடைத்து அழித்துவிடமுடியுமா என்ன? தவிரவும், இன்னொரு பெரும்  அபாயமும் இருக்கிறது. இந்த யூதர்களில் பலர் உளவாளிகளாகவும் இருக்கக்கூடும் அல்லவா?’’

 ``நீ முன்னால் போய் உளவறிந்து தகவல் கொடு, தோதான நேரம் வாய்க்கும்போது நான் வந்து தாக்குகிறேன்’’ என்று சொல்லி ஹிட்லரே ஏன் இவர்களை  அனுப்பி வைத்திருக்கக்கூடாது? ஜெர்மனியின் ராணுவத் திட்டமாகவும் இது இருக்கலாம் அல்லவா? வெளியில் யூதர்களை வெறுப்பதாகவும் கொல்வதாகவும் சொல்லிக்கொண்டு நாஜிக்கள் அவர்களோடு ரகசியக்கூட்டு வைத்திருக்கலாம் அல்லவா?

அமெரிக்காவின் சந்தேகமும் இதுதான். ஜப்பான் என்னுடைய கடற்படைத் தளத்தில் தாக்குதல் தொடுத்ததற்கு இங்கிருக்கும் ஜப்பானியர்களே காரணம் என்று நான் ஏன் சந்தேகப்படக்கூடாது?  ஜப்பான் என் எதிரி என்னும்போது ஜப்பானியர்களும் என் எதிரிகள்தானே? அவர்களை எப்படி என் சொந்த மண்ணில் நான் இனியும் அனுமதிக்கமுடியும்?  ஜப்பான் என்மீது போர் தொடுக்கும். ஆனால், நான் மட்டும் ஜப்பானியர்களிடம் அமைதி காக்கவேண்டுமா? ஏமாளிபோல் வந்தாரை வரவேற்று வாழ வைத்துக்கொண்டிருக்க வேண்டுமா?

நான் அகதி! - 13

பிரிட்டன் யூதர்களை நம்பமறுத்ததைப் போலவே அமெரிக்காவும் ஜப்பானியர்களை நம்ப மறுத்தது. அதனால்தான் யூதக் குழந்தைகளைக்கூடச் சந்தேகக் கண் கொண்டு அணுகினார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். ஜப்பானியக் குழந்தைகளின் சிறிய கரங்களில் அமெரிக்கக் கொடிகளைப் பலவந்தமாகத் திணித்தார்கள் அமெரிக்கர்கள். ஹிட்லரின் தவறுகளுக்கு யூதர்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜப்பான் அரசின் குற்றத்துக்கு ஜப்பானியர்கள் அனைவரையும் தண்டிக்கவேண்டும் என்று அமெரிக்கா நம்பியது.

அமெரிக்காவைத் தங்களுடைய தாய்நாடாக ஏற்று, தலைமுறை தலைமுறையாக அமெரிக்கர்களோடு அமெரிக்கர்களாக வளர்ந்து வாழ்ந்துவந்த ஜப்பானியர்களைத் திடீரென்று சந்தேகிக்க ஆரம்பித்தது அமெரிக்கா. ஹிட்லர் யூதர்களைத்தான் தேடித்தேடி அழித்துக்கொண்டிருந்தார். அவர்களுடைய உடலையும் உள்ளத்தையும்தான் வதைத்துக்கொண்டிருந்தார் என்று நன்கு தெரிந்திருந்தும், யூதர்களை ஹிட்லரின் உளவாளிகளாக  பிரிட்டனால்  பார்க்கமுடிந்தது.  ஹிட்லர் கொண்டிருந்த அணுகுமுறையும் இதுவேதான். யூதர்கள் அனைவரும் எதிரிகள் என்றுதான் அவரும் சொன்னார். அதையேதான் பிரிட்டனும் சொன்னது. ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட அமெரிக்காவும் ஹிட்லரின் கண்களால்தான் ஜப்பானியர்களைப் பார்த்தது. ஹிட்லரிடமிருந்தது இனவெறி என்றால் பிரிட்டனிடமும் அமெரிக்காவிடமும் இருந்ததும் அதே இனவெறிதான். ஹிட்லர் அளவுக்கு இந்த இரு நாடுகளின் இனவெறி தீவிரமாக வெளிப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

நான் அகதி! - 13

அகதிகளை அந்நியர்களாகப் பார்க்கும் போக்கு வரலாற்றில் நீண்டகாலமாகவே இருந்துவந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இன்றும் பல நாடுகள் இருக்கின்றன. காலமும் சூழலும் மட்டும்தான் மாறியிருக்கின்றன. அகதிகள் அனைவரும் துரோகிகள் அல்லது துரோகிகளாக மாறப்போகிறவர்கள் என்னும் கண்ணோட்டம் மாறவில்லை. அகதிகளைத் தடுப்புமுகாமில் அடைத்து வைக்கும் வழக்கம் மாறவில்லை. அகதிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் மாற்றமில்லை.  அகதிகள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும்
கூடத் தொடர்கின்றன.

``கவனம், குழந்தைகளும் சந்தேகத்துக்குரியவர்கள்தாம். முதியோரும் பெண்களும்கூட எந்நேரமும் அணிமாறலாம். நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மைப் போன்றவர்களில்லை அவர்கள். அவர்கள் அந்நியர்கள். அந்நியர்களால் நம்  நம்பிக்கையை என்றென்றும் வென்றெடுக்க முடியாது.  அந்நியர்களால் நம்மோடு ஒன்றுகலக்க முடியாது. அவர்கள் நம்முடைய பாரங்கள். அவர்களை இறக்கிவையுங்கள். அவர்கள் இல்லாதுபோனாலும் பிரச்னையில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுவே நமக்கெல்லாம் நல்லது.’’

- சொந்தங்கள் வருவார்கள்