
மா.பாண்டியராஜன்
“நான் அமெரிக்காவில் வேலை பார்க்கும் டாக்டர். எனக்கு அடிக்கடி மாடு முட்டுற மாதிரி, பாம்பு கொத்துற மாதிரி, ஒரு பொண்ணு அலறுகிற மாதிரி கனவுகள் வருது. இந்தக் கனவுகள் எதுக்காக வருதுனு தெரிஞ்சுக்க நான் இந்தியா போறேன். அதுக்கப்பறம் எனக்கு என்ன நடக்குதுன்னா...” - `காளி’ கதை சொல்ல ஆரம்பித்தார் விஜய் ஆண்டனி.

“உங்களுக்கு நடிக்க வராதுனு நீங்களே அடிக்கடி சொல்லுவீங்க. அப்போ உங்ககிட்டயிருந்து நடிப்பாற்றலுக்குத் தீனி போடறமாதிரியான படங்களை எதிர்பார்க்க முடியாதா?”
``நான் இசையமைப்பாளரா மட்டும் இருந்தப்போ எனக்கு மியூசிக் பண்ணத்தெரியாதுனு சொன்னேன். அது இளையராஜா சாரோட மியூசிக்கை கம்பேர் பண்ணிச் சொன்னது. இப்போ நடிக்க வராதுனு கமல் சார் நடிப்பை கம்பேர் பண்ணிச் சொல்றேன். நான் வேலை செய்யும் துறையில் எனக்கு ஜாம்பவானாக இருக்கிற ஒரு மனிதரை கம்பேர் பண்ணிச் சொல்லும்போது, அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். எப்போ நமக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறோமோ அப்புறம் கற்றுக்கொள்ள ஒண்ணும் இருக்காது.’’
“தொடர்ந்து உங்களுடைய படங்கள் நல்லா ஓடிக்கிட்டிருந்தது. `அண்ணாதுரை’ சரியா ஓடாதது வருத்தமா இருந்ததா?”
`` ‘அண்ணாதுரை’ சூப்பர்னு சொல்ல மாட்டேன். ஆனால், தப்பான படம் இல்லை. அந்தப் படம் எப்படி வரும்னு பிளான் பண்ணினோமோ அது மாதிரியேதான் எடுத்தோம். கிராமத்து மக்களுக்கு அந்தப் படம் பிடிச்சிருந்தது. அது அவங்களுக்காக எடுக்கப்பட்ட படம்னு சொல்லலாம்.’’

“அரசியல் விஷயங்களை முழுக்கப் பேசும் படத்தை எடுக்கிறதுல ஆர்வம் இருக்கா?”
``சமூகச் சேவை பண்றதுக்காக நான் நடிக்க வரலை. இப்போதைக்கு நான் பண்ற சேவையா நினைக்கிறது, கடன் வாங்கி, நகைகளை அடகு வெச்சுப் படம் எடுக்குற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டப்படாம இருக்கணும்னு கடுமையா உழைக்கிறேன். இதுதான் என்னால இப்போதைக்குப் பண்ண முடிஞ்ச சேவை. அரசியல் பேசுற முழு நீளப் படம் பண்றதுல எனக்கு எந்தத் தடையும் இல்லை. அப்படி ஒரு படம் எடுத்தால் அது யாருக்கும் நஷ்டம் வராதபடி இருக்கணும். அப்படி ஒரு கதை கிடைத்தால் நடிப்பேன்.’’
“ஒரு நடிகர் தயாரிப்பாளரா இருக்குறதுல என்னென்ன சிரமங்கள் இருக்கு?”
``ஒரு படத்தைத் தயாரிக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்ல முடியாது. விஷயங்கள் தெரிஞ்சா தைரியமா ஒரு படத்தைத் தயாரிக்கலாம். எல்லா வேலைகளிலும் கஷ்டங்கள் இருக்கிறமாதிரி இதுலேயும் கஷ்டங்கள் இருக்கு. அதையெல்லாம் சமாளிச்சுத்தான் பண்ணிட்டு இருக்கோம். அதைச் சமாளிக்கத் தெரியாதவங்க, வேலை செய்யத் தெரியாதவங்கனு அர்த்தம்.’’

“ ‘காளி’க்குப் பிறகு...?”
`‘ அடுத்து கணேஷா இயக்கத்தில் நான் போலீஸா நடிச்சிட்டு இருக்கிற ’திமிரு பிடிச்சவன்’. ஆகஸ்ட் மாசம் ரிலீஸுக்குப் பிளான் பண்ணிட்டிருக்கோம். அடுத்து ஆண்ட்ரூ இயக்கத்தில் ‘கொலைகாரன்’னு ஒரு படம் நடிச்சுட்டிருக்கேன். இன்னும் இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் எதுவும் ரிலீஸ் பண்ணலை. அப்பறம் ஆல்ரெடி நான் கமிட் பண்ணி வெச்சிருந்த ’திருடன்’ படத்திலும், ‘மூடர்கூடம்’ இயக்குநர் நவீனோட படத்திலும் நடிக்கப் போறேன்.’’
“தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த ஸ்டிரைக்கிற்கான காரணமும், அந்த ஸ்டிரைக் நடத்தப்பட்ட முறையும், அதற்குக் கிடைத்த முடிவும் ஒரு தயாரிப்பாளராக உங்களுக்குத் திருப்தியா?”
``ஸ்டிரைக் பண்றவங்களோட கோரிக்கைகள் நியாயமா இருந்துச்சு. ஏன்னா, எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரே வலிதானே. கிடைத்த முடிவுகள் எல்லாம் இன்னும் அறிவிப்புகளாத்தான் இருக்கு. அவை எல்லாம் நடைமுறைக்கு வரணும். உதாரணத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் ஆன்லைன் புக்கிங் சைட் ஆரம்பிக்கிறதா ஐடியா சொன்னாங்க. இப்போ இது தேவைப்படுற ஒண்ணு. அதே போல் பல திட்டங்கள் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் செயல்படுத்தினா தமிழ் சினிமா நல்லாயிருக்கும்.’’