
எம்.குணா - படங்கள்: ஆர்.எஸ்.ராஜா

‘காலா’ ரிலீஸ் இறுதிகட்ட வேலைகளில் செம பிஸியாக இருந்த பா.இரஞ்சித், ஹுமா குரேஷி பற்றிய எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தைப் பார்த்தேன் அந்தப் படத்தில நடிச்சிருந்த ஹுமா குரேஷியோட நடிப்பு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘காலா’ படத்தில் ரஜினியுடன் காதலி ‘சரினா’ங்கிற கேரக்டருக்கு யார் நடிச்சா நல்லாயிருக்கும்னு தமிழ், தெலுங்கு, இந்தின்னு எல்லா மொழிகளிலும் உள்ள நடிகைகளைப் பரிசீலிச்சோம். அப்போ நான் ஹுமா குரேஷியின் பெயரைச் சொன்னேன். உடனே தனுஷ் சார் செம உற்சாகமாகி, ‘சூப்பர் சாய்ஸ்’ன்னு பாராட்டினார்.

ஹூமாவின் விதவிதமான புகைப்படங்களை ரஜினி சாரிடம் காட்டினோம். அவருக்கும் பிடிச்சுது. ஓகே சொன்னார். சென்னைக்கு வரவழைச்சு ஹுமா குரேஷியிடம் பேசினோம். தனுஷின் நடிப்பை ரொம்பவே வியந்து பாராட்டினார் ஹூமா. ‘கபாலி’ படம் பற்றியும் அதில் ராதிகா ஆப்தேவின் கேரக்டர் தன்னைக் கவர்ந்தது குறித்தும் ரொம்பநேரம் பேசினார்.

‘காலா’ படத்தின் கதையையும் சரினா கதாபாத்திரம் பற்றியும் அவருக்கு விளக்கிச் சொன்னேன். ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார். 45 வயசுள்ள பெண்மணிதான் சரினா. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய பாத்திரம் அது.

ரஜினி சாருடன் ஒரு டூயட் பாடலும் ஹூமாவுக்கு உண்டு. பொதுவாக என் படங்களில் காதல் மெலடி பாடல்களுக்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகம். ‘அட்டகத்தி’யில் ‘ஆசை ஓர் புல்வெளி’, ‘மெட்ராஸ்’ படத்தில் ‘நான் நீ நாம்’, ‘கபாலி’யில் ‘மாயநதி’... இப்போ ‘காலா’வில் ‘கண்ணம்மா’ பாடலும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். கு.உமாதேவி அந்தப் பாடலை எழுதியுள்ளார்.

சென்னையிலும் மும்பையிலும் இருவர் தொடர்பான படப்பிடிப்புகளை 45 நாட்கள் நடத்தியிருக்கிறோம். சரினா உங்களை நிச்சயம் கவர்வாள்” என்கிறார் இரஞ்சித் புன்னகை யுடன்.
காத்திருக்கிறோம் கண்ணம்மா வுக்காக....