
இன்பாக்ஸ்

ரன்பீர்கபூருக்கும் அலியா பட்டுக்கும் காதல் என்று கொஞ்ச நாளாகவே பேச்சு இருந்தது. அதை உறுதி செய்திருக்கிறார் ரன்பீர். ‘‘இது எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. இது எங்கு போய் முடிகிறது எனப் பார்க்கவேண்டும். கொஞ்சம் டைம் கொடுங்க’’ என்று சொல்லி இருக்கிறார். புதுஜோடி புதுரூட்டு!

சுயம்வரமெல்லாம் முடித்து மீண்டும் சுறுசுறுப்பாகப் பட வேலைகளில் இறங்கிவிட்டார் ஆர்யா. அடுத்து ஞானவேல்ராஜா தயாரிக்க, ‘மௌனகுரு’ சாந்தகுமார் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ‘அறம்’ இயக்குநர் கோபி நயினாரின் அடுத்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெல்கம்பேக் மாப்ளே!

மலாலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலாவின் பயோபிக்கை ‘குல் மகாய்’ என்ற பெயரில் அம்ஜத்கான் இயக்கிவருகிறார். ‘குல் மகாய்’ என்ற புனைப்பெயரில் ‘தலிபான்கள் பிடியில் வாழ்க்கை’ என்று வலைப்பதிவில் தனது அனுபவங்களை எழுதினார், மலாலா. அதனால் படத்திற்கு அந்தப்பெயரையே வைத்திருக்கிறார்கள்! போராளியின் கதை

‘லா லா லேண்ட்’ படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் இப்போது அமெரிக்காவின் லேட்டஸ்ட் ஸ்வீட் ஹார்ட். இருக்காதா... ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தன் காதலர் ஜஸ்டின் தொராக்ஸை விட்டு விலகியவர், கலிபோர்னியா ரேடியோ நிகழ்ச்சியொன்றில் `பாய்ஃப்ரெண்ட் இல்லாமல் தவிக்கிறேன். தகுந்த ஆட்கள் என்னை அணுகவும். கன்டிஷன்ஸ் அப்ளை!’ என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பியி ருக்கிறார். தினமும் எக்கச்சக்க மெயில்கள், போன்கால்கள் வருகின்ற னவாம். அப்ளை பண்ணுங்கப்பா!
உலகெங்கும் கலவரமும் போரும் சூழ்ந்த நாடுகளில் ஐநா தன் வெவ்வேறு நாட்டு ராணுவத்தினரை அமைதிப்படைகளாக அனுப்பி நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்யும். கடந்த 70 ஆண்டுகளில் அப்படி அனுப்பிவைக்கப்பட்டு களத்தில் போராடி உயிர்நீத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 3737, இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் 163 பேர் என்று சமீபத்தில் அறிவித்துள்ளது ஐநா. உலக அளவில் மற்ற இராணுவங்களோடு ஒப்பிடும்போது இதுவே அதிகம். ராயல் சல்யூட்!

சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி இருக்கிறார். கையும் களவுமாகக் காவல்துறையில் சிக்கியதும் சூதாட்டம் நடந்ததை ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார். இதில் விளையாட்டு வீரர்கள் தொடர்பு இருக்கிறதா, வேறு யாரெல்லாம் இந்த வலைப்பின்னலில் இருக்கிறார்கள் என்று விசாரணை நடைபெற்றுவருகிறது. மறுபடியும் மொதல்லருந்தா!

தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் அபிஷேக் பச்சன். அனுராக் காஷ்யப்பின் அடுத்த படமான ‘மன்மர்ஸியான்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக், ஷூட்டிங் இடைவெளியில் சமீபத்தில் வெளியான தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்திருக்கிறார். ‘நிச்சயம் ஒரு படமாவது தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிப்பேன்! சினிமாவின் உண்மையான முகம் அங்கிருக்கிறது’ என்று இன்ஸ்டாவில் சொல்லியிருக்கிறார். நல்ல கதை உள்ளவர்கள் மும்பை ஜூஹுவுக்கு ஒரு எட்டு போய் வரலாம். பச்சன் ரெடி!

இந்தியாவின் வட்டெறிதல் சாம்பியன்களில் ஒருவரான விகாஸ் கவுடா, ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மைசூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் 6அடி9அங்குல உயரம்கொண்ட விகாஸ். அமெரிக்காவில் வளர்ந்தாலும் இந்தியாவுக்காகவே உலகெங்கும் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி, பதக்கங்கள் வென்றுகொடுத்தவர். 2014 காமன்வெல்த் போட்டிகளிலும், 2013 மற்றும் 2015 ஆசியப் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவின் பெருமை உயர்த்தியவர் விகாஸ். தாங்க்ஸ் விகாஸ்!

ராஜஸ்தானின் பரஸ்ரம்புரா என்ற கிராமத்தில் சமீபகாலமாக `நீர்த்திருடர்கள்’ அதிகரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பட்டால் வீட்டில் ட்ரம்களில் நிரப்பி வைத்திருக்கும் குடிநீரை இரவு நேரங்களில் பொதுமக்களே வீடுபுகுந்து திருடிச் செல்வதால் ஊரில் எல்லா ட்ரம்களுக்கும் பூட்டுப்போட்டிருக்கிறார்கள். இங்கேயும் நடக்கலாம்!