சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

விடிந்தும் விடியாத அதிகாலையில், ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸிடம் ஒரு முகவரியை விசாரிக்கும் கதையின் நாயகன், சற்று நேரத்தில், தான் ஒரு கொலை செய்துவிட்டதாக சரணடைகிறார். என்ன நடந்தது என விரிகிறது படம்.

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

சென்னை துப்புரவுத் தொழிலாளியான (டான்ஸ் மாஸ்டர் தினேஷ்) குமார், தனது தொழிலை மறைத்து, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள் பூங்கொடியைத் (மனிஷா) திருமணம் செய்துகொள்கிறார். தொடக்கத்தில் சென்னையின் கூவக்கரையோர வாழ்க்கைச்சூழல் பிடிக்காமல் முகம்சுளிக்கும் மனிஷா, கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சூழலை ஏற்றுக்கொள்கிறார். தான் கருத் தரித்திருப்பதை அறியவரும் அதேசமயம், தனது கணவன் ஒரு துப்புரவுத் தொழிலாளி என்பதையும் அறிகிறார். அங்கு தொடங்கும் பிரச்னை, அவர்களை எப்படி சுழற்றியடிக்கிறது என்பதே `ஒரு குப்பைக் கதை’.

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்



சென்னை கூவக்கரையோர மக்களின் வாழ்வியல், தமிழ்ப் படங்களில் அதிமாக காட்டப்படாத துப்பரவுத் தொழிலாளியின் கதாபாத்திரம் என வலுவான அடித்ததளம் கொண்ட கதை.  ஆனால், அந்த வாழ்க்கைப் பின்னணியை இன்னும் நுட்பமாக விவரித்திருந்தால், மிக முக்கியமான படமாக மாறியிருக்கும். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அடித்தட்டு மக்களின் அன்றாடங்களையும் அழுக்குச் சூழலையும் அழகாகப் பதிவுசெய்திருக்கிறது. இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளரும் இன்னும் படத்தை விறுவிறுப்பாக்கி யிருக்கலாம். அறிமுக நாயகன் (டான்ஸ் மாஸ்டர்) தினேஷ் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் ரியாக்‌ஷன்களில் கவனம் செலுத்தினால் நடிப்பிலும் கலக்கலாம் பாஸ். மனிஷா இன்னும்கூட உழைத்திருக்கலாம். யோகி பாபு, ஜார்ஜ் போன்றவர்கள் வாய்ப்பு கிடைத்த இடங்களில் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

பழைய கதைதான் என்றாலும், புதிய களத்தில் புதிய வாழ்வியல் சூழலில் சொல்ல முயற்சித்ததைப் பாராட்டலாம். அதேசமயம், ‘அப்படி ஒரு தவறை’ செய்ய நாயகியை உந்துகிற சமூக, பொருளாதார அழுத்தம், அவரின் வெள்ளந்தித்தனம் போன்றவை திரைக்கதையில் நுட்பமாகச் சொல்லப்படவில்லை. படத்தின் தலைப்பை இவ்வளவு நவீன, அரசியல், சூழல் புரிதலோடு வைத்திருக்கிற இயக்குநர் காளி ரங்கசாமி, அதைக் காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

‘கள்ளக்காதல்’ கொலைகள் மலிந்துவிட்ட சூழலில் மன்னிப்பின் அவசியம் பேசிய விதத்திற்காக, குப்பைக் கதைக்கு செவிகொடுக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு