
பஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்
மா.கா.பா ஆனந்தும் நிகிலா விமலும் புதுமணத் தம்பதிகள். குதூகலமாய் சென்றுகொண்டிருக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் புகுந்து கலர், கலராய்க் கும்மியடிக்கிறார் சென்றாயன். அது ஏன், எதற்கு, எப்படி என மாய யதார்த்தக் காரணம் சொல்கிறது இந்தப் `பஞ்சு மிட்டாய்’.

மா.கா.பா. சில காட்சிகளில் ரசிக்கவைத்தாலும், ஓவராகக் கத்திக் காதுகளை பஞ்சராக்குகிறார். அதிலும் சென்றாயனைப் போலவே சில காட்சிகளில் நடிக்கும்போது, நெளிய வேண்டியிருக்கிறது. கண்ணைப் பறிக்கும் கலர் கலர் ஆடைகளில் வந்து லந்து செய்யும் சென்றாயன் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் முகம் காட்டுகிறார். நிகிலா விமலும் சில காட்சிகளில் சிரிக்கவைக்கிறார்; சில காட்சிகளில் அலுப்பூட்டுகிறார்.பாண்டியராஜனுக்கு சிறிய கதாபாத்திரம்தான். கச்சிதமாய் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
தான் இயக்கிய `கலரு’, `தபேலா வாசித்த கழுதை’ குறும்படங்களை ஒன்றாய்க் குழப்பி இந்த பஞ்சு மிட்டாயைப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.மோகன். இரண்டு வெவ்வேறு குறும்படங்களை ஒரே படமாக்கியிருப்பது புத்திசாலித்தனமான யோசனைதான். ஆனால் அதை ரசிக்கும் விதத்தில் தராதது பஞ்சுமிட்டாயின் பலவீனம்.

படத்தின் கதை என்ன, ஏன் இதெல்லாம் நடக்கிறது என்பது படத்திலுள்ள நாயகனுக்கு தெரியும்போதுதான் பார்வையாளர்களுக்குத் தெரியவருகிறது. இந்தக் காரணமே இரண்டாம் பாதியில்தான் தெரிகிறது என்பதுதான் சலிப்பை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் ஃபேன்டசி, இரண்டாம் பாதியில் பிழியவைக்கும் சென்டிமென்ட் சோகம் இரண்டும் சேர்ந்து, இரண்டும்கெட்டான் உணர்வை ஏற்படுத்துகிறது. இடைப்பட்ட காட்சிகளில் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் இன்னும் இரண்டு தேக்கரண்டி அதிகம் சேர்த்திருந்தால், பஞ்சு மிட்டாயும் சிறப்பாக வந்திருக்கும்.
இயக்குநரின் புதுமுயற்சிக்கு முழு உதவி புரிந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராம சுதர்சன். மகேஷ் கே. தேவின் ஒளிப்பதிவில் புதுமையான கோணங்கள் ரசிக்க வைக்கின்றன. இமான் இசையில் ‘மை ஒய்ஃப் ரொம்ப பியூட்டிஃபுல்லு’, ‘எனக்கு மட்டும் ஏன்..’ பாடல்கள் ரசிக்கவைக்கின்றன.
புதுமையான முயற்சி; ஆனால் முழுமையாகாத முயற்சி!