
செகண்ட் இன்னிங்ஸ் செமயா இருக்கும்!
கடந்த வருடத்தைப்போல, இந்த வருடமும் பல நல்ல படங்கள் அறிமுக இயக்குநர்களிடமிருந்து வந்திருக்கின்றன. ஓர் இயக்குநருக்கு அவரது முதல் படத்தைவிட இரண்டாவது படம் மிக முக்கியமானது. இந்த வருடம் அறிமுகமாகி ஹிட் கொடுத்தவர்கள் கையில், இப்போது என்னென்ன படங்கள் இருக்கின்றன? அவர்களிடமே கேட்டோம்.

நெல்சன்: ‘கோலமாவு கோகிலா’ படத்தில் வுமன் சென்ட்ரிக் ஜானரை வித்தியாசமாக அணுகிய நெல்சன், இப்போது கமர்ஷியல் ஜானரைக் கையில் எடுத்திருக்கிறார்.
“கமர்ஷியல் படம்னா பக்கா மசாலா படமா இருக்கும்னு நினைக்காதீங்க. எல்லோரும் என்ஜாய் பண்ற மாதிரி ஃபேமிலி சென்டிமென்ட், காமெடினு கலவையா கதையை உருவாக்குறேன். என் முதல் படம் மாதிரி வுமன் சென்ட்ரிக் ஜானரா இல்லாம, இது ஹீரோவை மையப்படுத்திய படமா இருக்கும்!”

லெனின் பாரதி : வழக்கமான சினிமாத்தனங்கள் இல்லாமல், மேற்குத்தொடர்ச்சி மலையின் காற்றைப்போல இயற்கையின் இயல்பு மாறாமல் ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கியிருந்தார், லெனின் பாரதி.
“நான் இன்னும் `மேற்குத்தொடர்ச்சி மலை’ பட வேலைகளிலிருந்தே வெளியே வரலை. இந்தப் படத்தைப் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில இருக்கேன். அதை வெற்றிகரமா முடிச்சதுக்குப் பிறகுதான், அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்குவேன். மூணு ஸ்கிரிப்ட்ஸ் இருக்கு. அதில், எந்தக் கதையை என் இரண்டாவது படமா பண்ணுவேன்னு தெரியலை. சில தயாரிப்பாளர்கள் கதை கேட்டிருக்காங்க. ‘மேற்குத்தொடர்ச்சி மலை’, ’பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதனால, என் அடுத்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்... இப்படி வேறு தளங்களுக்குப் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு, தயாரிப்பாளர்கள்கிட்ட பேசணும்!”

சர்ஜூன்: ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்கள் மூலம் பிரபலமான சர்ஜூன், சத்யராஜ், வரலட்சுமி, கிஷோரை வைத்து ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கிவரும் சர்ஜூனிடம், அந்தப் படத்தின் அட்டேட்ஸ் கேட்டோம்.

“நயன்தாரா மேடத்தை வெச்சு ஹாரர் ஜானரில் இந்தப் படத்தை இயக்கிட்டிருக்கேன். அக்டோபர் மாத இறுதியில் ஷூட்டிங் முடியும். இந்த வருடக் கடைசியில படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். நயன்தாராவைத் தவிர, ‘மெட்ராஸ்’ கலையரசன், யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்காங்க. ஷூட்டிங் முழுக்க சென்னை, பொள்ளாச்சிப் பகுதிகளில்தான். என் முதல் படத்துக்கு ஒளிப்பதிவாளரா இருந்த சுதர்சனும், இசையமைப்பாளரா இருந்த சுந்தர மூர்த்தியும்தான் இந்தப் படத்துக்கும் வொர்க் பண்ணியிருக்காங்க.”

ஆறுமுகக்குமார்: ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதியையும், கெளதம் கார்த்திக்கையும் இணைத்து இயக்கிய ஆறுமுகக்குமார், தனது இரண்டாவது படத்தையும் விஜய் சேதுபதியை வைத்தே இயக்கவிருக்கிறார்.

“அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார், விஜய் சேதுபதி. அவருக்காக ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையை ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ படத்தைத் தயாரித்த நிறுவனம்தான், இந்தப் படத்தையும் தயாரிக்கவிருக்கிறாங்க. ஹீரோயின், மற்ற நடிகர் நடிகைகள், டெக்னிக்கல் டீம்... எல்லாமே பெரிய லெவல்ல இருக்கும்!”

ஜி.ஆர்.ஆதித்யா: மிஷ்கினின் கதை, திரைக்கதை, வசனத்தில் அவரின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிய படம், ‘சவரக்கத்தி.’ தற்போது தனது இரண்டாவது படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறார்.
“பெண் குழந்தைகளை எப்படி வளர்க்கணும், எவ்வளவு பத்திரமா பார்த்துக்கணும்னு சொல்ற படமா இது இருக்கும். தகப்பன்களின் போராட்டத்தைப் பேசுற படமாவும் இதை உருவாக்கணும்னு ஆசைப்படுறேன். ஸ்கிரிப்ட் ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. சீக்கிரமே ஷூட்டிங் கெளம்பிடுவோம்!”

தனா: பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸும், பாராதிராஜாவும் இணைந்து நடித்த ‘படைவீரன்’ படத்தை இயக்கிய தனா, தனது இரண்டாவது படத்தைக் கன்னடத்தில் எடுத்து முடித்திருக்கிறார்.
“கன்னடத்தில் களரியை மையமா வெச்சு ஒரு படம் எடுத்திருக்கேன். அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகிட்டிருக்கு. எழுத்தாளர் ஜெயமோகன் சார் கதை, வசனம் எழுதியிருக்கார். ‘ஆடுகளம்’ கிஷோர் நடிச்சிருக்கார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தைப் பண்றேன். ஸ்கிரிப்ட் வொர்க்ஸ் முடிஞ்சிருக்கு. ரெண்டு பெரிய ஹீரோக்களை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு. இந்தப் படம் ஒரு செம செலிபிரேஷன் மோடில் இருக்கும்.”

மு.மாறன்: அருள்நிதியை வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் மு.மாறன், தனது இரண்டாவது படத்தை உதயநிதியை வைத்து இயக்கவிருக்கிறார்.
“இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்தான். ஆனால், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா இருக்கும். மிஷ்கின் சாரோட `சைக்கோ’, அதியமான் சாரோட ஒரு படம்... இந்த ரெண்டு படங்களையும் முடிச்சதுக்குப் பிறகு, உதயநிதி சார் இதில் நடிக்கவிருக்கிறார். ஜனவரியில ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றோம். திரைக்கதை ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக்கிட்டிருக்கோம்.”

பி.எஸ்.மித்ரன்: ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால், அர்ஜூனை சைபர் டாம் அண்டு ஜெர்ரி ஆக்கி, ஓடவைத்து கவனம் ஈர்த்தார், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இவர் தனது இரண்டாவது படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்காக இயக்கவிருக்கிறார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் எனத் தற்போது கையில் இருக்கும் இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
“சிவகார்த்திகேயனை வைத்து நான் இயக்கும் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க் போய்க்கிட்டிருக்கு. த்ரில்லர் ஜானரோடு சேர்த்து சமூகத்துக்குத் தேவையான ஒரு மெசேஜையும் இந்தப் படத்துல சொல்லப்போறோம். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஷூட்டிங். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.”

இளன் : ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் இளசுகளின் மனசில் இடம்பிடித்த இளன், தற்போது அதே படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார்.
“ ‘பியார் பிரேமா காதல்’ படத்தைப் பார்த்துட்டு, தெலுங்கிலும் ஹிந்தியிலும் ரீமேக் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. அதுக்கான வேலைகளில்தான் இப்போ இருக்கேன். அந்தந்த ‘வுட்’ நடிகர்களைத்தான் நடிக்க வைக்க முடிவு பண்ணியிருக்கோம். யார், யார் நடிக்கிறாங்கன்னு இன்னும் முடிவாகலை. ஆனால், யுவன்தான் மியூசிக்!”

பி.ஜி.முத்தையா: ‘மதுரவீரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. தற்போது தயாரிப்பில் பிஸியாக இருக்கிறார்.
“அஞ்சலி நடிப்பில் நான் தயாரிச்சு, ஒளிப்பதிவு பண்ற ‘லிசா’ பட ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. இந்தப் படம் முடிஞ்சதுக்குப் பிறகு, இன்னொரு படத்தைத் தயாரிக்கிறேன். அதுக்குப் பிறகுதான், என் படத்தை இயக்குற ஐடியா. ‘மதுரவீரன்’ படம் மாதிரி அந்தப் படமும் கிராமத்துப் பின்னணியில்தான் இருக்கும். இந்தமுறை பெரிய ஹீரோவை வெச்சுப் பண்ணணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.”
மா.பாண்டியராஜன், படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ்