
“நிச்சயம் தேர்தலில் நிற்பேன்!”
போராட்டங்கள், வழக்கு, கைது, ஜாமீன், சினிமா... எனக் கடிகார முள்ளைப்போல இயங்கிக் கொண்டி ருக்கிறார், இயக்குநர் அமீர்.

“ ‘ஒரு இயக்குநரா உங்கமேல எனக்கு நம்பிக்கையும், மரியாதையும் இருக்கு வெற்றி. இந்தக் கதையை நீங்க சொல்லும்போதே, இது என்ன மாதிரியான படம்னு என்னால உணர முடியுது. நிபந்தனையா இல்ல, வேண்டுகோளா ரெண்டு விஷயங்கள் சொல்லணும், ‘படத்துல யார் கால்லேயும் விழமாட்டேன். நடிகையோட நெருக்கமா நடிக்கமாட்டேன்’னு சொன்னேன். ‘ரெண்டுநாள் கழிச்சு சொல்றேன்’னு போனவர், திரும்ப வரமாட்டார்ன்னு நினைச்சேன். ‘நல்லா யோசிச்சுப் பார்த்தேன். நீங்க கோரிக்கையா வைக்கிற ரெண்டு விஷயமும் படத்துல இருக்கு. கால்ல விழுற காட்சியைக்கூட மாத்திக்கலாம். ஆனா, நடிகையோட நெருக்கமான காட்சி இருக்கும். ஏன்னா, கணவன் மனைவி இடையேயான நெருக்கம் படத்துல இருக்கு. ஸ்பாட்டுக்கு வாங்க பார்த்துக்கலாம்’னு சொன்னார்” - ‘வடசென்னை’ கதை சொன்ன அமீரிடம் பேசினேன்.
“ ‘சந்தனத் தேவன்’ படம் என்னாச்சு?”
“படத்துக்குப் பெரிய முதலீடு தேவைப்பட்டது. மூன்று காலகட்டத்தைப் பற்றிப் பேசவிருக்கும் படம். மண் சார்ந்த வாழ்வியலைப் படம் பேசும்; அரசியலும் இருக்கும். ஆர்யாவும், அவர் தம்பி சத்யாவும் சேர்ந்து நடிக்கிறாங்க. இதுவரை ஆர்யாவை சாக்லேட் பாயா பார்த்தவங்க, இந்தப் படத்துல வேறமாதிரி பார்ப்பீங்க. நானும் ஒரு கேரக்டர்ல நடிக்கிறமாதிரி இருந்தது.இயக்கம், நடிப்பு ரெண்டையும் கவனிக்கச் சிரமமா இருக்கும்னு நடிக்கலை. பெரிய பட்ஜெட்ல உருவாகிற படம்... அதனால, அடுத்த கட்டத்துக்கு நகராம கொஞ்சம் தேங்கி நிற்குது. சீக்கிரமே இந்தப் படத்தோட பிரச்னைகள் தீரலைனா, புதுமுகங்களை வெச்சு அடுத்த படத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.”

“மக்கள் நலனுக்காகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க?”
“ஆளுகிறவர்கள் உச்சகட்ட பயத்தில் இருக்கிறதோட வெளிப்பாடு இது. இந்தக் கைது நடவடிக்கைகளையெல்லாம் மக்களை திசை திருப்புறதுக்காக நடத்துறாங்க. நேரடியாக நீதிமன்றத்தைத் தவறாகப் பேசிக் கொச்சைப்படுத்தியவர்கள், பத்திரிகை யாளர்களை அவதூறாகப் பேசியவர்கள், பெண்களைக் கேவலமாகப் பேசியவர்கள், காவல்துறையைத் தவறாகப் பேசியவர்கள் யாரும் கைது செய்யப்படலை. ஆனா, மக்கள் நலனுக்காகப் பேசுபவர்களை தொடர்ந்து கைது செய்வது, பாசிசச் சிந்தனை.
தமிழகத்தில் இதுக்கு முன்னாடி இந்தளவுக்குக் கைது நடவடிக்கை இருந்ததில்லை. மத்தியில் நிலவும் பாசிசச் சிந்தனை, மாநிலத்தையும் ஆட்டிப்படைக்குது. பேய் நுழைஞ்ச வீட்டுல பேயாட்டமா இருக்குமில்லையா... தமிழ்நாட்டு அரசியல் அப்படித்தான் இருக்கு!.”
“களப் போராட்டத்தில் இருக்கக்கூடியவர்களில், யாரெல்லாம் நேரடி அரசியலுக்கு வரணும்னு நினைக்குறீங்க?”
“திருமுருகன் காந்தி, சகாயம் இருவரும் வரலாம். இதுல திருமுருகன் காந்தி ஏற்கெனவே அரசியலில்தான் இருக்கார். அவருடைய அரசியலில் எனக்கு உடன்படாத விஷயம் என்னன்னா, தேர்தல் இல்லாத ஒரு வழிமுறை. அது, இல்லாத ஊருக்குப் போவதுபோலத்தான்.
பெரியாருடைய சிந்தனைகள் யாருக்குப் பயன்பட்டன?! அவர் சிந்தனைகளை எடுத்துக்கிட்டு, தேர்தலுக்கு வந்த திமுக-வுக்குத்தான். எனவே, திருமுருகன் காந்தி போன்ற களப் போராளிகள், தேர்தல் அல்லாத போராட்டக் களத்தைத் தேர்ந்தெடுப்பது பயனில்லாத ஒன்று.
சகாயம், ‘என் மக்களைப் பயிற்றுவித்து முக்கிய இடத்துக்குக் கொண்டு வரணும். அதுக்கு, தேர்தல் எளிதான விஷயம்’னு சொல்றார். மக்களை ஈஸியா பயிற்றுவிக்க முடியாது. ஏன்னா, அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு, அவர்கள் பயணத்தைத் தடை செய்வதற்கு இங்கே நூறு விஷயங்கள் இருக்கு. நெடுவாசல், கூடங்குளம், ஸ்டெர்லைட், காவிரி, ஐ.பி.எல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன்னு நான் போராடிக்கிட்டு இருக்கும்போது, என்னை திசை திருப்ப இங்கே ‘பிக் பாஸ்’ இருக்கு. அப்படியிருக்கும்போது, சகாயம் மக்களை சரிப்படுத்திதான் அரசியலுக்கு வருவேன்னு சொல்றது, எனக்கு சரியா படல!

தேர்தலில் நின்று வாக்குகள் மூலமாதான் சரி செய்யமுடியும். இது இல்லாம, வெளியே இருந்து சரி செய்வேன்னு நினைச்சா, மக்களை எளிதாகக் கவரக்கூடியவர்கள் அரசியலுக்கு வந்திடுவாங்க.”
“சீமான்?!”
“சீமான் தேர்தல் களத்தில் நிற்கிறார். ஆனா, அவர் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனித்துதான் அரசியலை முன்னெடுப்பேன்னு சொன்னா, எப்படி?! நீங்க எல்லோரிடமும் இணக்கமா இருந்தாதான் ஜெயிக்க முடியும். ஏன்னா, எதிரிகள் பலமா இருக்காங்க. நாம் குறைந்த சதவிகிதம் மக்களின் செல்வாக்கைத்தான் பெற்றிருக்கிறோம். அதனால், அவர்களை எதிர்க்க கூட்டணி வைக்கணும்.”
“நீங்க தேர்தல் அரசியலுக்கு வருவீங்களா?”
“தேர்தல் அரசியலுக்கு மாற்றாக என்கிட்ட எந்தக் கருத்தும் சிந்தனையும் இல்லை. ஒண்ணு செய்யலாம், வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தலாம். எல்லோரும் களத்தில் நிற்கலாம். யார் எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறீர்களோ, அந்த சதவிகிதத்தின் அடிப்படையில் பிரதிநிதியாக நியமிக்கப்படலாம்.
நான் நிச்சயம் தேர்தலில் நிற்பேன். ஆனா, இப்போ இருக்கிற சூழலில், எல்லோரும் தேர்தலில் நிற்கத்தான் ஓடுறாங்க. இவங்ககூட ஓடி என்ன பண்ணப்போறேன்... அதனால, ஓடுபவர்களுக்கு உற்சாகம் கொடுப்பேன். குறைந்தபட்சம் யார் உண்மையா இருக்காங்களோ, அவங்களுக்கு ஆதரவு கொடுப்பேன்.”
“தனிக்கட்சி தொடங்குற ஐடியா இல்லையா?”
“முழுமையான நேர்மையாளர்கள் அரசியலில் இருக்கவே முடியாது. அப்படி இருக்கேன்னு யாராவது சொன்னா, அது பொய். தனிக்கட்சி ஆரம்பிக்கிறதுக்கான நிதி என்கிட்ட இல்லை. தவிர, கட்சி நடத்துறது என்ன சாதாரண விஷயமா... ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்துக்கவேண்டியதுதான். அது எந்தக் கட்சின்னு அப்படி ஒரு சூழல் வரும்போதுதான் முடிவெடுக்கணும்.”
சனா / படங்கள்: தே.அசோக்குமார்