
“கபில்தேவ்தான் கார்த்தியின் ‘தேவ்’!”
‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றிகளைத் தொடர்ந்து ‘தேவ்’ படத்தின் மூலம் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கருடன் கை கோக்கிறார், கார்த்தி. படத்தின் அப்டேட்ஸ் குறித்து இயக்குநருடன் பேசினேன்.

“இளைஞர்களுடைய வாழ்க்கை இன்னைக்கு எப்படி இருக்குங்கிறதுதான் ‘தேவ்’ படத்தின் கதை. கமர்ஷியல், ஆக்ஷன், அட்வென்ச்சர், ரொமான்ஸ்னு படத்துல எல்லாமே இருக்கும். படத்துக்குள்ள ஒரு பெரிய பயணம் இருக்கும். அதனால் உக்ரைன், ஐரோப்பா, அமெரிக்கா, நேபாளம்னு பல இடங்களில் ஷூட் பண்ணியிருக்கோம்.
பொதுவாவே எனக்கு கார்த்தி சாரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்க்கும்போது பக்கத்து வீட்டு அண்ணன் ஃபீல் வரும். ‘தீரன்’ ஷூட்டிங் ஸ்பாட்லதான் கார்த்தி சார்கிட்ட படத்துடைய கதையைச் சொன்னேன். கேட்டுட்டு, ‘எனக்கு இது ரொம்ப சவாலான ரோல்தான். கண்டிப்பா நான் பண்றேன்’னு சொன்னார்.’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ஷூட்டிங் சமயத்துல முழு ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணிட்டு அவரைச் சந்திச்சேன். நிறைய விஷயங்கள் பேசினோம். அப்புறம் கால்ஷீட் முடிவு பண்ணிட்டு ஷூட்டிங்கை ஆரம்பிச்சிட்டோம்.”
“அது என்ன ‘தேவ்’?”
“தெளிவான ஒரு ஆள் தன்னுடைய வாழ்க்கையில என்ன பண்ணுவான். அவனுக்கு ஏற்படும் சோகம், சந்தோஷம், கோபம், அன்பு, நட்பு, காதல்னு அவனுடைய வாழ்க்கையை எப்படி ஒரு தெளிவோட எதிர்கொள்கிறான். அந்தத் தெளிவும் இள வயதுல வந்துட்டா, அதை அந்த இளைஞன் எப்படி எதிர்கொள்வான்னு படம் போகும். இப்போ இருக்கிற இளைஞர்களுக்குத் தேவையான விஷயத்தைப் பேசக்கூடிய படமா இது இருக்கும். ‘தேவ்’ங்கிறது ரொம்ப அழகான பெயர். நான் ஒரு கிரிக்கெட் ப்ளேயர். எனக்கு கபில் தேவ் பெரிய இன்ஸ்பிரேஷன். கதாபாத்திரத்துடைய பெயரைத்தான் படத்துடைய டைட்டிலா வைக்கணும்னு முடிவு பண்ணினேன். அதனால எல்லாருக்கும் பரிச்சயமான ‘தேவ்’ங்கிற பெயரையே வெச்சிட்டேன்.”

“படத்துல ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன மாதிரியான ரோல். வழக்கமான ஹீரோயின்தானா?”
“ஹீரோவுக்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்குமோ, அதே அளவு முக்கியத்துவம் ரகுலுக்கும் இருக்கும். வழக்கமான ஹீரோயினா கண்டிப்பா இருக்க மாட்டாங்க.”
“படத்துடைய டெக்னிக்கல் விஷயங்கள்லாம் எப்படி வந்திருக்கு?”
“படத்துடைய ஒளிப்பதிவாளர், வேல்ராஜ் சார். ஒரு ஹீரோவை எந்த இடத்துல எப்படிக் காட்டணும்ங்கிறது, அவருக்குக் கைவந்த கலை. ‘கடைக்குட்டி சிங்கம்’ பட சமயத்துலதான் இவர்கிட்டேயும் பேசினோம். ஏற்கெனவே கார்த்தி சாரோட மூணு படம் ஒர்க் பண்ணியிருக்கார். அதனால் வேலை ஈஸியா இருந்தது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா ஹாரிஸ் ஜெயராஜ் சாரை முடிவு பண்ணி அவர்கிட்ட கதை சொன்னேன். கதையைக் கேட்டுட்டு என்னைக் கட்டிப்பிடிச்சார். ‘கண்டிப்பா நான் பண்றேன்’னு சொன்னார். சில இடங்கள்ல வசனங்கள் வழியா உணர்வுகளைக் கடத்தினாலும், பல இடங்கள்ல உணர்வுகளை இசை மூலமாகவும் கடத்த வேண்டியிருக்கும். அதை ஹாரிஸ் சார் சரியா செஞ்சிருக்கார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். மியூஸிக்கலாவும் படம் நல்லா இருக்கும்.
“படத்துல வேற யார் நடிச்சிருக்காங்க?”
“கார்த்தி சாரோட அப்பாவா பிரகாஷ்ராஜ் சார், ரகுல் ப்ரீத் சிங்குடைய அம்மாவா ரம்யா கிருஷ்ணன் மேடம் நடிச்சிருக்காங்க ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ், அம்ருதா, வம்சினு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. நவரச நாயகன் கார்த்திக் சார், நிக்கி கல்ராணி ரெண்டுபேரும் சிறப்புத் தோற்றத்தில் வருவாங்க.”

“ஓர் அறிமுக இயக்குநனரா, சமூக வலைதளங்கள்ல வரும் சினிமா குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீங்க?”

“ஆரோக்கியமான விஷயமாதான் பாக்குறேன். முன்னாடியெல்லாம் ஒரு படத்தைப் பத்தி குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேசுவோம். இப்போ பப்ளிக்கா பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதுல பாசிட்டிவ்வும் இருக்கு, நெகட்டிவ்வும் இருக்கும். படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்வும் எச்சரிக்கையுணர்வும் அதிகரிச்சிருக்கு.
அதே சமயம் ‘நல்லா இருக்கக் கூடாது’னு யாரும் படம் எடுக்க மாட்டாங்க. ஒரு சுமாரான படம் வந்தா, வீட்டுல பெரியவங்க தோள்ல தட்டி அட்வைஸ் கொடுக்குற மாதிரி, விமர்சனம் பண்றவங்க சொன்னா நல்லா இருக்கும்.”
தார்மிக் லீ