
எதிர்பார்ப்பு எகிறுது!
நம் ஊர் ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக மற்ற மொழி ஹீரோக்களின் படங்களும் இங்கே ஹவுஸ்ஃபுல் ஆகிறது. இதோ, எதிர்பார்ப்பில் இருக்கும் பக்கத்து ஸ்டேட் நட்சத்திரங்களின் படங்கள்!

RRR (தெலுங்கு)
‘பாகுபலி’யைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் அடுத்த பிரமாண்டம். இதுவும் வரலாற்றுப் பின்னணியில் நடக்கிற கதைதான். 1920-களில் ஆங்கிலே யர்களையும், நிஜாம்களையும் எதிர்த்துப் போராடிய அல்லூரி சீதராமா, கோமரம் பீமா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் என டோலிவுட்டின் தல தளபதிகள் இணைகிறார்கள்! ராம் சரணுக்கு ஜோடியாகும் ஆலியா பட்டுக்கு இது தென்னிந்திய சினிமாவில் முதல் என்ட்ரி. ஜூனியர் என்.டி.ஆருக்கு அதைவிடப் பெரிய லெவலில் ஹாலிவுட் நாயகிகளுக்கு வலைவிரித்திருக்கிறார்கள். இவர்கள் போக, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

ரஸ்தம் (கன்னடம்)
கர்நாடகாவின் புரட்சித்தளபதி சிவராஜ்குமார். இவருக்கென்று தனி மாஸ் உண்டு. இவர் படங்கள் பற்றிய அப்டேட் வந்தால் இவரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ‘கவச்சா’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இவர் நடித்திருக்கும் ‘ரஸ்தம்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ‘விவேகம்’, ‘லூசிஃபர்’ ஆகியவற்றின் மூலம் தமிழிலும் மலையாளத்திலும் அறிமுகமான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், இப்போது கன்னடத்திலும் என்ட்ரி கொடுக்கிறார். ‘இருமுகன்’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த ரவிவர்மா, இந்தப் படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சிவராஜ்குமார் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் இந்தப்படம் `கேஜிஎஃப்’ போல ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சாண்டல்வுட் ரசிகர்கள் வெயிட்டிங்!

மரக்கார்
அரபிக்கடலின்டே சிம்ஹம் (மலையாளம்)
வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் படம் இது. 16-ஆம் நூற்றாண்டில் கடலோரக் காவலர்களாக இருந்த குஞ்சாலி மரைக்காயர் இன மக்கள் குறித்த முக்கியமான பதிவாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ஒரு மலையாளப் படம் உருவாவது இதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பொருட் செலவில் ப்ரியதர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், அசோக் செல்வன் என ஒரு பட்டாளமே நடிக்கிறது. இதில், மோகன்லால் குஞ்சாலி மரைக்காயராக நடிக்கிறார். அவர் மகன் ப்ரணவ் மோகன்லால் சிறு வயது மரைக்காயராக நடிக்கிறார். இந்தப் படம் மலையாளம் மட்டுமன்றி, பிற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

களங்க் (இந்தி)
பாலிவுட்டின் இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய பட்ஜெட் மல்டி ஸ்டாரர் படம், ‘களங்க்’ (களங்கம்). ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தைக் கொடுத்த அபிஷேக் வர்மன் இயக்கிக்கொண்டிருக்கும் படம் இது. மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், வருண் தவான், ஆதித்யா ராய் கபூர், சஞ்சய் தத் என ஒரு டஜன் ஸ்டார்ஸை நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர். படம் சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நடக்கும் காதல் கதை. அதனால், பிரமாண்ட அரங்குகள், கண்ணைக் கவரும் உடைகள், பல ஆயிரம் பேர் ஆடும் நடன அமைப்புகள் எனப் பணத்தை வாரி இறைத்திருக்கிறது படக்குழு. படத்தின் ட்ரைலருக்கு `பழைய கதை, போர் அடிக்கும் காட்சிகள்’ எனப் பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன. 120 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.

சாஹோ (தெலுங்கு)
‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு, பிரபாஸ் நடித்திருக்கும் படம் ‘சாஹோ.’ இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தவிர, நீல் நித்தின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்த்ரா பேடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி யிருக்கும் இப்படத்தின் முக்கியக் காட்சிகளைப் பல நாடுகளில் படமாக்கி யுள்ளனர். துபாயில் எடுக்கப்பட்ட ஒரு காட்சிக்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ படத்திற்கு இசையமைத்த ஷங்கர் - ஈஷான் - லாய் இப்படத்திற்கும் இசை. ‘2.0’ படத்தில் பணியாற்றிய கென்னி பேட்ஸ் ஸ்டன்ட் பணிகளை மேற்கொள்கிறார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

துறமுகம் (மலையாளம்)
‘கம்மாட்டிப் பாடம்’ திரைப்படத்துக்குப் பிறகு, ராஜீவ் ரவி இயக்கும் படம் இது. நிவின் பாலி நாயகனாக நடிக்கும் இந்தப் படமும், ராஜீவின் முந்தைய படத்தைப் போலவே பேசப்படாத மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்யும் படமாக இருக்குமாம். இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களில், இந்திரஜித் சுகுமாரன், அர்ஜுன் அசோகன், பூர்ணிமா இந்திரஜித் நடிக்கின்றனர். பீரியட் டிராமாவாக இருக்கும் இந்தப் படம், தொழிற்புரட்சி, எப்படிப் பாரம்பரிய வாழ்வியல்மீது தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மீனவராக நடிப்பதால், நிவின் பாலி மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார், ராஜீவ் ரவி.
- ர.சீனிவாசன். உ.சுதர்சன் காந்தி, சந்தோஷ் மாதேவன்