
சினிமா விமர்சனம் - சிந்துபாத்

லைலாவை மீட்க தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றும் ‘சிந்துபாத்.’
விஜய் சேதுபதியும் அவர் கூட்டாளியான சூர்யா விஜய் சேதுபதியும் (யெஸ், ஜூனியர் மக்கள் செல்வன்தான்!) தென்காசியில் குட்டிக் குட்டித் திருட்டுகளை அரங்கேற்றிவரும் ஜாலி திருடர்கள். ஒரு சுபயோக சுபதினத்தில் குழாய் ஸ்பீக்கருக்கே சவால்விடும் அஞ்சலியைப் பார்க்கிறார் வி.சே. காதலில் விழுகிறார். திடீர்க் கல்யாணம் முடிந்த கையோடு மலேசியா செல்கிறார் அஞ்சலி. அங்கே ஒரு மாபியா கும்பல் அவரைக் கடத்துகிறது. அப்புறம் என்ன, மீட்புப் படலம்தான்!

ஜாலி கேலி ரகளை ஆளாக விஜய் சேதுபதியைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு! பஞ்ச் டயலாக்குகளைக் கலாய்ப்பது தொடங்கி மிஸ்டர் கூலாகக் கலக்குகிறார். ஆனால் ரொம்ப ஆபத்தான காட்சிகளில்கூட அவர் ‘கூலோ கூல்’ பலவீனமாகிவிடுகிறது. அப்பாவை அப்படியே உரித்து வைத்ததுபோல நடிக்கிறார் சூர்யா. முதல்படம் என்று நம்ப முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார்.
அஞ்சலிக்கு இப்படியான ரோல்கள் எல்லாம் தண்ணிபட்ட பாடு என்பதால் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். ஆனால் சத்தமாக உரையாடும் கேரக்டர் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் போகப் போக காதை அடைக்கிறது. வில்லனாக லிங்கா கேமராவுக்குக் குறுக்கே ஓடுகிறார். அவ்வளவுதான். விவேக் பிரசன்னா சொற்ப காட்சிகளே வருவதால் அவரின் கதாபாத்திரமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இசை யுவன் என டைட்டில்கார்டில் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தால் தீம் மியூசிக்கில் மட்டுமே லேசாக யுவன் சாயல். பாடல்களும்... ம்ஹும்! படத்தின் ஒரே பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. ரப்பர் தோட்டங்கள், தமிழகக் கிராமப்புறம், தாய்லாந்து வீதி என்று ஒவ்வொரு இடத்துக்கும் ஒளிவித்தை காட்டுகிறது கேமரா.

திரைக்கதையையும் சிந்துபாத்தே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருப்பதுதான் படத்தின் பலவீனம். முதல் பாதியிலாவது காமெடி கொஞ்சம் கொஞ்சம் காப்பாற்றுகிறது. இரண்டாம் பாதி மொட்டைமாடியில் விடும் காற்றாடி போல எங்கெங்கோ பறந்து கடைசியாக சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் லேண்ட் ஆகிறது.
கேட்கும் சவால் உள்ள விஜய்சேதுபதி ஒன்றரை ஆளாகப் போய் ஒரு சட்டவிரோத சாம்ராஜ்ஜியத்தையே இல்லாமல் ஆக்குகிறார். ஆனால் மலேசிய போலீஸோ ஒரு பொம்மைக்குள் ‘ஸ்பை கேமரா’ வைப்பதோடு சரி. அதையும் ஒரு ஷீல்டு மறைக்கிறது என்று ஒட்டுமொத்த ஷீல்டுகளையும் திருடிவரச் சொல்வதெல்லாம்... ப்பா!
கன்னித்தீவு கதையின் சுவாரஸ்யமான ஒன்லைனை, லாஜிக் இல்லாத பிற்பாதிக் காட்சிகள் தகர்த்துவிடுகின்றன.
- விகடன் விமர்சனக் குழு