
சினிமா விமர்சனம் - தர்மபிரபு
பூலோகத்துப் பிரச்னைகளுக்கு எதிராகப் பாசக்கயிற்றைச் சுழற்றும் எமலோகத்து பிரபுவின் கதையே `தர்மபிரபு.’ எமன் சுழற்றும் பாசக்கயிறு அவ்வப்போது திரையைத் தாண்டிப் பார்வையாளர்கள் பக்கமும் வந்துபோவதுதான் மரணபயம்.

பல லட்சம் ஆண்டுகள் எமனாகப் பணியாற்றிய ராதாரவி, ஓய்வுபெறும் முடிவுக்கு வருகிறார். அவருக்குப் பதிலாக அவரின் வாரிசு யோகிபாபுவிடம் எமன் பணியை ஒப்படைக்கிறார். இது ஏற்கெனவே, எமன் பதவிமீது கண் வைத்திருந்த சித்திரகுப்தனின் கண்களைக் கலங்கவைக்கிறது. அந்த அரியணையில் உட்கார பூலோகத்து அரசியல் சாணக்கியர் ஒருவரிடம் அறிவுரை கேட்டு, அவர் சொன்னதுபோல் தப்புக்கணக்கு எழுதுகிறார். தப்புக்கணக்கால் நிகழும் தாறுமாறு தர்பார்தான் கதை.
எமன் தர்மபிரபுவாக யோகிபாபு. வெயிட்டான அந்த எருமைக்கொம்பு கிரீடத்தைத் தலையில் தாங்க வேண்டும், கடாயுதத்தைத் தோளில் தாங்க வேண்டும். இதுபோதாதென நாயகன் கதாபாத்திரத்தையும் தாங்க வேண்டு மென்றால் அவர் என்ன செய்வார் பாவம்! திணறியிருக்கிறார் மனிதர். தூயதமிழ் வசனங்களுக்கு இடையே கலோக்கியலாகப் பேசினாலே காமெடி என யோகிபாபுதான் நிஜத்தில் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக். நல்ல தேர்வு, அளவாக, அருமையாக நடித்திருக்கிறார். ராதாரவி, அழகம்பெருமாள், ரேகா போன்ற நடிகர்களை வீணடித்தி ருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்தது ஜனனி ஐயருக்கே மறந்திருக்கும். கொஞ்சமே கொஞ்சமாய் வந்துபோகிறார்.
இயக்குநரின் சமூக அக்கறைக்குப் பாராட்டுகள். பெரியார், அம்பேத்கர், காந்தி, நேதாஜி ஆகியோரை வைத்து சமூகக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் பள்ளி நாடகம் அளவுக்கு இருந்தால் போதுமென நினைத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மீது தவறில்லை. பின்னணி இசைக்கு இடமே வைக்காமல் வசனங்களாகப் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். ஒளிப்பதிவு மகேஷ் முத்து சாமிதானா என சந்தேகமாய் இருக்கிறது. சொதப்பல்!
மிக்சர், தெர்மாகோல் மற்றும் டயர் பற்றிய காமெடிகள், ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றிய வசனம், அஜித், விஜய்யோடு பெரியார் மற்றும் அம்பேத்கரின் ரெஃபரென்ஸ்கள் வைத்தாலேபோதும், இது அரசியல் பேசுகிற படமாகிவிடும் என்று நினைப்பது தப்பு பிரபு, தர்ம பிரபு!
- விகடன் விமர்சனக் குழு