'ஜானி' படத்துக்குப் பிறகு, நடிகர் பிரசாந்த் நடிக்கவிருக்கும் படத்தை அவரின் அப்பா தியாகராஜன் தயாரிக்க இருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயினாராக உருவாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்க இருக்கிறார். 'சாக்லேட்' படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் பிரசாந்த்தை இயக்குகிறார் ஏ.வெங்கடேஷ்.
'ஜீன்ஸ்' படத்தில் ஐஸ்வர்யா ராய், `காதல் கவிதை' படத்தில் இஷா கோபிக்கர், `பொன்னர் சங்கர்' படத்தில் பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன் என உலக அழகி, இந்திய அழகிகளுடன் தொடர்ந்து நடித்து வரும் பிரசாந்த், இம்முறை சென்ற ஆண்டு `மிஸ். இந்தியா' பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸுடன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த்துக்கு அக்காவாக நடிக்க இருக்கிறார் நடிகை பூமிகா. தவிர, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.