
என் ஊர்: நடிகர் தாமு - அயனாவரம்
##~## |
நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்று பல அடையாளங்களோடு இருப்பவர் தாமு. தன்னை வளர்த்த அயனாவரம் பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
''எங்க அப்பா ரயில்வேயில வேலை பார்த்ததால் நாங்க அயனாவரம் ரயில்வே குடியிருப்புல இருந்தோம். ரயில்வே குடியிருப்புக்குள்ளே எப்போதும் என்னுடன் சேர்ந்து ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கும். எங்க அப்பாவுக்கு அந்த ஏரியாவில் நல்ல மரியாதை உண்டு. அதனால், எனக்கும் சென்ற இடம் எல்லாம் சிறப்புதான். எந்த வீட்டுக்குப் போனாலும் சாப்பிட ஏதாவது கொடுத்து உபசரிப்பாங்க.
ரயில்வே குடியிருப்புக்குள் நண்பர்களோடு உலாவும்போதுதான் மிமிக்ரி செய்ய ஆரம்பிச்சேன். ராத்திரியில ஏதாவது மிருகம் மாதிரி மிமிக்ரி செஞ்சு, தூங்கிக்கிட்டு இருக்கிறவங்களை எழுப்பிவிட்டுட்டு நான் தூங்கிடுவேன்.

அயனாவரம் பஸ் டெப்போ அந்தக் காலத்துல எப்படி இருந்ததோ இப்பவும் அப்படியேதான் இருக்கு. டெப்போ பக்கத்தில் ஒரு
டேபிள் சேர் போட்டு உட்கார்ந்துகிட்டு காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுதிக்கொடுத்திருக்கேன். மார்வாடித் தோப்புல மார்வாடிகள் வழிபடுற கோயில் இருக்கும். அந்தக் கோயிலைச் சுத்தி காம்பவுண்ட் சுவர் இருக்கும். கோயிலுக்குள்ள நிறைய நாய்களைக் கட்டிப் போட்டுவெச்சிருப்பாங்க. அவ்வளவு ஈஸியா யாரும் உள்ளே போக முடியாது. நான் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சி, நாய் மாதிரியே குரைச்சி அதுங்களுக்கு ஃப்ரெண்ட் ஆகிடுவேன்.

அயனாவரத்தில் மறக்க முடியாத கோயில் திருவிழான்னா, அது திருப்பதிக் கொடைதான். அயனாவரத்துல இருந்து திருப்பதிக்குக் கொடை எடுத்துட்டுப் போவாங்க. ஊரே சேர்ந்து கொண்டாடுவோம். ஒரு வாரம் நடக்கும் அந்த விசேஷத்துல, ஒரு பெட்ஷீட்டைக் கட்டி, மறைவு ஏற்படுத்தி, பத்து பைசா நுழைவுக் கட்டணம் வசூல் செய்வோம். உள்ளே நான் மிமிக்ரி செஞ்சுக் காட்டுவேன். ஒரு வாரத்துல எப்படியும் நூறு ரூபாய் சேர்ந்துடும். அந்தப் பணம் முழுக்க பிரியாணி ஆகிடும். ஆடி மாசம் முத்துமாரியம்மன் கோயில்ல கூழ் வாங்கிக் குடிக்க எங்களுக்குள்ள பெரிய அடிதடியே நடக்கும்.
எப்பவும் சயானி தியேட்டர்லதான் எம்.ஜி.ஆர். படம் ரிலீஸ் ஆகும். படம் பார்க்க காசு இருக்காது. ஆனாலும் படம் பார்த்தாகணும். என் நண்பன் ஒருத்தன் அந்த தியேட்டர்ல வேலை பார்த்தான். அவனைப் பிடிச்சு சமோசா வியாபாரம் செய்யுற மாதிரி உள்ளே நுழைஞ்சுடுவேன். ஆனா, இன்னைக்கு அந்த தியேட்டர்லாம் இல்லை.

நூர் ஹோட்டல் சேர்வைன்னா அவ்வளவு ஃபேமஸ். பரோட்டாவுக்கு சேர்வையைத் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா இருபது பரோட்டா கூட சாதாரணமா உள்ளேபோகும். அந்த ஹோட்டல்ல வேலை பார்த்த ஒருத்தன் இப்போகூட எனக்கு நண்பனா இருக்கான்.
ஓட்டேரியில எனக்கு நண்பர்கள் அதிகம். அந்தக் காலத்துல ஓட்டேரின்னாலே டெரர்தான். டிசைன் டிசைனா பட்டப் பேர் இருக்கும். 'கில்லி’ படத்துல ஓட்டேரி நரி என்று எனக்குப் பெயர்வெச்சது கூட அந்த ஞாபகத்துலதான்.
இன்னைக்கு நான் சென்னையில எத்தனையோ இடங்கள் மாறிட்டாலும் என் மனசுக்கு சின்னதா ஒரு கஷ்டம் வந்தாலும் அயனாவரத்துக்குள்ள ஒரு ரவுண்ட் அடிச்சா எல்லா கஷ்டமும் பறந்துடும்!''
- பொ.ச.கீதன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்