விகடன் வரவேற்பறை
காற்றால் நடந்தேன் - சீனு ராமசாமி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
பக்கம்: 104 விலை:

80

சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சமூகம் கட்டமைத்த சராசரி ஆண் மனதைக் கடக்க எண்ணும் முயற்சி பல கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு கூரையின் கீழ் காதலின்றி வாழ நேரும் ஓர் ஆணையும் பெண்ணையும் காதலற்ற வாழ்வில் நடமாடித் திரிவதைவிடவும் இப்பிரிவு உன்னதம் என்கிறது 'விளக்கம்’ கவிதை. யானை குறித்த ஒரு கவிதையில் 'காட்டை நினைவுறுத்திய காற்றில் கிளர்ந்த கோபத்தை 'மதம்’ என்றான் நெற்றிக்கு நேரே கோடு வளர்த்த வைணவன்’ என்கிற வரிகளில் சூடு. கவிஞர் உச்சம் தொடுவது மனைவிக்கும், மகளுக்கும், அம்மாவுக்கும் எழுதிய கவிதைகளில். மனசாட்சியுடன் சுயவிமர்சனம் செய்யும் கணவனாக, 'பின்தொடர்ந்து/பின்தொடர்ந்து/ பின்தொடர்ந்து/என்னைக் கடக்காமலேயே நிற்கிறாள்/குற்றமற்றவன்போலவே/நடப்பது என் சுபாவம்’ என்று மனைவிக்கு எழுதிய கவிதை மனக்கண்ணில் உருவாக்கும் காட்சியும், கவிதையின் பொருளும் பரிசுத்தமானவை. 'நாள் என்பது நாள் அல்ல. பின்பொரு சமயம் ஏங்கித் தவிக்கும் நினைவு’ என்ற நாளின் விளக்கம்... இதமான ரசனை. பெருநகரத்துக்கே உரித்தான சித்திரங்களை மனதில் தோற்றுவிக்கும் கவிதைகளின் ஒரு சோறு பதம்... 'வாடகை தராத நாளன்றிலிருந்து எனக்கும்அவருக்கு மான உரையாடல் தரைதட்டி நின்றது’ எனும் 'மௌன தர்க்கம்’ கவிதை.
சற்றே பிசகினாலும் உரைநடை ஆகிவிடக்கூடிய கவிதைகளை உணர்வு பொங்கும் சொற்களாலும், செழுமையான வரிகளாலும், சமூக அக்கறையாலும் அழகான கவிதையாக்கிவிடும் திறமை வாய்த்திருக்கிறது சீனு ராமசாமியிடம்.
துப்பாக்கி இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீடு: ஜெமினி ஆடியோ விலை:

125

சி.டி. அட்டையிலேயே 3டி வெளிச்சம் உமிழ்ந்து வரவேற்கிறது துப்பாக்கி ஆல்பம். 'அன்டார்ட்டிகா’ பாடலில் ராணுவ வீரனின் காதலுக்கு ரேடார், சோனார் என அறிவியல் முலாம் பூசுகிறது கார்க்கியின் வரிகள். பாங்ரா சாயலில் 'குட்டிப்புலிக் கூட்டம்...’ பாடல் 'மும்பைவாலா... தவுசண்ட் வாலா’ என்று அதிரடிக்கிறது. 'மெல்ல விடைகொடு விடைகொடு...’ மெலடி இந்திய ராணுவத்தினருக்கு டெடிகேட். 'நண்பன் முகம் நெஞ்சில் நடந்துபோகும்... காதல் தென்றல்கூட கடந்துபோகும்’ வரிகளில் ஈர்க்கிறார் பா.விஜய். டிஸ்கோ ஹால் மென் அதிரடி யுடன் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், யாஹு, இ-பே என இளமை இணையம் ததும்பி வழிகிறது 'கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்’ பாடல். 'டேட்டிங் ஸ்டார்ட்டர்’, 'ஷ§கர் ஃப்ரீ பேச்சு’, 'ஃபேக்டரி உடம்பு’ என சுவாரஸ்யக் கற்பனைகள் தூவியிருக்கும் கார்க்கியின் வரிகள் செம ட்ரெண்டி 20/20. 'மீட் மை மீட் மை கேர்ள் ஃப்ரெண்ட்’ எனும்போது விஜய் குரலில் எக்ஸ்ட்ரா எனர்ஜி. மெட்டாலிக் துடிப்பும் கலீர் சிரிப்புமாக ஈர்க்கிறது ஆண்ட்ரியாவின் குரல். ஹரிஹரன் - பாம்பே ஜெயஸ்ரீ குரல்களின் 'மஸ்த்கலந்தர்’ தாலாட்டாக ஒலிக்கிறது 'வெண்ணிலவே தரையில் உதித்தால்...’, 'அணைத்திட எரிந்திடும் பெண் தேகம் அதிசயம்’ எனக் காதல் க(£)ஜல் வரிகளில் மயக்குகிறார் நா.முத்துக்குமார்.
http://ravisubramaniyan.com இலக்கிய இளைப்பாறல்!

வரி, ஒலி, ஒளி என அனைத்து வடிவங்களிலும் இலக்கியம் ததும்பும் கவிஞர் ரவிசுப்ரமணியத்தின் வலைதளம். செறிவான கவிதைகள், சிறுகதைகள், பேட்டி கள் ஆகியவற்றோடு இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களும் மிளிர்வது தளத்தின் சிறப்பு. ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்க நாதன் போன்ற ஆளுமைகளின் பெயர் சொன்னதும் மனதில் பதியும் பிம்பங்களை ஆவணப்படங்களாக மிக இயற்கையாகப் பதிவுசெய்திருக்கிறார் ரவிசுப்ரமணியன்.
'சாதாரணமாகப் பேசியபடியே வந்து, சட்டென்று மேலெழுந்து ஓர் தரிசன ஒளியைப் பெறுபவை ஜெயகாந்தனின் சொற்கள். கன்னடர்கள் தங்கள் நாட்டில் தமிழ் படிப்பதைத் தடை செய்வது, திருவள்ளுவர் சிலையை வைக்க மறுப்பது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜெயகாந்தன் சொல்லும் பதில் ஓர் உதாரணம். 'நாம் கன்னடக் கவிஞனுக்குச் சிலை வைப்போம். இங்கு கன்னடம் பயிற்றுவிப்போம். பெருந்தன்மையும் நல்லியல்பும் என்றால் என்ன என்று அவர்களுக்கு நாம் முதலில் கற்பிப்போம்!’ - இப்படி படைப்பைத் தாண்டியும் அவர்கள் ஏன் போற்றப்பட்டார்கள் என்பதை ஆழமாக, அழுத்தமாக உணரவைக்கும் தளம்.
தேர்ந்த இலக்கிய ரசனைகொண்ட... அடிப்படை இலக்கியத் தேடல் கொண்ட.... இரு தரப்பினரையும் இணைக்கும் தளம்!
இணைய இதிகாசம்! www.ewow.lk

2005-ல் யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு வலையேற்றப்பட்ட முதல் வீடியோ வைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன். ட்விட்டரில் வரும் ஸ்பாம் தகவல்கள் எப்படி இருக்கும், க்ளிக்காமல் இருப்பதன் மூலம் நம் அக்கவுன்ட்டின் ரகசியம் பாதுகாப்பது எப்படி என்பது முதல் குழந்தை பராமரிப்பு வரை... ஆரோக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் எனப் பல்துறைப் பதிவுகள் நிறைந்திருக்கின்றன. விஞ்ஞானம் தொடர்பான சந்தேகங்களை எளிமையான மொழியில் குறைவான வார்த்தைகளில் விளக்குகிறார்கள். மனித நாகரிகங்களின் வளர்ச்சி குறித்த வீடியோ தொகுப்புகள் சுவாரஸ்யம்.
கோலி பசங்க இயக்கம்: அமரன் ரமேஷ் வெளியீடு: ஒயிட் ஃப்ளவர்ஸ்

கிராமத்தில் பள்ளிக்குச் செல்லாமல் கோலி விளையாடுவதையே பொழுது போக்காகக்கொண்ட நான்கு சிறுவர்களைப் பற்றிய கதை. அடுத்த தெருப் பையன்களோடு விளையாடி கோலி ஜெயிப்பது, கரும்பு திருடுவது, ஆற்றில் குளிப்பது என இளம் பிராயச் சேட்டைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். சாதி வித்தியாசங்களைக் கடந்து, ஒருவனுக்கு அடி விழுந்தால் மற்றவர்கள் துடித்துப்போகிறார்கள். இந்தக் குறும்படத்துக்கு ஆரம்பம், முடிவு என்று எதுவும் கிடையாது. திடீர் திருப்பங்களும் கிடையாது. ஆனால், சிறுவர்களின் சேட்டை களை உயிர்ப்புடன் காட்டியிருப்பது ரசிக்கவைக்கிறது. சிறுவர்களின் பின்னாடியே நூல் பிடித்து ஓடும் நாகராஜின் ஒளிப்பதிவும் அருணகிரியின் துள்ளல் இசையும் கோலியை ஜாலி ஆக்குகிறது. பள்ளிக்குச் செல்லாமல் ஊர் சுற்றும் சிறுவர்களின் போக்கை நியாயப்படுத்தி இருப்பதுதான் ஒரே உறுத்தல்.