விகடன் வரவேற்பறை
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்!
பிலிப் மெடோஸ் டெய்லர் தமிழில்: போப்பு
வெளியீடு:சந்தியா பதிப்பகம் புதிய எண்: 77,53-வது தெரு,
9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83.
800 பக்கங்கள் விலை:

550

வட இந்தியாவில், 1832-ல் பயங்கரமான தொழில்முறை கொள்ளைக்காரன் ஒருவன் ஆங்கிலேய அதிகாரியிடம் அளிக்கும் வாக்குமூலமாகத் தொடங்குகிறது நாவல். ஆங்கிலத்தில் 'Confessions of a Thug’ என்ற பெயரில் 1839-ல் வெளியான நாவலின் மொழிபெயர்ப்பு இது. நாவல் முழுக்க சரம்சரமாக அவ்வளவு தகவல் கள். கொலை, கொள்ளை, ஊரைச் சூறையாடுதல், சூறையாடமல் இருக்க ஊரின் முக்கியப் பிரமுகர்களிடம் பேரம் பேசி செல்வங்களைக் கறப்பது, பாலியல் வன்முறைகள், காதல், பாசம், நட்பு, துரோகம், இந்துக்கள்-முஸ்லிம்களின் கலாசாரம், உணவுமுறைகள், மத நம்பிக்கைகள், சடங்குகள், சகுனம் பார்த்தல், வணிகம், குறுநில மன்னர் ஆட்சிமுறை, ஜமீன்கள், முன்சீப்களின் அதிகாரங்கள், மன்னர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையிலான கையூட்டு, ஆங்கிலேயர் விசாரணைமுறைகள் என்று 17-ம் நூற்றாண்டு இந்தியா அப்படியே கண் முன் விரிகிறது!
தக்கிகள் என்று அழைக்கப்பட்ட கொலைசெய்து கொள்ளை அடிக்கும் கூட்டத்தினர், மிரட்டல் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமல் ஒரு கைக் குட்டையை வைத்து எப்படிக் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார்கள்... போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலகட்டத்தில் சாலை வழியாகவும் காடுகளின் வழியாகவும் பிரயாணம் செய்யும் வசதி படைத்தவர்களிடம், கண்ணியமான கனவான்கள்போலவும், சிப்பாய்கள்போலவும், வணிகர்கள்போலவும் வேடமிட்டு மதிநுட்பமாகப் பேசி, எப்படி எல்லாம் அவர்களை வளைத்தார்கள் என்பதையெல்லாம் நுட்பமாக விவரிக்கிறது நாவல். கதையின் நாயகன் அமீர் அலி. அவருடைய தாய், தந்தையர் ஒரு பயணத்தின்போது தக்கிகளால் கொல்லப்படுகிறார்கள். சிறுவனையும் தக்கிகள் கொலை செய்ய முற்படும்போது, தக்கிகள் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் சிறுவனைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்து, தன் மகனாக வளர்க்கிறார். காலப்போக்கில் சிறுவனும் தக்கி தொழிலுக்கு நுழைந்து அச்சமூட்டும் மிகப் பெரிய தக்கியாக எப்படி மாறினான்? அவனுடைய காதல், தொழில் தர்மம், பல்வேறு கட்டங்களில் அந்தக் கொடூர மனதில் இருந்தும்கூட வெளிப்படும் அன்பு மற்றும் அற உணர்வுகள் என அமீர் அலியின் வாழ்க்கைப் பாலத்தில் மொத்த நாவலும் பயணிக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நிலையான, முறையான ஆட்சியாளர்களும் சட்டங்களும் இல்லாததால், நாடு முழுக்க மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள்; ஆங்கிலேயர் வருகைக்குப் பின்புதான் சட்டம்-ஒழுங்கு ஓரளவு பாதுகாக்கப்பட்டது என்பதை வலியுறுத்தும் ஆவணமாகவே இங்கிலாந்து மக்களுக்காக இந்த நூலை எழுதி இருக்கிறார் ஆங்கிலேய அதிகாரியான நூலாசிரியர் பிலிப் மெடோஸ் டெய்லர். ஆனால், நூலை மொழிபெயர்த்த போப்பு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் உரையில், ''கொள்ளை, கொலை மனித அறத்துக்குப் புறம்பானது என்பதை நிறுவுவதற்காக இந்த நாவல் எழுதப்பட்டு இருந்தாலும், சட்டத்தின் அதிகாரத்தால் அரசின் துணைகொண்டு வெகுதிரள் மக்களிடம் அடிக்கப்படுவது கொள்ளை ஆகாதா?'' என்று ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்துக்குச் சரியான கேள்வியைத் தொடுத்து இருக்கிறார்.
நூலாசிரியர் பிலிப் மெடோஸ் டெய்லரின் நோக்கம் எவ்வாறாக இருப்பினும், அன்றைக்கு நடந்ததாக குற்றவாளி அமீர் அலி தனது வாக்குமூலத்தின் ஊடாகச் சொல்லும் சம்பவங்கள் இன்றைய கற்பனா சக்திக்கு அப்பாற்பட்டது. திகிலூட்டக் கூடியது. ரத்தம் கொதிக்கச் செய்வது!
அச்சம் தவிர்
இயக்கம்: து.ஜோ.பிரபாகர்
வெளியீடு: கவிநிலா ஒளித்திரை

தொலைக்காட்சிகளில் வரும் அமானுஷ்யமான தொடர்களையும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான தாக்குதலையும் பேசும் குறும்படம். தங்கள் நான்கு குழந்தைகளுடன் சுற்றுலா செல்கிறார்கள் பெற்றோர். வழியில் நடக்கும் விபத்தில் குழந்தைகள் மட்டும் உயிர் பிழைத்து அருகில் உள்ள ஒரு கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கு மனித நடமாட்டமே இல்லை. பேய் பயத்தால் ஊர் மக்கள் அனைவரும் ஊரைக் காலிசெய்துவிட்டுப்போக, கோர முகம்கொண்ட ஒருவர் மட்டும் அங்கே இருக்கிறார். பயந்து உயிர் பிழைக்க ஓடும் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமான சிலைகள், வித்தியாசமான சடங்குகள் என மிரட்சியான அனுபவம் கிடைக்கிறது. இறுதியில் நால்வரும் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை. 'பீட்சா’ பாணி கதை. முதல் பாதி டெரர், பின் பாதி ஹ்யூமர் என்று ரசிக்கவைக்கிறார்கள். குழந்தைகளுக்கு நல்ல கதை சொல்லி அச்சமின்றி வளருங்கள், அவர்களை சேனல்களில் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கவையுங்கள் என்று அக்கறையோடு சொன்ன விதத் தில் ஈர்க்கிறது இயக்கம்!

தேமதுரத் தமிழோசை!
www.tamilradios.com

இணையத்தில் கட்டற்று விரிந்துகிடக்கும் ஆன்லைன் எஃப்.எம்-களை ஒரே இடத்தில் கேட்பதற்கான தளம். வானொலி மற்றும் அலைபேசி வழியே கேட்கும் எஃப்.எம்-களை விட, அதிக எண்ணிக்கையில் இணையத்தில் தமிழ் எஃப்.எம்-கள் இயங்குகின்றன. உலகம் முழுவதும் விரவிக்கிடக்கும் தமிழர்கள், வெவ்வேறு நாடுகளில் இருந்து நடத்தும் இந்த இணைய எஃப்.எம்-களிலும் பாடல்கள் தான் அதிகம் ஒலிபரப்பாகின்றன என்றபோதிலும், அந்தந்த நாடுகளின் விளம்பரங்கள் நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகின்றன. சில எஃப்.எம்-களில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளும் உண்டு!
விஸ்வரூபம்
இசை: ஷங்கர் எஹ்சான் லாய்
வெளியீடு: சோனி மியூஸிக்
விலை:

99

சுராஜ் ஜெகனின் மெட்டாலிக் குரலில் ஒலிக்கும் 'விஸ்வரூபம்’ டைட்டில் பாடல் கமல் ரசிகர்களுக்கானது. 'யார் என்று புரிகிறதா? இவன் தீ என்று தெரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா?’ எனப் பாடும்போது கமல் ஞாபகம் வரத்தான் செய்கிறது. 'இவன் யாருக்கும் அடிமை இல்லை... இவன் யாருக்கும் அரசன் இல்லை!’ - வரிகளில் ஈர்க்கிறார் வைரமுத்து. 'துப்பாக்கி எங்கள் தோளிலே...’ பாடலின் மெட்டைவிட வரிகளில் அனல். 'ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது... டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது!’ என ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பேனா முனை!
கமலின் கதக் ஜதியோடு ஒலிக்கத் துவங்கும், 'உன்னைக் காணாது நான்...’ ஷங்கர் மகாதேவனின் மயக்கும் கஜல் குரலுக்கு மாறி பரவசப்படுத்துகிறது. ஆல்பத்தின் ஒரே மெலடி பாடலான இதைத் திரும்பத் திரும்பக் கேட்கலாம். 'காமக் கலைஞன்... மாயத் திருடன்’ என வரிகளிலும் இள'மை’ தெளித்து இருப்பது கமலேதான்!
'அணு விதைத்த பூமியிலே... அறுவடைக்கும் அணுக்கதிர்தான்...’ பாடல் 'அன்பே சிவம்’ பாடலை ஞாபகப்படுத்தினாலும் இனிமை!
