Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

"யாரெல்லாம் இந்தக் கட்சிக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் இன்று நம்முடைய கட்சிக்கு வந்திருக்கிறார்!" என்று கருணாநிதி பெருமிதமாகச் சொன்னது, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தி.மு.க-வில் இணையும்போதுதான்!

எம்.ஜி.ஆர். காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க-வைத் திணறவைத்ததால், ராமச்சந்திரனை அதிகமாகவே கருணாநிதி அறிவார். அதனால்தான், அப்படிப்பட்ட பாராட்டு. தன்னுடைய அத்தியந்த சிஷ்யன் கருணாநிதியின் கேபினெட்டில் மந்திரியாக இருப்பார் என்று எம்.ஜி.ஆர். கனவுகூடக் கண்டு இருக்க முடியாது. அவர் இந்தப் பக்கமாகத் தாவியதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். சாத்தூரார் பிறந்த ஊரும் கோபாலபுரம் என்ற கிராமம். அதனாலும் கோபாலபுரத்துப் பாசம்!

அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கிறது இந்த கோபாலபுரம். இங்கு பெரும் விவசாயியான ரெங்கநாத ரெட்டியாரின் மூத்த மகன் இந்த ராமச்சந்திரன். ரெங்கநாத ரெட்டியாரின் தம்பி நாராயணன், விருதுநகரில் வசதியாக வசித்து வந்தார். பஞ்சு கமிஷன் மண்டிவைத்து பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், தன் வியாபாரத்தையும் சொத்துக்களையும் கவனித்துக்கொள்ள அண்ணன் மகன் ராமச்சந்திரனை அழைத்து வாரிசாக வளர்த்து வந்தார். விவசாயம் செய்து மகன் கஷ்டப்படுவதைவிட, தம்பியின் பார்வையில் இருந்தால், மகன் நல்ல நிலைமைக்கு வருவான் என்று கருதிய அப்பா இவரை தத்துக் கொடுத்தார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராததால், சித்தப்பாவுக்குத் துணையாக விருதுநகரில் பஞ்சு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் ராமச்சந்திரன். அந்தக் காலத்துத் 'துடுக்கு' இளைஞர்களை எம்.ஜி.ஆர். படங்கள் கவர்ந்ததுபோல், இவரையும் கவர்ந்தார் புரட்சித் தலைவர். பிறகு என்ன? பஞ்சு மில் வியாபாரம் பார்த்த நேரம் போக... மீதி நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை ஓடோடிப் பார்த்தவர், 'தங்கக் கலசம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் வாத்தியார் போஸ்டர்களுடன், நண்பர்கள் புடை சூழ முறுக்கிய மீசையுடன் இவர் புல்லட்டில் வந்து இறங்கியதை, அவரது பழைய நண்பர்கள் இன்னும் மறக்கவில்லை. அவர் மறந்து இருந்தால்தானே நல்ல மந்திரி?

எம்.ஜி.ஆர். இருந்த கட்சி என்பதால், ரசிகர் கூட்டமும் தி.மு.க-வை ஆதரித்தது. அப்படி ஆதரித்தவர்களில் ராமச்சந்திரனும் ஒருவர். 67-ன் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து நின்ற தி.மு.க. மாணவர் சீனிவாசனுக்காகத் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் இவரும் வேலை பார்த்தார். அப்போதுதான் கா.காளிமுத்து, ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றச் செயலாளர் பதவி வரை உயர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு இவரது முகம் பரிச்சயம் ஆனது. முறுக்கு மீசை... தடாலடிப் பேச்சு... ஆட்கள் படை சூழ வலம் வந்தால், யாருக்குத்தான் பிடிக்காது. அரசியல் மாற்றங்களால் தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகிய சில மாதங்களில், திண்டுக்கல் இடைத் தேர்தல் நடந்தது. அந்தத் தொகுதி திருமங்கலம் கள்ளிக்குடி வரை நீண்டு இருக்கும். அங்கு தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த சடாச்சர வேல் என்பவர், எம்.ஜி.ஆர். படத்தையே வைக்கவிடாமல் தடுத்தார். இந்த சடாச்சரவேலைச் சமாளிக்க ராமச்சந்திரன்தான் சரியான ஆள் என்று நினைத்து, எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். சொல்லிவைத்தது மாதிரி தனது அதிரடிப் படையுடன் போய், சடாச்சரவேலின் சாம்ராஜ்யத்தைச் சாய்த்தார். எம்.ஜி.ஆரிடம் இவரது செல்வாக்கு இன்னும் உயர்ந்தது.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அதன் பிறகு, அரசியலில் ஏறுமுகம் தான். இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்என்பதை விட, அதற்குப் பக்கத்துத் தொகுதி யான அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நின்று வென்றார். அந்த வெற்றிக்கும் இவரது பங்களிப்பு உண்டு. இன்றைக்கு சொல்லும் திருமங்கலம் ஃபார் முலாவை அன்றைக்கே ஐந்து ரூபாயில் ஆரம்பித்துவைத்தவர் ராமச்சந்திரன் என்பதை அனுபவஸ் தர்கள் அறிவார்கள். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஊரில் தங்கி இருந்தாலும், அந்தத் தொகுதியில் அவர்கள் வாக்களிக்கலாம் என்றொரு விதி இருந்தது. அதற்காகவே ஊர் ஊராக அலைந்து அந்தச் சமூகத்தவர்களை மொத்தமாக அள்ளிவந்து, ஒரு மாதம் சோறு போட்டுவைத்திருந்து, இரட்டை இலைக்குக் குத்தவைப்பார் இவர். அதேபோல், வாக்காளர்களைத் தேர்தலுக்கு முந்தைய நாள் கொண்டுபோய் கொட்டடியில்வைத்துப் பூட்டிவிடும் காரியமும் சில இடங்களில் இவர் பார்த்ததாகச் சொல்வார்கள். எதிராளியைத் தனது புஜ பலத்தால் மடக்குவது முதல் பண பலத்தால் முடக்குவது வரை வெற்றி ஃபார்முலா அத்தனையும் சாத்தூராருக்கு அத்துப்படி. அதனால்தான் எட்டுத் தடவை தேர்தலில் நின்று ஏழு தடவை வெற்றி பெற்றிருக்கிறார்.

இவ்வளவு தகுதி படைத்தவருக்கு மந்திரிப் பதவி தர மாட்டாரா எம்.ஜி.ஆர்? கூட்டுறவு, பொதுப் பணித் துறை அமைச்சராகப் பதவிகள் தந்தார். 'சம்பாதி... அதைச் செலவழி' என்ற ஃபார்முலாகொண்டவர் என்பதால், இவரைத் தொண்டர்கள் அதிகமாக மொய்த்துக்கொண்டனர். 'சென்னையில் புகழ் வாய்ந்த தியேட்டரை விலை பேசும் அளவுக்கு சாத்தூரார் வளர்ந்துவிட்டார். இந்தத் தகவல் தலைவருக்குப் போனது. அந்தப் பணத்தை எடுத்து வா. நானே வாங்கித் தருகிறேன் என்றார். கொண்டுபோனார் இவர். பணத்தை எம்.ஜி.ஆர். வாங்கிவைத்துக்கொண்டு திருப்பி அனுப்பிவிட்டார்' என்று தி.மு.க. மேடை களில் பொறி பறக்கக் கதை சொல்லும் அளவுக்குப் பிரபலம் ஆனார்.

அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். ரசிகர்களில் 'அண்ணி கட்சி' என்று ஒரு குரூப் உண்டு. அதாவது, எம்.ஜி.ஆருக்கு இணையான அபிமானத்தை லதா, சரோஜா தேவி, ஜெயலலிதா மீது வைத்திருப்பார்கள் இவர்கள். தன்னைவிட ஜெயலலிதா மீது அபிமானம் அதிகம் உள்ள ஆட்களை மந்திரி சபையில் இருந்து எம்.ஜி.ஆர். கல்தா கொடுத்தபோது, இவரது பதவியும் போனது. அதன் பிறகு, மறுபடியும் இடத்தைப் பிடித்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, இவர் ஜெ. அணியில் இருந்தார். திருநாவுக்கரசர் வலதுகரம் என்றால், சாத்தூரார் இடதுகரம். ஜெயலலிதாவை ஆதரிக்கும் 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கடத்தி வந்து, பாவாலி ரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்தார். இன்றைய எடியூரப்பா காலத்து டெக்னிக்குகளை எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால் பார்த்தவர் இவர்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

தன்னுடைய கட்சியில் மட்டுமல்ல...எதிர்க் கட்சியினர்கூட, தனது தொகுதியிலும் மாவட்டத்திலும் தலை எடுப்பதை அவ்வளவாகச் சகித்துக்கொள்ளாதவர் ராமச்சந்திரன். ஜெ. அணியில் இவர் இருக்கும்போது, ஜானகி அணியில் தி கிரேட் தாமரைக்கனி இருந்தார். ஜானகியும் ஜெயலலிதாவும் இணைந்தால்கூட இவர்கள் இருவரது பகைமையும் குறையாத அளவுக்குப் பகைமை படர்ந்திருந்தது. 1988-ம் ஆண்டு சாத்தூரில் ஒரு திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய ராமச்சந்திரன் முகத்தை நோக்கித் திராவகம் பாய்ச்சப்பட... அதில் அவரது முகமே சிதைந்தது. இன்று வரை அதன் தழும்புகள் அப்படியேதான் இருக்கின்றன. அதன் பிறகு, இவருக்கும் ஜெயலலிதாவுக்குமே கசப்புகள் வர... கட்சியைவிட்டு வெளியேறி, 91 தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக நின்றார். வென்றார்.

தேர்தல் நேரத்தில், அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி என்ற இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி மிரட்டிய வழக்கு பூதாகாரமாக வெடித்தது. அதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மீண்டும் ஜெயலலிதாவுடன் ஐக்கியம் ஆனார். போயஸ் கார்டன் வீட்டில் தனது மனைவியுடன் ஜெ-வைச் சந்தித்தார். அம்மா கட்சியின் குல வழக்கப்படி சாஷ்டாங்கமாக மனைவியுடன் விழுந்து வணங்கினார். அந்த புகைப்படத்தை 'மிக மிக மோசமான குணத்துடன்' பத்திரிகைக்குக் கொடுத்தார்கள். தனது வாழ்க்கையில் இனி நிம்மதிதான் என்று நினைத்து, போயஸ்கார்டனில் இருந்து நேராக திருப்பதிக்குப் போய் வெங்கடாசலபதியை வணங்கிவிட்டு, சாத்தூரார் மலை இறங்கவில்லை... மாலைப் பத்திரிகையில் படம் வந்துவிட்டது. அவமானம் என்பது தைரியசாலிகளைத்தான் அதிகமாக நொறுக்கும் என்பார்கள். சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனார் சாத்தூரார். சுமார் எட்டு ஆண்டு காலம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்து வந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இவர் அதிரடி என்றால், அவருக்கு நேர்மாறான சாந்த சொரூபியாக தி.மு.க-வில் இருந்து வந்தவர் அமைச்சர் தங்கப் பாண்டியன். அவரது திடீர் மரணம், சாத்தூரார் மனதை மாற்றியது. ஓரங்கட்டப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வில் இருப்பதைவிட தி.மு.க-வின் வெற்றிடத்தை நிரப் பினால் என்ன என்று சமயோசிதமாக யோசித் தார். உள்ளே வந்தார். ஸ்டாலினைச் சிக்கெனப் பிடித்தார். தங்கப்பாண்டியன் மகன் தங்கம் தென்னரசுவின் வருகை இவருக்குக் கசப்பை ஏற்படுத்தியது. அவரை வளர்த்து விடுகிறார் என்ற கோபத்தில் மு.க.அழகிரியைச் சந்திக்காமல் தள்ளியே இருக்கிறார் சாத்தூரார். இன்றைய விருதுநகர் மாவட்ட தி.மு.க. என்பது ராமச்சந்திர னின் தி.மு.க-தான். இன்றையபொறுப்பாளர் களில் 70 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வில் இருந்து இவருடன் வந்தவர்கள்தான். தங்க பாண்டியன் தரப்பு தி.மு.க-வினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தப் பழைய பாசம்தான் அமைச்சரின் துறை மாறியதற்கு முதல் காரணம். கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகத்தான் சாத்தூரார் முதலில் இருந்தார். அம்மா கட்சி ஆட்களுக்குக் காட்டிய கருணை, மேலிடத்துக்குத் தெரிந்தது. "தலைவரே இதை நேரில் அழைத்து விசாரித்தார். இல்லை என்று இவர் மறுத்தார். டேப் ஆதாரம் ஒன்று ஒலிபரப்பானதும் ஒப்புக்கொண்டார். 'கட்சியை வளர்க்கணும்னா, எல்லாக் கட்சிக்காரங்களையும் கைக்குள்ள போட்டுக்கணும்' என்று இவர் சொல்ல... 'அந்த பாலிசி எல்லாம் தி.மு.க-வுல சரியா இருக்காது' என்றார் தலைவர். அதன் பிறகுதான் சுகாதாரம் பறிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சராக்கப்பட்டார்" என்கிறார்கள். இங்கும் நடந்த பசையான விவகாரங்கள் மேலிடம் வரை போய் கண்டிப்பு காட்டப்பட்டது.

சாத்தூராருக்கு நிழல் அவரது தம்பியும் அருப்புக்கோட்டை யூனியன் சேர்மனுமான கே.கே.எஸ்.எஸ்.வி.டி.சுப்பாராஜ்! ஆனால், இப்போது சாத்தூராரின் குடும்பத்துக்குள் புகைச்சல். இவருக்கு நாராயணன், ரமேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்தவர் நாராயணன், ஸ்பின்னிங் மில் பிசினஸ் என்று ஒதுங்கிவிட்டார். ஆனால், இளைய மகன் ரமேஷுக்கு அரசியலில் ஆர்வம். மேலும், தம்பியை வளர்த்து விட்டது போதும், நம் பிள்ளைகளை அரசியலில் வளர்த்துவிடுங்க என்று குடும்பத்தில் கோரஸ் குரல் ஒலித்திருப்பதாகத் தகவல். அதனால், இளைய மகன் ரமேஷை இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, தி.மு.க இளைஞர் அணி நிர்வாகியாக ஆக்கியுள்ளார்.

சாத்தூர் தொகுதியில் அண்ணாச்சிக்கு அடுத்தபடியாக இப்போது ரமேஷ்தான் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தலை காட்டி வருகிறார். இதற்கு வசதியாக, அருப்புக்கோட்டையில் ரமேஷுக்கு ஸ்பின்னிங் மில், கதிர் ஜவுளிக் கடை என்று வியாபாரத்தைத் தொடங்கிவைத்து, மகனை அங்கே செட்டில் செய்துவிட்டார். தீபாவளியை முன்னிட்டு கதிர் ஜவுளிக் கடைக்குத் துணி எடுக்க வரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர் அடிக்கும் வேலையை கழகத்தினர் பார்க்கிறார்கள்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஆரம்ப காலத்தில் பஞ்சு வியாபாரமும், ராமமூர்த்தி ரோட்டில் பூர்வீக வீடும், சில சொத்து நிலபுலன்களும் இருந்தன. அ.தி.மு.க. காலத்து அமைச்சராக இருந்தபோது, விருதுநகர் அருகே ஸ்பின்னிங் மில், விருதுநகர் ரயில்வே கேட் அருகே ராஜலட்சுமி தியேட்டர், மதுரை ரோட்டில் சுலோக்சனா தியேட்டர் என்று வளர்ந்தது. இப்போது அருப்புக் கோட்டையில் புதிதாக ஸ்பின்னிங் மில், ஜவுளிக் கடை வந்திருக்கிறது.

86-2006க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகள் அமைச்சர் பதவி இல்லாததால், பணக் கஷ்டமும் இருந்தது. பல கோடி ரூபாய்க்குக் கடனும் இருந்திருக்கிறது. இந்தக் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன என்கிறார்கள் சாத்தூராருக்கு நெருக்க மானவர்கள்.

இதேபோல் நெசவாளர் வாழ்க்கையும் சுபிட்சமானால் எப்படி இருக்கும்?