Published:Updated:

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
எஸ்.ஷக்தி, படங்கள்:தி.விஜய்
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

'வாழப்பாடி பக்கம் முத்தம்பட்டி கிராமத்துல இருந்து செல்வகுமார் எழுதுறேங்க. மூணு

வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்துல எனக்கு கழுத்து எலும்புல பயங்கர அடி. கிட்டத்தட்ட சாவைத் தொட்டுத் திரும்பி வந்தேன். ஆனாலும், இப்பவும் நிழல் மாதிரி மரணம் என்னைத் துரத்திட்டே இருக்கு. குடும்பத்துக்காக உழைக்கிறது, மன அமைதிக்காக சமூக சேவை பண்றதுன்னு மிச்சமிருக்கும் நாட்களை உபயோகமாக் கழிச்சுட்டு இருக்கேன். விபத்துல அடிபட்டு நிலைகுலைஞ்சு கிடந்தப்ப, திரும்ப வாழ்க்கையை எதிர்கொள்ளும் நன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்தவர் 'கோவை கிருஷ்ணமூர்த்தி. தெய்வத்துகிட்ட நான் போறதுக்குள்ள அந்த வாழும் தெய்வத்தை நான் சந்திக்கணும். வாய்ப்பு இருக்கா?' - ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிரம்பி வந்திருந்தது அந்தக் கடிதம்.

கோவை பாட்டு வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி... கர்னாடக இசைக் கச்சேரி மேடைகளில் பரிச்சயமான பெயர். பிறப்பிலேயே கை, கால்கள் இல்லாமல் முழுமை அடையாத உடலுடன் பிறந்தவர். ஆனால், முழுமையான மனிதர்... கலைஞர். வாய்ப்பாட்டுக் கலைஞர்களில் மிக முக்கியமானவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் தன்னம்பிக்கை வகுப்புகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'வாழ்நாள் சாதனையாளர்'! சினிமா ஆர்வலர்களுக்கு 'நான் கடவுள்' படத்தில் வானின் ஈசான மூலையை வெறித்தபடி நிற்கும் மௌன சாமியாராக நடித்தவர் என்பது அடையாளம்.

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

ஒரு ஞாயிறு முன் மதியம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குள் கால் வைத்தார் செல்வகுமார். "வாப்பா... வாப்பா!" என்று முகம் மலர வரவேற்ற கிருஷ்ணமூர்த்தி, சட்டென்று கீழே சரிந்து சற்றுத் தள்ளி இருந்த பாயினை நோக்கி உருண்டு, தவழ்ந்து சென்று நிலைகொண்டார். அதைப் பார்த்துப் பதறிப்போன செல்வகுமார், "ஐயா, நான் தூக்கிவைக்கவா? ஏன் எங்களுக்காக இவ்வளவு சிரமப்படுறீங்க?" என்று கேட்டார். "நீ இருக்குற வரைக்கும் எனக்கு உதவியா இருப்ப... அதுக்கு அப்புறம் நான்தானே எல்லாம் பார்த்துக்கணும். இப்பவே அப்படி இருந்துட்டுப் போறனே!" - மெல்லிய புன்னகையுடன் கிருஷ்ணமூர்த்தி சொல்ல, செல்வகுமார் கண்களில் நீர்த்துளி.

நடுங்கிய கரங்களுடன் அவர் கால்கள் இருக்கும் இடம் தொட்டு வணங்கியவர், "என் வாழ்க்கையில மறக்க முடியாத நிமிஷங்கய்யா இது!" என்று நெக்குருகினார்.

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

சட்டென்று அந்த இறுக்கத்தைக் கலைத்த கிருஷ்ணமூர்த்தி, "சொல்லுங்க செல்வா... என்ன விபத்து... எப்படி நடந்தது?" என்று கேட்டார். "கூலி வேலை பார்த்துட்டு இருந்தேன் ஐயா. மூணு வருஷம் முன்னாடி ரோடு வேலைக்காக லாரியில போயிட்டு இருந்தோம். அப்போ எதிர்பார்க்காம குறுக்கே புகுந்துட்ட ஒரு பாட்டி மேல மோதாம இருக்குறதுக்காக, டிரைவர் திடீர்னு பிரேக் போட்டாரு. அந்த வேகத்துல நான் லாரியோட கேபின்ல மோதிக்கிட்டேன். சின்ன சிராய்ப்புகூட இல்லை, ஒரு துளி ரத்தம்கூட வரலை. ஆனா, கழுத்து எலும்பின் பின்பக்க இணைப்பில் வலுவான அடி. அங்கேயே சுருண்டு விழுந்துட்டேன். ஒரு அடிகூட எழுந்து நடக்க முடியலை. படுத்த படுக்கையாக்கிடந்தேன்.

'செல்வா, நீ அவ்ளோதான்டா'ன்னு சூனியத்தை வெறிச்சுட்டு கிடந்தப்பதான், உங்க போட்டோவைக் காண்பிச்சார் என் நண்பர் சிவராஜ். உங்களைப்பத்தி நிறையச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, நான் ஆடிப் போயிட்டேங்க. நீங்க எதிர்கொண்ட சோதனைக்கு முன்னாடி என் வேதனை எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஒரு உத்வேகம் பிறந்தது.

அதுவரை வெட்டிப் போட்ட வாழை மட்டை மாதிரி இருந்தேன். அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாப் பயிற்சி எடுத்து... நிக்க, நடக்கப் பழகினேன். தொடர் பயிற்சி, விடா முயற்சி காரணமா ஓரளவுக்கு உடம்பு ஸ்திரமாகி நடக்க ஆரம்பிச்சேன். என்னை நம்பி அம்மா, மனைவி, மகன்னு மூணு பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் ஒருத்தன்தான் ஆதாரம். குச்சி ஐஸ், பிளாஸ்டிக் சாமான்னு என்னென்னமோ வித்துப் பொழைச்சுக்கெடக்கோம். அடிபட்ட கழுத்தெலும்பு பெரிய வைத்தியம் கேட்டுக் கதறுது. ஆனா, ஏற்கெனவே பார்த்த வைத்தியம் இழுத்துவிட்ட கடனே, என்னை எங்கேயும் நகர முடியாம முடக்கிப் போடுது. மேற்கொண்டு சின்னதா ஒரு அதிர்வோ, வலியோ அந்த எலும்புல இறங்குனா... ஆளே இருக்க மாட்டேனாம். இன்னும் என்னன்னவோ சொன்னாங்க. எதுவும் புரியலை. ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு மட்டும் புரியுது. போய்ச் சேர்றதுக்குள்ள எதையாவது சொல்லிக்கிற மாதிரி செய்யணும்னு மனசு துடிக்குது. ஆனா, வலிக்கும் வறுமைக்கும் நடுவுல என்ன பண்ண முடியும்னு தெரியலை. மனசு கிடந்து அல்லாடிட்டே இருக்கு. அது சமாதானமாகுற மாதிரி ஏதாவது சொல்லுங்க ஐயா!" என்று கிருஷ்ணமூர்த்தி முகம் நோக்கி அமர்ந்தார் செல்வகுமார்.

உதடுகளில் மென் புன்னகை படரவிட்ட கிருஷ்ணமூர்த்தி "ஒரு திடகாத்திர மனிதனாப் பிறந்து குழந்தைப் பிராயம், சிறு வயது, இளைஞன்னு பல பருவங் களையும் சந்தோஷமா, ஆரோக்கியமாக் கடந்து வந்த நீங்க, இந்த ஒரு பிரச்னைக்காகத் தளர்ந்து உக்காரணுமா? கூடவே கூடாது! பிறந்ததுல இருந்தே உடல் அளவுல சிறு குழந்தையா இருக்கிற என்னோட மன உறுதி ஆயிரம் பேருக்குச் சமம். சும்மா பெருமைக்காகச் சொல்லலை. இறைவன் தன் படைப்புகள் அனைத்துக்கும் ஏதாவது ஒரு சிறப்புத் தகுதி வெச்சிருப்பான். அது என்னன்னு கண்டுபிடிச்சு வெளிப்படுத்துறவங்களை, இந்த உலகம் சாதனையாளர்னு கொண்டாடுது. அப்படி அவன் எனக்குப் பரிசாக் கொடுத்தது அபார மன உறுதி. அந்த மன உறுதிதான் எதுக்கும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங் கிற வைராக்கியத்தை எனக்குள் உறுதி ஆக்குச்சு.

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

பள்ளிக்கூடம் போய்ப் படிக்கிறது சாத்தியம் இல்லைன்னு, வீட்ல இருந்தே தபால் வழியில் 12-வது முடிச்சேன். கன்னத்துக்கும் தோளுக்கும் இடையில பேனா புடிச்சு நான் பரீட்சை எழுதுனப்ப, எல்லாரும் அதிசயிச்சு நின்னாங்க. அதே உறுதியோடு ஹோமியோபதி டிப்ளமோ முடிச்சேன் செல்வா.

எங்க குடும்பம் பரம்பரையா சங்கீதத்துல ஊறிய குடும்பம். அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள்கிட்ட இருந்து சங்கீதத்தை எனக்குள் இறக் கிக்கிட்டேன். எங்க பழைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த மீனாட்சியம்மாள் எனக்கு சங்கீதத்துல எவ்வளவோ சொல்லிக் கொடுத்தாங்க. என்னோட கை, கால்களா இருந்த இந்த மனுஷங்களா லேயும், மன தைரியம் தந்த ஆண்டவனாலும் சுமார் 2,500 மேடைக் கச்சேரிகள் பண்ணிஇருக்கேன். இந்தியாவுல பல மாநிலங்கள், மலேசியான்னு பல இடங்களுக்கு ஆண்டவன் என்னைத் தன் கையில் தாங்கிட்டுப் போயி பாடவெச்சுட்டு இருக்கான். இது எல்லாம் சாத்தியமாவதற்கு என் மன தைரியம் மட்டும்தான் காரணம். என்கிட்ட இருக்குற அதே மன தைரியத்தை உங்ககிட்டயும் நான் உணர்றேன். அந்த மன தைரியத்தோடு கூடுதலா ரெண்டு கை, ரெண்டு கால் இருக்கு. பிரமாதமா சிந்திக்கிறீங்க. இதுக்கு மேல என்ன வேணும். வலி அதுபாட்டுக்கு இருக்கட்டும். முன்னேறுவதற்கான வழியை மட்டும் இப்போ தைக்குப் பாருங்க!" என்று தீர்க்கமான குரலில் முழங்கி நிற்க, செல்வகுமார் முகத்தில் நவரச பரவசம்!

கலங்கிய கண்களுடன் மீண்டும் அவரது கால் இருக்கும் இடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். "நான் இப்போ 'மதுரம்'னு ஒரு சமூக சேவை அமைப்பு நடத்துறேங்கய்யா. ஏதோ என்னால முடிஞ்ச உதவிகளை எங்க பகுதியில் பண்ணிட்டு

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!

இருக்கேன். விருப்பம் இருக்கிறவங்க ஆதரவோட சின்னச் சின்னதா சமூக வேலைகள் பண்ணிட்டு இருக்கோம். அதை இன்னும் பெருசாப் பண்ணணும்!" என்று செல்வகுமார் சொல்ல, அவரது முகத்தைத் தன் பிஞ்சுக் கரங்களால் எட்டி தட்டிக் கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

விடை பெறும் நேரத்தில் செல்வகுமார் தயங்கித் தயங்கி ஒரு வேண்டுகோள் வைத்தார்... "மேடைக் கச்சேரியின்போது உங்ககிட்டே அடிக்கடி ஒன்ஸ் மோர் கேட்கிற பாட்டை எனக்காகப் பாடுவீங்களா?" ஆதரவாகக் கண்கள் மூடி இசைந்த கிருஷ்ணமூர்த்தி, "கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்..." என்று உருக்கும் குரலில் லயித்துப் பாடத் தொடங்க... செல்வகுமார் முகத்தில் பரிபூரண திருப்தி!

ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!
ஆசை: வலிகளை மற வழிகளை நினை!