'இரண்டு இசைக் குறிப்புகளுக்கு இடையேயான மௌனம்தான் வாழ்க்கை' - என்றார்
ஓஷோ. ஆனால், அந்த மௌனத்தையும் இசையால் நிரப்பத் துடிக்கிறார்கள் அந்த இளைஞர் கூட்டத்தினர். 'ஸ்ருதிலயா'. அண்ணா பல்கலைக்கழகத்தின் மெல்லிசைக் குழு!
"உலகப் பொது மொழியான இசையை வாழ்க்கையில் இருந்து எங்களுக்குத் தனியாகப் பிரித்துப்பார்க்கத் தெரியாது. அதனால்தான் படிப்போடு சேர்த்து இசையையும் அரவணைத்து வாழ்கிறோம்" என்கிற ரெக்ஸ், வயலினில் ஏழாவது கிரேடு முடித்த கில்லி. "10 வருடங்களுக்கு முன் உருவானது ஸ்ருதிலயா. ஒவ்வொரு வருடமும் சீனியர்கள் வெளியேறும் போது, ஜூனியர்கள் உள்ளே வருவாங்க!" என்று தகவல் சொல்லும் ஜோஷ்வா அந்த அணியின் கிடாரிஸ்ட்.
"நாங்க எதையும் ஜாலியா எடுத்துக்கிறது இல்லை. எங்க திறமையை நிரூபிக்கிறதுக்காகக் கஷ்டமான சினிமா பாடல்களைத்தான் தேர்ந்தெடுப்போம். 'தளபதி' படத்துல வர்ற 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி' பாட்டோட ஆர்கஸ்ட்ரைசேஷன் அவ்வளவு கஷ்டம்! ஆனா, அப்படி கஷ்டப்படுவதால்தான் எங்களுக்குன்னு இப்போ ஒரு தனி முத்திரை இருக்கு!" என்று பூரிக்கிறார் முத்து நாராயணன். பியானோவில் ஆறாவது கிரேடு முடித்து இருக்கும் இவர், ஸ்ருதிலயாவின் கீ-போர்டு ப்ளேயர்.
|