ஸ்பெஷல் -1
Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' டைப் மந்திரிதான் சாமிநாதன். ஆளைப் பார்த்தால்... அமைதியின் சொரூபம். பேசிப் பார்த்தால்... சாந்த வடிவம். ஆனால், அரசியல்வாதிக்கான அத்தனை இலக்கணங்களும் மெத்தப் பொருந்திய மனிதர். நெடுஞ்சாலை என்ற பசையான துறையைக் கையில் வைத்திருப்பதால், இவரைப் பார்த்து கேபினெட் மனிதர்களே பொறாமையில் பொருமுவது உண்டு. அசைக்க முடியாத இடத்தை ஸ்டாலினிடம் பெற்றதால், கிடைத்த கொடை!

வெள்ளக்கோயில் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டதால் 'வெள்ளக்கோயில் சாமிநாதன்' என்று அறியப்படும் இவரை, தொடக்க காலத்தில் 'முத்தூர் சாமிநாதன்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இன்றைய திருப்பூர் மாவட்டத்தின் செழிப்பான பகுதியான முத்தூர், இவரது பூர்வீகம். பேங்கர் பெருமாள் கவுண்டர் என்ற பெரும் பணக்காரர், இவரது அப்பா. பணம் இருந்தாலும் படிப்பும் இருக்க வேண்டும் என்று, கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சாமிநாதனைச் சேர்த்துவிட்டார்கள். கல்லூரிக் காலத்தில், அரசியல் ஆர்வம் அதிகமானது. டி.ராஜேந்தரின் அடுக்கு மொழியின் ரசிகர். டி.ஆர். ரசிகர் மன்றத்துடன் தொடர்பில் இருந்த காலமும் உண்டு. ஆதவன் அச்சகம் என்பதில் பங்குதாரராக வலம் வந்தார். இவரது சித்தப்பா கோவிந்தசாமிக் கவுண்டர் தீவிர தி.மு.க. அனுதாபியாக இருந்ததும், தூரத்து உறவினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முக்கியஸ்தராக இருந்ததும், அந்தக் கட்சியின் பக்கமாக சாமிநாதனை நெருங்கவைத்தது.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களைக் கட்சிக்குள் வேண்டாத விருந்தாளியாகப் பார்ப்பார்கள். 'சின்னப் பசங்களை' பெருசுகள் உள்ளேவிடுவதும் இல்லை, மதித்து மரியாதை கொடுப்பதும் இல்லை என்ற நிலைமையில்தான், மு.க.ஸ்டாலின் உள்ளே நுழைந்தார். பழம் தின்று கொட்டை போட்ட பெருந்தலைகளால் உதாசீனப்படுத்தப்படும் இளைஞர்களுக்கு அமுதமாக இனித்தது, 'இளைஞர் அணி' என்ற அமைப்பு. நகரக் கழகங்களில்கூட நுழைய முடியாத இளைஞர்கள், இளைஞர் அணியில் மாவட்டக் கழகத்தில் தைரியமாக மையம்கொண்டார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் பதவி இவருக்குக் கிடைத்தது. மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த எவரெஸ்ட் கணேசன், இந்தப் பதவியை சாமிநாதனுக்கு வாங்கித் தந்தார். கட்சியில் பதவி வாங்கியாச்சு... அடுத்தது என்ன? எம்.எல்.ஏ-தானே?

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

வெள்ளக்கோயில் தொகுதியில் அசைக்க முடி யாத ஆளாக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த துரை ராமசாமி. 'மிராசுதார் ராமசாமி' என்பார்கள். அவரை எதிர்த்து அரசியல் நடத்தியவர் தி.மு.க-வைச் சேர்ந்த அப்பன் பழனிச்சாமி. இவரும் ஒரு கட்டத் தில் தி.மு.க-வில் இருந்து விலகினார். எனவே, தி.மு.க-வுக்கு முக்கியஸ்தர் இல்லாத நிலைமை. 96 தேர்தலில் யாரை நிறுத்துவது என்ற குழப்பம் தலைமைக்கு ஏற்பட்டது. துரை ராமசாமியைப்போல சாதி பலமும் பண பலமும் இருப்பவரைத் தேடிய போது, சாமிநாதனை அழைத்து வந்து காட்டினார் ஸ்டாலின். 'அவரைப்போல பங்காளிகள் உறவுக்காரங்க இவருக்கும் அதிகம்' என்று காரணம் சொல்ல... 'இதே ஆட்கள்தானய்யா அவருக்கும் உறவுக்காரங்களா இருப்பாங்க' என்று கருணாநிதி கமென்ட் அடித்தாராம். ஸீட் வழங்கப் பட்டது. சாமிநாதன் வென்றார்!

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

சபைக்கு அமைதியாக வந்து போகும் எம்.எல்.ஏ -வாகத்தான் இருந்தார் சாமிநாதன். அடுத்து நடந்த தேர்தலில் சாமிநாதன் இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் நிற்க... துரை ராமசாமிக்கு அ.தி.மு.க. வாய்ப்பு வழங்க மறுத்தது வசதியாகப்போனது. எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்து அவர் வாக்குகளைப் பிரிக்க, சாமிநாதன் இன்னும் எளிதாக வென்றார். 2006 தேர்தலிலும் சாமிநாதன் வென்றதும், ஸ்டாலின் அவரது பெயரை அமைச்சரவைக்குள் சேர்த்தார். மந்திரி சபையில் தனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றே சாமிநாதன் காத்திருந்தார். ஏனென்றால், கோவை வட்டாரத்தில் இருந்து பொங்கலூர் பழனிச்சாமி தவிர, யாரும் ஜெயித்து வராததால் கவுண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு வந்து சேரும் என்று நினைத்தார். ஆனால், நெடுஞ்சாலைத் துறை என்ற அதிமுக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. ஸ்டாலின் தனக்கு நெருக்கமான, உண்மை யான ஆட்களுக்கு முக்கிய துறைகளைத் தர வேண் டும் என்று நினைத்தபோது, சாமிநாதனுக்கும் லக் அடித்தது. நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து சிறு துறைமுகங்களும் இவர் வசம்தான் உள்ளன.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

விவசாயம், ஃபைனான்ஸ், பனியன் கம்பெனி, தார் தொழிற்சாலை, கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், அலாய் வீல் தயாரிப்பு, சில ஸ்பின்னிங் மில்களுக்கு உதவி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இவரது பெயரைச் சொல்லி, தொழில்கள் இன்று திருப்பூரையும் அதன் எல்லைகளையும் தாண்டி இருக்கின்றன. பொதுப் பணித்துறையைப் போலவே நெடுஞ்சாலைத் துறையிலும் கான்ட்ராக்டர்கள் மொய்த்துக்கொண்டு இருப்பார்கள். பசையானவர் களுக்கு மட்டுமே கான்ட்ராக்ட்டுகள் வழங்கப்படுவதாக தி.மு.க. வட்டாரத்திலேயே வருத்தங்கள் உண்டு. இதனால், பாதிக்கப்பட்ட தி.மு.க. கான்ட் ராக்டர்கள் தங்களது வருத்தங்களைத் தலைமைக்குத் தபால் அனுப்பிவிட்டுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்த விஷயங்களில் அமைச்சர்கூட அதிகம் தலையிடவில்லை. தனது உறவினர்களான மூவர் வசம் முழுப் பொறுப்பையும் வழங்கி இருக்கிறார். 'எஸ் மனசு வெச்சாதான் இங்க எதுவும் நடக்கும்' என்பது கான்ட்ராக்டர்களின் ரகசிய வார்த்தை. 'கட்சிக்காரர்களுக்குக் கசப்பு... உறவினர் களுக்கு உற்சாகம்' என்பது இவர் குறித்து கொங்கு வட்டாரம் அடிக்கும் விமர்சன வார்த்தைகள். ஒரு தொண்டர் சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், சொல்லியாக வேண்டும். 'இவரை நம்புறதைவிடப் பக்கத்துல இருக்கிற காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை நம்பினால் சில நல்லதாவது நடக்கும்'!

சாமிநாதனைப் பொறுத்தவரை, அவருக்கு ஆரம்ப காலத்தில் அதிகமான இடைஞ்சலாக இருந் தவர், என்.கே.கே.பி.ராஜா. இருவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஸ்டாலின். ஆனால், ராஜாவின் குடைச்சலை சாமிநாதனால் தாங்க முடியவில்லை. 'மந்திரி ஆகிவிட்டால் மட்டும் போதாது' என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம், மந்திரிகள் அனைவருக்கும் தெரியும். ஈரோடு மாவட்டத்தில் ராஜாவுக்குத் தரப்பட்ட மரியாதையில் அரை சதம்கூட இவருக்குத் தரப்படவில்லை. அதற்காக ராஜாவை அதட்டும் சக்தியும் சாமிநாதனுக்கு இல்லை. சரியான காலத்துக்காகக் காத்திருந்தார். 'திருப்பூரைத் தலைமையகமாகக்கொண்ட தனி மாவட்டம் அமைக்க வேண்டும்' என்று அந்தப் பகுதி மக்கள் போராடியபோது, விழித்துக்கொண்டார் சாமிநாதன். தனது வெள்ளக்கோயில் தொகுதியைச் சத்தம் இல்லாமல் திருப்பூரில் கொண்டுபோய்ச் சேர்க்க அவரே சிக்னல் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அந்தப் பகுதி மக்கள் விரும்பவில்லை. 'வெள்ளக்கோயிலைத் திருப்பூருடன் இணைக்காதே!' என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மீறிச் சேர்க்கப்பட்டது. புதிய திருப்பூர் மாவட்டச் செய லாளராக சாமிநாதன் அறிவிக்கப்பட்டார். அதுவரை தனது பூர்வீக ஊரான முத்தூரில் இருந்தவர், திருப்பூரில் குடியேறினார்.

பொங்கலூர் மணி எம்.எல்.ஏ. இவரைக் கடுமையாக எதிர்க்கும் மனிதர். திருப்பூர் மேயர் செல்வராஜும் அதே ரகம்தான். கட்சி முக்கியஸ்தர்களே இப்படி இருக்க, இவரது எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. சிவசாமியும் பொள்ளாச்சி நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. சுகுமாரும் கைப்பற்றியதால், தலைமைக்கு இவர் மீது வருத்தம். தொடக்க காலத்தில் இருந்து ஸ்டாலினுடன் நெருக்கம், அதன்பிறகு, ராஜாத்தி - கனிமொழி குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு என்று தலைமையைச் சுற்றியே வலம் வந்தால்போதும் என்று நினைத்துவிட்டார்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

துறையைப் பொறுத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வாரி இறைக்கப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் ஓரளவு பரவாயில்லை என்று சொல்ல, மிக முக்கியமாக இருக்க வேண்டியது சாலை வசதிகள்தான். புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஒரு வழிச்சாலைகள் இரு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இன்றைக்கு தார் சாலைகள் இல்லாத கிராமங்கள் குறைவு என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருப்பது நமக்கு நல்ல விஷயம். சாலை ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் தொகையும் அதிகமே. இதில் சிக்கலே சாலைகளின் தரத்தைப்பற்றியதுதான். ஒரு நகரத்தின் பிரதான சாலையில் போடப்படும் புதிய சாலைகூட அடுத்த மூன்று மாதங்களில் குழி விழுந்து, பள்ளமாகிவிடுகிறதே என்ன காரணம்? கான்ட்ராக்ட் விட்டு, பில் பாஸ் பண்ணுவதோடு நெடுஞ்சாலைத் துறையின் வேலை முடிந்துவிடுவது இல்லை. யார் கான்ட்ராக்ட் எடுத்து ரோடு போட்டாலும், கருணாநிதி போட்ட ரோடு, ஜெயலலிதா போட்ட ரோடு என்றுதான் பொதுமக்கள் புகார் சொல்வார்கள். அந்த அக்கறை இந்தத் துறையில் எவர் அமைச்சராக இருந்தபோதும் இருந்தது இல்லை. அதற்கு சாமிநாதனும் விதிவிலக்கு அல்ல. சென்னையில்கூட அண்ணா சாலை, காமராஜர் சாலை, தரமணி ராஜீவ் காந்தி சாலை நீங்கலாக குண்டு குழி இல்லாத சாலைகள் உண்டா? தலைநகரே இப்படி என்றால், தமிழகத்தின் இதர பகுதிகளைச் சொல்லவே வேண்டியது இல்லை. 61 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தமிழகத்தில் சாலைகள் உண்டு என்பார்கள். அத்தனையும் கண்ணாடியாக இழைக்க முடியாது. ஆனால், தண்ணீர் தேங்காத இடமாக்க முடியும் அல்லவா? ரோடு போடு கிறார்கள். மறுக்கவில்லை. சரியாகப் போடுவது இல்லை. அதுதான் இன்றைக்குப் பெரிய பிரச்னையே!

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் நிலையில் மந்திரி இல்லை. தொகுதி மறுசீரமைப்பில் வெள்ளக் கோயில் தொகுதியே இப்போது இல்லை. தேர்தல் கமிஷன் எல்லாம் 'இவர்களின்' கை மீறிய செயல் அல்லவா? எனவே, அதைத் தடுக்க முடியாத நிலையில், திருப்பூர் தொகுதியைக் குறிவைத்துக் களத்தில் இறங்கி உள்ளார். உடுமலைப்பேட்டையும் இவரது பார்வையில். அல்லது காங்கேயம் போகலாமா என்றும் பார்க்கிறார். இந்தச் சிக்கலில் அவரால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை!