சினிமா
Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

'அமைச்சர் கோ.சி.மணிக்கு இப்போதெல்லாம் காலையில் நடந்தது மாலையில் மறந்துவிடுகிறதாம்' என்று ஒரு பத்திரிகையில் துணுக்கு ஒன்று வெளியானது. அதைப் பார்த்துக் கோபப்பட்ட உதவியாளர், பத்திரிகையை அமைச்சரிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த அமைச்சர், "ஆமாம்ப்பா... சில நேரத்துல மறந்துபோயிடுதுல்ல. சரியாத்தான் போட்டிருக்கான்!" என்றாராம். ஒரு காலத்தில் தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் இவர்! அவரை 'சின்னக் கலைஞர்' என்றும் சொல்வார்கள்!

கருணாநிதியைவிட ஐந்து வயதுதான் குறைவு. தி.மு.க. ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கருணாநிதியும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால், அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி. தலைவரைப்போலவே தலையை நேர் வகிடு எடுத்து, அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து... இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளைப் பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். அதனால்தான், 'பழகத் தெரிந்த நாள் முதலாக என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட, என் உயிரனைய, உயிருக்கு உயிரான, உயிரினும் உயர்வான உடன்பிறப்பு' என்று கருணாநிதியால்உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டார். ஒருநாள் சட்ட மேலவையில் முதல்வர் எம்.ஜி.ஆர், 'தம்பி கோ.சி.மணி அவர்கள்' என்று சொன்ன தும், "என்னை முதல்வர் அவர்கள் தம்பி என்று சொல்லக் கூடாது. அவர் எனக்கு அண்ணன் அல்ல. நான் கலைஞர் ஒருவருக்கு மட்டும்தான் தம்பி" என்று சொன்னதும் எம்.ஜி.ஆரின் முகமே இருண்டதாம். அந்த அளவுக்குப் பச்சை தி.மு.க -காரர்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

தி.மு.க-வில் 'சரியான' ஆளைப் பிடித்தால் இன்று யாரும் எந்தப் பதவியையும் கைப்பற்றிவிடலாம் என்ற நிலைமை. ஆனால், அந்தக் காலத்தில் தைரியத்தையும் உழைப்பையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு கட்சிக்குள் பதவியைப் பெற்ற ஒரு சிலரில் கோ.சி.மணியும் ஒருவர். ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக வும், மூன்று முறை அமைச்சராகவும், ஆறு ஆண்டு காலம் மேலவை உறுப் பினராகவும், 1983 முதல் தி.மு.க-வின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துச் செயலாளராகவும் வலம் வந்தவர். கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராக அவர் இருந்தபோது, இந்தியாவிலேயே அது முதன்மை வங்கி யாகத் தேர்வு பெற்றது. கும்பகோணத்தை மாதிரி நகரமாக மாற்றிக் காட்டியதாகச் சொல்வார்கள். முதலில், வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சியைக் கவனித்தார். உண்மையில், கோ.சி. மணியின் நிர்வாகத் திறமை முழுமையாகப் பளிச் சிட்ட காலம் அதுதான். அதிகாரிகள் சொல்லுக்கெல் லாம் தலையாட்டாமல், தனக்குச் சரியெனப் பட்ட தைச் சாதித்துக் காட்டினார். கிராமங்களில் இருந்த சகதியான சாலைகள் சிமென்ட்டாக இறுக்கம் பெற்றது இவரால்தான். இம்முறை ஸ்டாலின் அந்தத் துறையைக் கைப்பற்றியதால், இவருக்கு கூட்டுறவுத் துறை தரப்பட்டது.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

என்னதான் உற்சாகம் உள்ளத்தில் இருந்தாலும், முதுமையும் தளர்வும் மனிதனைச் செயலிழக்கச் செய்யும் என்பது இயற்கையின் விதி. முத்து விழா வைக் கடந்த மணி, உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரால் கூட்டுறவுத் துறையைக் கவனிக்க முடிய வில்லை. உணவு அமைச்சராக இருந்த எ.வ.வேலு வுக்கு கூட்டுறவு தரப்பட்டது. மணிக்கு ஏதாவது துறை தர வேண்டும் என்பதற்காக, பொன்முடியிடம் இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் என்ற துறை வழங்கப்பட்டது. பெரும்பாலும் மருத்துவ மனை, வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், பரபரப்பு தேவைப்படாத முன்னாள் ராணுவத்தினர், புள்ளியியல் போன்றவற்றைக் கவனித்தார். கொஞ்சம் உடல்நிலை சரியானதும், கூட்டுறவைத் திரும்பக் கேட்டார் மணி. அவரது கோரிக்கையை கருணாநிதி நினைத்தாலும் தட்ட முடியாது என்பதால், மீண்டும் கூட்டுறவு தரப் பட்டது. ஆனாலும், முன்னர்போல அவரால் செயல்பட முடியவில்லை.

'அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாமே?' என்று ஜாடைமாடையாக கருணாநிதியும் சொல்லிப்பார்த்தார். ஆனால், 'பதவியில் இருந்து தூக்கிட்டா, என்னை யாரும் மதிக்க மாட்டாங்க' என்று பாவமாகச் சொன்னார் மணி. துறையைச் சரியாகக் கவனிக்கும் மந்திரி வேண்டுமே என்ற முதலமைச்சர் கவலையா, கட்சியை வளர்த்த மணியைத் திருப்திப்படுத்தியாக வேண்டுமே என்ற தலைவர் கவலையா... என்று பார்த்தால், இரண்டாவது விஷயத்துக்கே கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்தார்.

1983 முதல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்தவர் கோ.சி.மணி. அந்த மாவட்டம்தான் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நிர்வாகக் காரணங்களுக்காக மாவட்டம் பகுக்கப்பட்டபோது, சுருங்கிய தஞ்சையின் மாவட்டச் செயலாளராகத் தொடர்ந்தார். ஆனால், கடந்த முறை அதற்கும் சிக்கல் வந்தது. பழனிமாணிக்கத்தைக் கொண்டுவர ஸ்டாலின் திட்டமிடுவார் என்று கோ.சி.மணி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அண்ணனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல தஞ்சைக்கே ஸ்டாலின் வந்து தங்கினார். உடல் நிலையைக் காரணம் காட்டி விட்டுத்தரச் சொன்னார்கள். இன்றைய நிலையில் மாவட்டமும் இல்லை, மந்திரி சபையில் எதிர்பார்த்த செயல்பாடும் இல்லை என்பதே யதார்த்தமான நிலை. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்துக்கு திருவாரூர் வந்த ஸ்டாலின், "திருவாரூர், நாகை மாவட்டங்கள் ஈட்டிக் கொடுத்த வெற்றியை தஞ்சை மாவட்டம் தரவில்லை. இதைச் சொல்வதால், அண்ணன் கோ.சி.மணி கோபித்துக்கொள்ளக் கூடாது" என்று பேசியதுகூட இவரை மனம் வருத்தமடையச் செய்தது. பொதுவாகவே, அரசியலில் ஒரு மூத்த மொழி உண்டு. 'முழு மரியாதை இருக்கும் காலத்திலேயே முழுக்கு போட்டுவிட வேண்டும்' என்பார்கள். ஆனால், அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமும், கால் நூற்றாண்டு நிர்வாகத் திறமையும்கொண்ட மந்திரி இதை உணரவில்லை.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அதைவிடச் சோகம், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இழப்புகள். அவரது குடும்பம் மிக விசாலமானது. சாவித்திரி, கிருஷ்ணவேணி என இரண்டு மனைவிகள். அவர்களுக்கு மதியழகன், இளங்கோவன், புஷ்பா, தமிழரசி, அன்பழகன், தனபால், சின்னத்துரை, புகழேந்தி எனப் பல வாரிசுகள். மூத்த மகன் மதியழகன், குத்தாலம் ஒன்றியத் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துபோனார். மனைவிகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தார்கள், மகளும் இறந்தார் எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் துன்பம் அவரைச் சூழ்ந்ததும் அவரது உடல்நலிவுக்கு இன்னொரு காரணம். 'அமைச்சருக்கு இந்த சோகச் சம்பவங்கள் தொடராமல் இருந்திருந்தால், நல்ல உடல்நலத்துடன் துறையை சிறப்பாகக் கவனித்திருப்பார்' என்கிறார்கள் கோட்டையில்.

அதையும் தாண்டி, துறையில் சில சாதனைகள் நடந்திருப்பது உண்மைதான். கூட்டுறவுச் சங்கமும் வங்கிகளும், வறுமைக்கோட்டில் இருக்கும் மக்களையும் விவசாயிகளையும் கைதூக்கிவிடும் காரியத்தைப் செய்யவே உருவாக்கப்பட்டவை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், டெபாசிட்டாக வாங்கிய பணத்தைக்கூட திருப்பிக் கேட்டால் கொடுக்க முடியாத அளவுக்குத்தான் பல சங்கங்கள் இருந்தன. கோ.சி.மணி வந்ததும் பார்த்த முதல் காரியம், டெபாசிட் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார். சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருந்த அமைப்புகளைக் கொஞ்சம் கை தூக்கிவிட்டார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் கையிருப்பைக் கணிசமாக உயர்த்த முயற்சித்தார். நலிந்த சங்கங்களுக்கு 20 லட்சம் டெபாசிட்டுக்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால், கிராமப்புற மக்களது வாழ்வாதாரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அதேபோல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இருந்து இதைக் கேள்விப்பட்டு வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஆனால், அது மட்டும் போதுமா?

எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் நுழைந்து செல்லரித்தது மாதிரி, கூட்டுறவுச் சங்கங்களையும் அது கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது. இன்றைக்கு ஆளும் கட்சிக்காரர்கள் கை அரிப்புடன் பார்ப்பது கூட்டுறவு அமைப்புகளைத்தான். ஆட்சி மாறியதுமே எந்த சங்கத்துக்குள்ளாவது புகுந்துகொண்டால், ஐந்து வருடங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைப்பார்கள் அரசியல் பிரமுகர்கள். தி.மு.க. இப்போது ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவுத் தேர்தலை நடத்தியது. இதில் தனது கூட்டணிக் கட்சிக்குக்கூட இடத்தை விட்டுத்தர முடியாத அளவுக்கு ஆளும் கட்சியே அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சி.பி.எம்மும், பா.ம.க-வும் பின்வாங்காத நிலையில், தேர்தலையே முதல்வர் கருணாநிதி தள்ளிவைத்தார். 'அரசு தள்ளிவைத்தது சரிதான்' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மேல் முறையீட்டு பெஞ்சு ஏற்க மறுக்க, இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் கிடக்கிறது. அதாவது, கூட்டுறவுத் தேர்தலைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்பதுதான் இவரது ஆட்சிக் காலத்து யதார்த்தம்.

கூட்டுறவுச் சங்கத்தில் யார் உண்மையான உறுப்பினரோ அவரே பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்காமல், இந்தத் துறையை எத்தனை கோ.சி.மணிக்கள் வந்தாலும் திருத்த முடியாது. குஜராத் மாநிலத்தில் ஒருவர் உண்மையான உறுப்பினராக இருந்து, அவர் கடன் வாங்கி, அந்தக் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்திஇருந்தால் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். ஆனால், இங்குதான் ஆட்சி மாறிய மறுநாளே 10 ரூபாய் கட்டணம் கட்டி உறுப்பினர் ஆனவர், உடனே... தலைவர், செயலாளராக மாறிவிட முடியும். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் அமைப்பு 'அமுல்' ஆக மாறியது குஜராத் அரசாங்கத்தின் வெற்றி என்றால், அப்படி ஒரு மரியாதையான நிறுவனத்தை தமிழகத்தில் உருவாக்காமல் போனது யாருடைய தோல்வி? திறமையானவர், தைரியமானவர், நிர்வாக அனுபவம் வாய்ந்தவர் என்றெல்லாம் பெயரெடுத்த கோ.சி.மணியையும் உள்ளடக்கித் தானே இவை பார்க்கப்படும்!

ஈரோட்டில் இரண்டு சங்கங்களில் தேர்தல் நடத்த முடியவில்லை என்று தகவல் வந்ததும், அந்த மாவட்டத்து அமைச்சர் ஒருவரை அழைத்து, 'உங்க ஊர்ல தேர்தல் நடத்த முடியாததை நினைச்சு உங்களுக்கே வெட்கமா இல்லையா?' என்று கண்டித்தவர் கோ.சி.மணி. திடீரென ஒரு அலுவலகத்துக்கு விசிட் போனார். மூத்த அதிகாரியை

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

அங்கு காணோம். எங்கே என்று கேட்டார். மத்திய வங்கிக்குப் போயிருப்பதாகத் தகவல் சொன்னார்கள். உடனேயே மத்திய வங்கிக்கு போன் போட்டு, இன்னார் வந்திருக்கிறாரா என்று விசாரித்தார். 'எந்த அலுவலகத்துக்கும் வருகைப் பதிவேடு எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் வேறு அதிகாரிகள் யாரெல்லாம் வருகிறார்கள் என்ற ரிஜிஸ்டரும் அவசியம்' என்று உத்தரவு போட்டு, நோட்டு வைக்கச் சொன்னபோது, கோ.சி.மணியைப் பார்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே வியந்தார்கள்.

கட்சியில் தனக்கு பொருளாளர் பதவி தேடி வந்தபோது, ஆற்காடு வீராசாமிக்கு விட்டுக்கொடுத்தவர்தான் கோ.சி.மணி. கட்சியில் வைகோவால் பிளவு ஏற்பட்டபோது, தயங்காமல் தஞ்சையில் பொதுக் குழுவை நான் நடத்திக் காட்டுகிறேன் என்று சொன்னதும் இதே கோ.சி.மணிதான். 'நாங்கள்தான் உண்மை யான தி.மு.க.' என்று அறிவிக்கப்பட்ட புகைப் படத்தில் தலையைக் காட்டாமல் ஒதுங்கி நின்றுகொண்டவரும் இவர்தான். உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பதிலளித்து, பெரும்பாலும் காகிதங்களைப் பார்க்காமலேயே மூன்று மணி நேரங்களுக்கு மேல் பேசியதும் அவரது சாதனைதான். தன்னுடைய பழைய சாதனைகள் மறந்துபோவது மாதிரியே அவர் இப்போது நடந்துகாட்ட வேண்டுமா?