சினிமா
Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

படித்த புத்தகம் வசந்த பாலன், இயக்குநர்.

எட்எட்டு!

"இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, கருப்பையாவுக்குப் பார்வை பறிபோனது. சென்னை பார்வையற்றோர் பள்ளியில் படித்தான். 10-ம் வகுப்பில் 500-க்கு 421 மதிப்பெண்கள் எடுத்து, பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். விடுமுறைக்கு ஊர் திரும்பிய கருப்பையா, ஊரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமுக்குச் செல்கிறான். அங்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கண்ணுக்குப் பார்வை வருகிறது. 17 ஆண்டு இருட்டு முடிவுக்கு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 'பார்வையற்றோருக்கு மட்டும்தான் பதிவோம், உனக்குத்தான் பார்வை தெரிகிறதே' என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். பார்வை வந்தது சந்தோஷமா... துக்கமா? கொஞ்ச நாட்கள் அரசு சலுகைக்காக, வேலைக்காக அலைந்து திரிந்து சலித்து, தேனி பஸ் ஸ்டாண்டில் பழக்கடை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார். அந்த கருப்பையாதான் எழுத்தாளர் தேனி சீருடையான். 'கடை' என்கிற அவர் முதல் நாவல், இன்று பல்கலைக்கழகத்தின் பாடநூல். அவருடைய பார்வையற்ற வாழ்க்கையின் நிஜ தரிசனம்தான் 'நிறங்களின் உலகம்' நாவல். இரானிய Color of Paradise படத்தை நாம் கொண்டாடுகிறோம். இந்தக் கதை படமானால் அதைவிடச் சிறந்த படமாக இருக்கும்!"

வாங்கிய பொருள்கபிலன், கவிஞர்.

எட்எட்டு!

"நான் பிறந்த ஊர் பாண்டிச்சேரி. என் அக்கா மகன் அசோக்குமார் லெமிரான். பிரான்ஸில் ஏர்போர்ட்டில் பணிபுரிகிறான். சென்ற வாரம் அவன் இங்கு வந்திருந்தபோது லேட்டஸ்ட் மாடல் லேப்டாப் ஒன்றை எனக்குப் பரிசளித்தான். அந்த லேப்டாப்பில், நவீன வசதிகள் அனைத்தும் உண்டு. அதைக் கற்றுக்கொள்ளவே எனக்கு ஒரு வாரம் பிடித்தது. 'யுத்தம் செய்' படத்துக்காக மிஷ்கின் ஒரு தாலாட்டுப் பாடல் எழுதச் சொன்னபோது, பென்டிரைவில் டியூனை வாங்கி, அந்த புதிய லேப்டாப்பில் போட்டுக் கேட்டுதான் அந்தப் பாடலை எழுதினேன்!"

சென்ற இடம் பிரளயன், நாடக ஆசிரியர்.

எட்எட்டு!

"கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய ஓர் இசை நாடகத்தை இயக்குவதற்காக, அண்மையில் ஒரு மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோ போயிருந்தேன். அங்கு சுமார் 80 ஏக்கரில் Vigeland Sculpture Park என்ற சிற்பப் பூங்கா இருக்கிறது. அதில் மொத்தம் 212 விதமான சிற்பங்கள் இருக்கின்றன. அனைத்துமே நிர்வாணச் சிலைகள். சமைப்பது, படிப்பது, உணவு அருந்துவது, வேலை பார்ப்பது என மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும் காட்சிகளை அப்படியே நிர்வாண நிலையில் சிற்பங்கள் ஆக்கி இருந்தார்கள். ஆண், பெண் உடல்கள்பற்றி இருபாலருக்கும் இருக்கும் பூடகங்களையும், மர்மங்களையும் அந்த நிர்வாணச் சிலைகள் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகின்றன. அங்கு இருந்த 'ஆங்ரி பாய்' என்ற மூன்று வயதுச் சிறுவன் கோபப்படுவது மாதிரியான சிற்பம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!"

கலந்துகொண்ட நிகழ்ச்சி, கல்கி, மனித உரிமை செயற்பாட்டாளர்.

எட்எட்டு!

"திருநங்கைகளின் காதல், திருமணம், குடும்பு உறவுகள்பற்றி 'காதல் நீதி' என்ற கருத்தரங்கம் கோவையில் நடந்தது. எத்தனையோ திருநங்கைகள் ஆண்களுடன் தாலி கட்டி குடும்பம் நடத்துகின்றனர். ஆனால், பொதுவெளியில் இதை ஏற்றுக்கொள்ள ஆண்களுக்குத் தயக்கம். இதனால், ஓர் ஆணுடன் குடும்பம் நடத்தும் அல்லது ஓர் ஆணைக் காதலிக்கும் திருநங்கை அந்த ஆணால் கைவிடப்பட்டால், அவள் நிலைமை மோசமாகிறது. காவல் நிலையத்திலும் புகார் தர முடியாது. வீட்டிலும் முறையிட முடியாது. நான்கு சுவர்களுக்குள் மருகி அமர்ந்திருப்பதைத் தவிர, வேறு வழி இல்லை. அன்புகொண்ட சக ஜீவன் மீது காதல்கொள்ள பாலினம் ஒரு தடை இல்லை என்ற யதார்த்தத்தை அனைவரையும் உணரச் செய்வதே எங்களின் நோக்கம்!"

கேட்ட இசை நீலிமா ராணி, நடிகை.

எட்எட்டு!

"என்னிடம் எப்பவும் ஐ-பாட் இருக்கும். அதில், 20 பாடல்களை மட்டும் செலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன். அந்தப் பாட்டுக்கள்தான் திரும்பத் திரும்ப ஓடிட்டே இருக்கும். அந்த லிஸ்ட்ல புதுசா சேர்ந்திருக்கும் பாட்டு 'நான் மகான் அல்ல' படத்தில் வரும் 'வா, வா நிலவைப் பிடிச்சுத் தரவா, வெள்ளி பொம்மை ஆக்கித் தரவா' பாடல். வரிகள் எல்லாம் அவ்வளவு பிரமாதமா இருக்கும். அந்தப் படத்தில் இந்தப் பாட்டுக்கு நான் நடிச்சதும் மனசுக்குப் பிடிச்சிருந்தது!"

சந்தித்த நபர் சல்மா, கவிஞர்.

எட்எட்டு!

"சமூக நல வாரியம் தொடர்பான பணிக்காக சமீபத்தில் திரிபுரா போயிருந்தேன். சி.பி.எம். தலைவரான மாணிக் சர்க்கார்தான் அங்கே முதல்வர். மாணிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலியின் எளிமை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நூல் புடவையில் சாதாரண குடும்பப் பெண்மணிபோல இருந்தார். 'நல்ல புடவை கட்டலாமே?' என்று கேட்டேன். 'அதெல்லாம் எனக்கும் பிடிக்காது... முதல்வருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி எப்போதாவது காஸ்ட்லியான புடவை கட்டினால், அவர் முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வார்' என அவர் சொல்ல, எனக்கு வியப்பு தாளவில்லை. முதல்வரின் மனைவி பாஞ்சாலி தினமும் அலுவலகத்துக்குப் போய்வரும் அரசு ஊழியரும்கூட!"

பார்த்த படம் கே.வி.ஆனந்த், இயக்குநர்.

எட்எட்டு!

"சமீபத்தில் 'Peepli Live' என்ற இந்திப் படம் பார்த்தேன். மிகக் குறைந்த நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயி, விவசாயத்துக்கு வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் போனால், அந்த நிலத்தைக் கடன் கொடுத்த வங்கி எடுத்துக்கொள்கிறது. அதே விவசாயி, கடன் தொல்லையால் இறந்து போனால் அரசு ஒரு லட்ச ரூபாய் பணம் தருகிறது. எத்தனை முரண் இது? இந்த விவசாயப் பிரச்னையை வைத்து, டி.ஆர்.பி போட்டியில் சேட்டிலைட் சேனல்கள் எப்படி பரபரப்பு பண்ணுகின்றன என்பதை மிகப் பிரமாதமாக, உணர்வுபூர்வமாகக் கொண்டுவந்து இருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் அனுஷா ரிஷ்வி ஒரு முன்னாள் பத்திரிகையாளர். என்னை மிகவும் பாதித்த இந்த சினிமாவின் தயாரிப்பாளர் நடிகர் அமீர் கான்!"

பாதித்த சம்பவம் தொல்.திருமாவளவன், தலைவர் -- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

எட்எட்டு!

"சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஓர் இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். 'உங்களைப் பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை!' எனச் சொன்ன அவரிடம், கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். அவர் சிரித்தார். சால்வை விலக... ஒரு கணம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அவருக்கு இரு கைகளும் இல்லை. கைகள் இரண்டும் பிய்த்து எறியப்பட்டதைப்போல தோள்பட்டைகள் இருந்தன. நான் பதறி விசாரித்ததும் சிரிப்பு மாறாமல், 'அண்ணா, நான் ஈழத்தில் இருந்து வருகிறேன்!' என்றார். போரில் கைகளை இழந்து, சிகிச்சை முடிந்து தட்டுத்தடுமாறி இந்தியா வந்து என் முன்பு நின்ற அவரிடம், 'தம்பி, ஏதாவது உங்களுக்கு உதவி வேண்டுமா?' எனக் கேட்டேன். 'உதவ வேண்டிய நேரம் கடந்துவிட்டது அண்ணா!' என்றார். அந்த வார்த்தைகளின் வலி, நித்தமும் என் நித்திரையைக் கொன்றுகொண்டு இருக்கிறது!"

எட்எட்டு!
எட்எட்டு!