ஸ்பெஷல் -1
Published:Updated:

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா
மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

கீதா ஜீவனைப் பற்றி எழுதுவதா அல்லது அவருடைய அப்பா பெரியசாமியைப் பற்றி எழுதினாலே எல்லாம் அதில் அடங்கிவிடுமா என்ற கேள்வியோடுதான் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது!

தைரியமும் தலைமையை மாற்றிக்கொள்ளாத தன்மையும் இருந்தால், ஒருவர் அரசியலில் நீண்ட காலத்துக்கு அசைக்க முடியாமல் கோலோச்சலாம் என்பதற்கு உதாரணம், தூத்துக்குடி என்.பெரியசாமி!

நெல்லையில் இருந்து தூத்துக்குடியைத் தனியாகப் பிரித்து புது மாவட்டம் உருவாகி இந்த மாதத்துடன் 25 ஆண்டுகள் முடியப்போகின்றன. இந்த 25 ஆண்டுகளும் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இப்படி 25 ஆண்டுகளாக சேலம் மாவட்டச் செயலாளாரக இருப்பவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர்கள் இருவரைத் தவிர தி.மு.க-வில் வேறு எவருக்கும் இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்ட தட்டார் மடம் ஊரில் பிறந்து, உவரி போய் மீன் வாங்கி வந்து விற்று, சிரட்டை வியாபாரம் பார்த்து, சின்னச் சின்ன வழக்கு வியாஜ்ஜியங்களுடன் ஊருக்குள் அறிமுகம் ஆனார் பெரியசாமி. 1975-ல் எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த போது, பெரியசாமியும் உள்ளே இருந்தார். அப்போது, வைகோ-வுடன் நெருங்கிய தொடர்பு கிடைத்தது. சேலம் சிறைக்கு வைகோ மாற்றப்பட்டதும் அங்கே கொண்டுவந்து அடைக்கப்பட்ட ஆற்காடு வீராசாமி, ஆர்.டி.சீதாபதி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்புகளால் தி.மு.க -வில் அதிக ஆர்வத்துடன் செயல் பட்டார் பெரியசாமி.

திருச்செந்தூர் கோயில் தக்கார்சுப்பிர மணியப் பிள்ளை கொலைக்கு நீதி கேட்டு நெடும் பயணத்தை கருணாநிதி நடத்தியபோது, அதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து கவ னத்தை ஈர்த்தார். தூத்துக்குடிப் பகுதி தொழிற்சங்கங்களில், துணிச்சலாக கம்பெனிகளைக் கட்டுப்படுத்தி, தொழிலாளர்களுக்குச் சில சலுகைகளை வாங்கிக் கொடுத்தார். 1986-ல் நகர் மன்றத் தலைவர் பதவியும் மாவட்டச் செயலாளர் பதவியும் ஒரு சேர வந்து சேர்ந்ததும் 'தான் ஒருவரே மாவட்டம்' என்ற சூழ்நிலையை உருவாக்கினார். அந்தக் கதைகளை எழுதினால் நீளும்.

89-ல், 96-ல் எனத் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக வென்றார். யாரை மந்திரியாக ஆக்கலாம் என்று தலைமை இவரிடம் கேட்டபோது, ஜெனிஃபர் சந்திரன் பெயரை முன்மொழிந்தார். அப்போதும் பெரியசாமியே மந்திரியாக வலம் வருவதாகப் பேச்சு கிளம்பியது. அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வந்து, மாவட்ட பஞ்சாயத்துக்கு பெண் ஒருவர்தான் நிற்க முடியும் என்ற நிலை வந்தது. வெளியில் இருந்து பெண் வேட்பாளரைத் தேடுவதைவிட வீட்டுக்குள் இருந்தே கொண்டுவந்தால் என்ன என்ற 'கட்சி மனோபாவம்' இவருக்கும் ஏற்பட்டது. அதுவரை அப்பாவி டீச்சராக வலம் வந்த பெரியசாமி மகள் கீதா ஜீவன் மீது அரசியல் வெளிச்சம் விழுந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆனார்.

எம்.எஸ்.சி., பி.எட்., படித்த இவர், கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கீதா நர்ஸரி, தங்கம்மாள் பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகக் கல்வித் தொண்டு ஆற்றிவந்தார். அப்பாவின் பிரபலமும் சேர, ஊரில் அது முக்கியப் பள்ளியாக திகழ்ந்தது. புதிய பேருந்து நிலையம் அருகில் கீதா பெயரில் பெரிய ஹோட்டல் ஒன்றும் உருவானதால், அந்தப் பெயர் ஊரார் அறிந்ததாகவும் இருந்தது.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

இந்தப் பதவி ருசி, பெரியசாமியை விடவில்லை. 98 நாடாளுமன்றத் தேர்தலில், நெல்லை எம்.பி. தொகுதியில் கீதாவைப் போட்டியிடவைக்க தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், சரத்குமாரை வேட்பாளராக கருணாநிதி நிறுத்தினார். அதை ஏற்காத பெரியசாமி, சில உள்ளடி வேலைகள் பார்த்ததாகவும், அதனால்தான் சரத்குமார் தோற்றதாகவும் கட்சி நிர்வாகக் குழுவிலேயே பேசப்பட்டது.

"தி.மு.க. வெற்றிபெறும் தொகுதிக்கான பட்டியலை நான் எழுதிப்பார்த்தேன். அதில் முதல் பெயராக சரத்குமாரை எழுதினேன். அவரே தோற்பார் என்று கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை!" என்று கருணாநிதி கலங்கிய குரலில் நிர்வாகக் குழுவில் சொன்னார். அதாவது, தனக்குப் பிடிக்காத வேட்பாளராக இருந்தால், அவர் தலைமையால் நிறுத்தப்பட்டாலும் விலகி நிற்கும் வைராக்கியம் பெரியசாமிக்கு உண்டு. அடுத்த ஓராண்டில் மறுபடியும் எம்.பி. தேர்தல் வந்தது. இம்முறை கீதா ஜீவனை நிறுத்தினார். ஆனால், பி.ஹெச். பாண்டியனிடம் தோற்றார் அவர். ஸீட் கிடைத்தும் வருத்தப்பட்ட கீதாவுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை அவரால்.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

2006 சட்டமன்றத் தேர்தல் வந்த போது, தனக்கும் ஸீட் கேட்டார். மகளுக்கும் கேட்டார். இருவரில் ஒருவருக்குத்தான் என்று கருணாநிதி சொல்லிவிட்டார். எனவே, மகளுக்கு விட்டுத் தர வேண்டிய நெருக்கடி பெரியசாமிக்கு. அந்த விட்டுக் கொடுத் தலுக்குக் காரணம், வென்றால் மகள் மந்திரி ஆவார் என்ற நம்பிக்கைதான். அது வீண் போகவில்லை. பெரிய சாமியின் பெரிய கனவு நிறைவு அடைந்தது!

அமைச்சர் கீதா ஜீவன் மேடைஏறிவிட்டால்... தி.மு.க அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் என அத்தனையையும் மடமடவென மனப் பாடமாகச் சொல்லிவிட்டுத்தான் கீழே இறங்குவார். இதை தூத்துக்குடியில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் நேரடியாகவே பார்த்துவிட்ட அமைச்சரும் பொதுச் செயலாளருமான அன்பழகன், "தலைவர் பக்கத்துலயே இருந்து திட்டங்களை உருவாக்குற எங்களுக்கே அத்தனை திட்டங்களையும் வரிசையா சொல்ல முடியலை. ஆனா, பெரியசாமியோட மகள், அத்தனையையும் ஒண்ணுவிடாம வரிசையா சொல்லிடுறாரே!" எனப் புகழ்ந்தார். இப்போது எல்லாம் கீதா ஜீவனை நியமிக்கப்படாத 'கொள்கை பரப்புச் செயலாளர்' என்றே சொல்கிறார்கள்!

ஆரம்பத்தில் கீதா ஜீவனுக்குக் கால்நடை பராமரிப்புத் துறை தரப்பட்டது. சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பூங்கோதை, ஓர் பரிந்துரை புகாரில் சிக்கியதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட சமூக நலத் துறை, கீதா ஜீவனுக்குக் கிடைத்தது. சமூக சேவையும் செய்யலாம், சுய சேவையும் செய்துகொள்ளலாம் என்பதற்கு வசதியான துறைதான் இது. சத்துணவுத் திட்டம் தொடங்கி, பல்வேறு சமூக உதவித் திட்டங் களை ஒழுங்காகச் செய்து கொடுத்தாலே மந்திரிக்கு கெட்ட பெயர் இல்லாமல் போகும். ஆனால், கான்ட்ராக்ட் விவகாரங் கள் தொடங்கி, கடைநிலை ஊழியர் நியமனம் வரை அப்பாவின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டி இருப்பதால், விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. இன்னும் ஏராளமான காலி இடங்கள் அப்படியே இருக்கின்றன. 'சமூகக் காப்பகங்கள்' என்கிற போர்வையில் குழந்தைகள் கடத்தல் அதிகமாக நடப்பதை மந்திரியால் தடுக்க முடியவில்லை. மோசடியான காப்பகங்களை முறைப்படுத்த முழு மூச்சான நடவடிக்கைகள் இல்லை. அனுமதி பெறாத காப்பகங்கள் ஏராளமாக உள்ளன. அதிக அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தும் இடங்களாக சமூக நலத்துறை அலுவலகங்கள்தான் இருக்கின்றன. துறை சார்ந்த அக்கறை அமைச்சருக்கு இருந்தாலும், தைரியமாகத் திட்டமிட்டு செய்யும் வேகம் இல்லை என்றே அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது.

அய்யாசாமி தொடங்கி சிவசாமி, சௌந்தரபாண்டியன், தனசேகரன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகிய அரசியல் எதிரிகளை அப்பாவே 'அமைதி'யாக்கிவிடு வதால், கீதா ஜீவனுக்கு எதிர் கோஷ்டித் தொந்தரவுகளும் இல்லை. வெங்கடேசப் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி மட்டும்தான் இவருக்கு நெருடல் சொப்பனம். அதுவும் அவர் மத்திய உள்துறை இணைஅமைச்சராக இருந்த காலத்தில், இவர்கள் இருவரும் கலந்துகொண்ட கூட்டங்கள் முட்டலும், மோதலுமாக முடிந்தன. ராதிகாவுக்கு இப் போது பதவிகள் இல்லாததால், கீதாவுக்குச் சிக்கல்களே இல்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் இருந்தபோது, வர்த்தகக் காரணங்களால் தூத் துக்குடி பெரியசாமிக்கு இணக்கமாகத்தான் இருந்தார். அவர் தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொண்ட பின்னால் இந்தக் குடும்பத்துக்கு ஆகவில்லை. இந்த வகைப்படி பார்த்தால், கடந்த 25 ஆண்டு தூத்துக்குடி தி.மு.க-வில் பெரியசாமிக்குச் சரியான போட்டியாக வந்திருக்கும் முதல் ஆள் அனிதா மட்டுமே!

இதைச் சரிகட்ட பெரியசாமி - கீதா ஜீவன் போட்டுள்ள திட்டத்தை அ.தி.மு.க-காரர் ஒருவர் சொன்னபோது, நம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. "எங்கள் கட்சியில் தொகுதிப் பொறுப்பாளர்களை அம்மா நியமித்துள்ளார். அதில் மூன்று தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பெரியசாமியுடன் நட்பு பாராட்டுகிறார்கள். அவருடன் தொழில் தொடர்புகளை வைத்து உள்ளார்கள். அழகிரியையும் ஸ்டாலினையும் தரக்குறைவாகப் பேசிய ஒருவரின் பண்ணை வீட்டில்தான், இவர்கள் அடிக்கடி தங்கி பொழுதைக் கழிக்கிறார்கள்!" என்கிறார் அந்த இரட்டை இலைக்காரர்.

கீதா ஜீவனுக்கு ராஜா, ஜெகன், அசோக் என்ற மூன்று தம்பிகள். அக்காவுக்குத்தான் அப்பா அதிக செல்லம் கொடுக்கிறார் என்று கோபித்துக்கொண்டு, பாரதிய ஜனதாவுக்குப் போனார் ராஜா. அவரது இயல்புக்கு அது தோதான இடம் அல்ல என்று தெரிந்து, தே.மு.தி.க-வுக்கு மாறினார். 'இனி, எனக்கு அவன் மகனும் கிடையாது. நான் அவனுக்கு அப்பாவும் கிடையாது. முறையா சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துடுவேன். அதை வாங்கிட்டுப் போகட்டும். இனிமேல், என் மூஞ்சிலகூட அவன் முழிக்கக் கூடாது' என அதிரடியாக அறிக்கைவிட்டார் பெரியசாமி. அதன் பிறகு, ராஜாவைக்

குடும்பத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. 'என் வழி தனி வழி' என அவர் தனியாகவே தொழில் தொடங்கி செய்து வந்தார். அதுவும் சரிவரவில்லை. தூத்துக்குடிக்கு ஸ்டாலின் வந்தபோது, தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் ராஜா. கட்சிக்கு ஒரு சால்வை லாபம் அவ்வளவுதான்!

அடுத்த தம்பியான ஜெகன் சும்மா இருப்பாரா? 2009 நாடாளு மன்றத் தேர்தல் சமயம், ஜெகன் மூக்கில் வேர்த்தது. தூத்துக்குடி எம்.பி. தொகுதியை வாங்கித் தரச் சொல்லி அப்பாவைத் தொந்தரவு செய்தார். தென் மாவட்டம் என்பதால், அழகிரி யைச் சந்தித்து ஜெகன் பெயரை ஞாபகப்படுத்தினார். சென்னைக்கு வந்து பவர் சென்டர்களைப் பார்த்தார்கள். குடும்பத்தில் இன்னொருவருக்குக் கிடையாது என்று தலைமை சொல்லிவிட்டது. 'எவ்வளவு வெயிட் காட்டியாவது வாங்கி யாக வேண்டும்' என்ற துடிப்பு செல்லுபடி ஆகவில்லை.

மந்திரி.. தந்திரி: கேபினெட் கேமரா

ஆனால், தனது கைக்கு அடக்கமான ஆளைத்தான் எம்.பி. ஆக்க வேண்டும் என்று நினைத்தார் பெரியசாமி. தனக்கு பி.ஏ-வாக அடக்கமான பையனாக கருணா என்பவர் இருந்தார். அவருக்கு ஸீட் வாங்கித் தந்தால், தன்னை மீறிப் போக மாட்டார் என்று நினைத்து, கருணாவிடம் இதைக் கேட்டதாகவும், பயந்துபோன அவர், 'அண்ணே, இதுக்கு எல்லாம் நான் தகுதியானவன் இல்லைண்ணே' என்று சொன்னதாகவும் ஒரு செய்தி உண்டு. அந்தச் சமயத்தில்தான் எம்.பி. ஆசையுடன் ஜிலிஜிலு டாக்டர் ஜெயதுரை வலம் வந்தார். அவருக்குப் பரிந்துரைத்தார் பெரியசாமி. அவர் வென்று எம்.பி ஆனார். வழக்கம்போல் சில மாதங்கள் அடங்கியிருந்த ஜெயதுரை, இப்போது தனி ஆவர்த் தனங்கள் செய்து வருவது இந்தக் குடும்பத்துக்கு எரிச்சலாக இருக்கிறது!

அப்பாவா... மகளா என்றால், தன்னுடைய பங்கைத் தானம் செய்தார் பெரியசாமி. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் மகளா, மகனா என்ற பட்டிமன்றத்தில் பெரியசாமியின் தீர்ப்புக்காகத்தான் தூத்துக்குடி காத்திருக்கிறது!