ஸ்பெஷல் -1
Published:Updated:

கடலோடு போனவர்களின் கதை

கடலோடு போனவர்களின் கதை


கடலோடு போனவர்களின் கதை!
கடலோடு போனவர்களின் கதை
கடலோடு போனவர்களின் கதை
பாரதி தம்பி, இர.ப்ரீத்தி
படம்: வி.செந்தில்குமார்
கடலோடு போனவர்களின் கதை

ப்புக் காற்றின் வெப்பத்துடன் தீராத வலியாகக் கனக்கிறது மீனவர்களின் வாழ்க்கை!

கடலுக்குள் சென்ற மீனவர்கள் வருடக்கணக்கில் வீடு திரும்பாமல் போக, கண்களில் உப்புநீர் சுமந்து காத்துக்கிடக்கின்றன மீனவக் குடும்பங்கள். சென்னை காசிமேடு, ராயபுரம் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கடலுக்குள் சென்ற 15 மீனவர்கள் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவர்களின் குடும்பங்கள் கதியற்ற நிலையில் தவித்துக்கிடக்கின்றன.

எட்டு வருடங்கள் காதலித்து ராஜேஷைத் திருமணம் செய்துகொண்ட ராஜலட்சுமிக்கு கணவரைப்பற்றிய பேச்சு எடுத்தாலே கண்ணீர் முட்டுகிறது. "எப்பவும் விடியக்காலையில 3 மணிக்குதான் கடலுக்குப் போவாரு. சாயங்காலம் 6 மணிக்கு வந்திரணும். ஆனா, அன்னிக்கு நைட் முழுசும் வரலை. ரெண்டு ஃபைபர் போட்ல எங்க ஆளுங்க நாலு நாள் கடலுக்குள்ளே தேடியும் கண்டுபிடிக்க முடியலை. என் புருஷன் பசி தாங்க மாட்டாரு. எங்கே இருந்தாலும் நேரத்துக்குச் சாப்பிட்டுடுவாரு. ஒரு முழு வருஷமாச்சு. எங்கே இருக்காரு, என்னன்னு ஒரு சேதியும் தெரியலை. இருக்காரா, இல்லையான்னுகூடத் தெரியலை. எந்த ஊர்லயாச்சும் கடலுக்குப் போய் காணாமப் போன வங்க கரை ஏறி இருக்காங்கன்னு தகவல் கிடைச்சா, அதுல ராஜேஷ§ம் இருக்க மாட்டாரான்னு என் கண்ணு தேடுது. ஆனா, எந்த சாமியும் கண்ணு தொறக்கலை. ராஜேஷ் உசுரோட இருப்பார்ங்கிற நம்பிக்கை யிலதான் இந்த தாலியை இன்னமும் கட்டியிருக்கேன்!"- சொல்லும்போதே வார்த்தைகள் உடைந்து குரல் கம்முகிறது ராஜலட்சுமிக்கு.

கடலோடு போனவர்களின் கதை

ராஜேஷ் மட்டுமல்ல; காசிமேடு சிங்காரவேலர் நகரில் இருந்து கடந்த வருடம் நான்கு பேர் ஒரே படகில் கிளம்பினார்கள். அதில் ஒருவர்கூட இதுவரை வீடு திரும்பவில்லை. 70 வயது விக்டோரியா பாட்டியின் சோகம் உச்சத்திலும், உச்சம். 16 வருடங்களுக்கு முன்பு கடலோடு போன கணவனையே இன்னும் மீட்க முடியாத நிலையில், கடந்த வருடம் மகன் நெல்சனையும் கடலில் தொலைத்த கதை இவருடையது. "புருஷன் காணாமப் போனப்பவும் தேடுனேன். மீனு ஆபீஸ்ல மனு கொடுத்தேன். ஒரு தையல் மிஷினு குடுத்து, 'இதைவெச்சு பொழச்சுக்க'ன்னு சொன்னாங்களே தவிர, காணாமப் போன மனுஷனைக் கண்டு பிடிச்சுக் குடுக்க ஒண்ணும் பண்ணலை. பையன் தலையெடுத்து கடலுக்குப் போக ஆரம்பிச்சான். அவன் வருமானத்துலதான் கஞ்சி குடிச்சோம். ஒரு வருஷத்துக்கு முந்தி கடலுக்குள் போன அவனும் திரும்பி வரலை. என்ன பண்ண, யாரைப் போய் கேக்க? மருமகன் வீட்டுல அண்டிக்கிட்டு கஞ்சி குடிச்சுக்கிட்டு, இந்த உசுரக் கையில பிடிச்சுக்கிட்டுக் கெடக்கேன். சாவுறதுக்குள்ள என் புள்ள மூஞ்சியையாவது பார்க்க முடியுமான்னு தெரியலை"-16 வருட சோகங்கள் முகச் சுருக்கங்களாகப் படிந்து இருக்கின்றன, விக்டோரியா பாட்டியின் முகத்தில்.

கடலோடு போனவர்களின் கதை

காசிமேட்டின் ஒவ்வொரு தெருவிலும் காணாமல் போன கதைகளைக் கேட்க முடிகிறது. காணாமல் போய்விட்டது தெரிந்ததும், தங்கள் சொந்த முயற்சியில் தேடுவதுபோக, மீன்வளத் துறையிடமும் கடலோரக் காவல் படையிடமும் உடனே புகார் தருகின்றனர். அவர்கள் ஹெலி காப்டரில் சென்று தேட வேண்டும். "ஆனால், இதுவரை காணாமல் போன ஒரு மீனவரைக்கூட கோஸ்ட்கார்டு கண்டுபிடித்த தாகத் தகவல் இல்லை!" என்கிறார், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவரான பாரதி. "ஒரு தடவை ஹெலிகாப்டரில் போய் தேடினா 9 லட்ச ரூபாய் செலவாகுதாம். ஒரு மீனவன் செத்தாலே அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய்தான் தருது. அப்புறம் எப்படித் தேடுவாங்க? ஆனா, கோஸ்ட்கார்டுக்கு வரிசையா ஹெலிகாப்டர் வாங்கி அடுக்குற ஒவ்வொரு முறையும் 'மீனவர்களின் நலனுக் காகத்தான் இதை வாங்குறோம்'னு பெருசா சொல்லுவாங்க. சும்மா இருக்குற மெரினாவுல ஹெலிகாப்டர்ல சுத்திச் சுத்தி வர்றாங்க. அங்கே ஆகுற செலவை மீனவனைத் தேடுறதுக்கு பண்ணக் கூடாதா? ஒரு மீனவன் காணாமப் போயிட்டான்னு புகார் கொடுத்த ரெண்டு நாளுக்குள்ள நிஜமாவே தேட ஆரம்பிச்சா, நிச்சயமா கண்டுபிடிச்சுடலாம்" என்கிறார் பாரதி.

மீனவன் கடலுக்குள் காணாமல் போய்விட்டால், ஒரு லட்சம் நஷ்ட ஈடு தருவதாக அரசு சொல்கிறது. ஆனால், அவர் காணாமல் போனதில் இருந்து ஏழு வருடங்கள் வரை திரும்பி வரவில்லை என்றால்தான் இது பொருந்தும். அதுவரை அந்தக் குடும்பத்தின் கதி? ஒரு மீனவர் காணாமல் போனதாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 30 நாட்கள் வரை அவர் திரும்பி வரவில்லை என்றால், அந்த மீனவரின் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அரசு உத்தரவு சொல்கிறது. ஆனால், அப்படிக் காணாமல் போன பல மீனவர்களின் குடும்பங்களுக்கு பணம் முறையாகக் கொடுக்கப்படுவதே இல்லை. கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று என 20 வயதில் இரண்டு குழந்தைகளோடு கணவன் சுரேஷையும் கடலுக்குக் கொடுத்துவிட்டு, சூனியமான எதிர்காலத்தைக் கண்டு கலங்கி நிற்கும் பூங்கொடிக்கு இந்த சட்டங்கள் பற்றி என்ன தெரியும்? குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் ஜீவனான 17 வயது மணிவண்ணனைக் கடலுக்குள் இறங்கியா தேடுவார் தேசம்?

அரசின் காதில் இந்த எளியவர்களின் குரல்கள் ஒருபோதும் விழுவது இல்லை. ஆனால், எத்தனை இழப்புகள் வந்தபோதிலும் மீனவர்கள் இந்தத் தொழிலை யும் கடலையும் வெறுப்பது இல்லை. 11 வருடங்களுக்கு முன்பு தன் அன்புக் கணவர் பெருமாளைக்

கடலோடு போனவர்களின் கதை

கடலுக்கு அனுப்பிவிட்டு, இன்றுவரைத் தேடித் திரிகிறார் லலிதா. "என் புருஷன் எனக்குத் தெய்வம்ங்க. போட்டோ எடுக்குறதுக்காக இந்த மீன் கவுச்சில உங்ககூட வந்து நிக்கிறேன். ஆனா, அவர்கூட வாழ்ந்த 20 வருஷத்துல ஒரு நாள்கூட என்னைத் தெருவுல இறங்கவிட்டது இல்லை. டெல்லி வரைக்கும் போய் மனு கொடுத்துப் பார்த்துட்டேன். யாரும், எதுவும் பண்றதா இல்லை. ஆனா, என் தெய்வம் ஒருநாள் திரும்பி வரும். அந்த நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கு. அரசாங்கம் ஏமாத்தலாம், கடலம்மாவை நான் நம்புறேன்!"

ஆம், கடவுளையும் கடலம்மாவையும் நம்புவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியும் இல்லை!

கடலோடு போனவர்களின் கதை
கடலோடு போனவர்களின் கதை