கொத்தடிமைகள் மீட்பு, காவல் நிலைய மரணங்கள் கண்டுபிடிப்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழகத்தில் ஆக்ரோஷக் குரல் கொடுத்து வரும் 'எவிடென்ஸ்' அமைப்பாளர் கதிர். இவர் தாக்கல் செய்துள்ள பல வழக்குகளில் போலீஸ் முழி பிதுங்கி நிற்கிறது. தென் மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த இளைஞர், இன்றைய நிலையில் குறிப்பிடத்தக்க மனித உரிமைப் போராளி!
'' 'எவ்விதம் உங்களை நடத்தினால் நீங்கள் துன்பப்படுவீர்களோ, அவ்விதம் மற்றவர்களை நீங்கள் நடத்தாதீர்கள்' என்கிறது மகாபாரதம். 'நீங்கள் வெறுப்பதை உங்களது அண்டை வீட்டுக்கு நீங்கள் செய்யாதீர்கள்' என்கிறது யூத வேதம். 'மனித உரிமைகளைப் புறக்கணிப்பதும் அவமதிப்பதும் காட்டுமிராண்டிச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன. இச்செயல்கள் மனித குலத்தின் மனச்சாட்சியையே அவமதித்துவிட்டன' என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அறிக்கையின் முதல் பக்கம்.
வேதம் சொன்னதையும் மதிக்காமல், சட்டம் சொல்வதையும் கேட்காமல், எதை இந்தச் சமூகம் நித்தமும் காலில் போட்டு மிதிக்கிறதோ, அதுதான் மனித உரிமை. சட்டம் கையில் இருப்பதால் திருடனைக்கூட அடித்துக் கொல்ல அதிகாரம் தரப்படவில்லை. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதால், மாற்றுக் கருத்தே வரவிடாமல் கருத்துரிமையை அடக்க அனுமதி தரப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்பு. நான்கு முறை முதல்வர், பண பலமும் அதிகார பலமும்கொண்ட முன்னாள் முதலமைச்சரைக்கூட அடித்துத் தூக்கிச் செல்ல முடியும். ஆனால், கொலை வழக்கில் கைதான ஒரு சாமியாரைத் தொட்டுக் கூட்டிச் செல்ல முடியுமா? மனிதனுக்கு மனிதம் மாறுகிறதே சட்டமும் நீதியும். இந்தக் கேள்விகளில் பிறந்ததுதான் என்னுடைய பயணம். உலகத்தின் முதல் மனித உரிமைப் போராளியான இயேசு, 'நீதியின் பால் பசித் தாகம் உள்ளோர் பேறு பெற்றோர்' என்றார். இன்று சில ஒழுங்குகளாவது மிச்சம் இருக்க அவர்களே காரணம்.
காட்டுமன்னார்குடிக்குப் பக்கத்தில் சிறு கிராமத்தில் பிறந்த நான், 13 வயதில் கானூர் என்ற கிராமத்தில் ஒரு பஞ்சாயத்தைப் பார்த்தேன். தலித் பெண் ஒருத்தியை ஒருவன் கற்பழித்துவிட்டதற்கான விசாரணை அது. முதலில் மறுத்தான் அவன். பிறகு ஒப்புக்கொண்டான். கடைசியாக அவனுக்குத் தண்டனை கொடுத்தார்கள். 'சரி சரி... போப்பா... அந்தப் பொண்ணுக்கு 80 ரூபா குடுத்திரு' என்ற தீர்ப்புடன் கலைந்தது பஞ்சாயத்து. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்குள் நுழையும்போதுதான் இந்தச் சம்பவத்தின் கொடூரம் என் மனதைத் தைத்தது. அந்தப் பெண்ணைக் கற்பழித்தவன் ஒரு தனிமனிதன் அல்ல... அந்தப் பஞ்சாயத்து... இந்தச் சமூகம் என்று உணர்ந்தேன். தீண்டாமை போன்ற விவரங்கள் தெரிய ஆரம்பித்தபோதுதான் எனக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகமானது. கல்லூரிப் படிப்பும் முடித்தேன்.
உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்க நிறுவனமான ஃபயர் லைட்ஸ் மீடியா தேடிக்கொண்டு இருந்தது. ஆசியக் கண்டத்தில் இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். ஐந்து கண்டங்களில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பல்கேரியாவில் இருந்து வந்த யுவான் என்ற ஜிப்சி தனது கதையைச் சொல்லும்போது அனைவரும் அழுதோம். அவன் ஒருநாள் பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தான். ஒருவரின் பர்ஸ் திருடுபோய்விட்டது. அப்போது எல்லாருமே இவன்தான் திருடியிருப்பான் என்று நினைத்து, இவனையே பார்த்தார்களாம். அந்த அரை மணி நேர பஸ் பயணத்தை மிகக் கொடூரமான நரகம் என்று வர்ணித்தவன், தான் இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னதாகவே இறங்கி ஓடினானாம். கொஞ்சம் அசிங்கமாக, கறுப்பாக இருந்தாலே அவன் திருடனாகத்தான் இருப்பான் என்று நினைக்கக்கூடிய மனோபாவம் இன்றும் இருப்பதுதானே. அதில் இருந்துதான் மனித உரிமை இயக்கத்துக்காக என்னை நான் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். டர்பனில் நடந்த மாநாட்டுக்கு என்னை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். 'இந்தியாவில் எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், அதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை' என்றார்கள். இதை மனதில்வைத்துதான் 'எவிடென்ஸ்' ஆரம்பித்தேன். அந்த உற்சாகத்துடன் மதுரை வந்தேன்.
|