கடந்த வாரம் சென்னை ஆண்கள் கொஞ்சம் அரண்டு மிரண்டுதான் போனார்கள். காரணம், சென்னை வீதிகளில் ஆறடியைத் தாண்டிய உயரங்களில் வலம் வந்த அழகுப் பெண்கள்!
ஆசிய பெண்கள் கூடைப் பந்தாட்டப் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்த வருடம் சென்னைக்கு. சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து எனப் பல தேசப் பெண்கள் பங்கேற்க கலர்ஃபுல்லாகக் களைகட்டியது நேரு ஸ்டேடியம். கூடைப் பந்தாட்டத்தைப் பொறுத்தவரை ஆசிய அளவில் சீனா, கொரியாதான் டாப். இந்தியா ஆவரேஜாக அடிவாங்கும் ஒரு கத்துக்குட்டி அணி. இருந் தாலும் நம் பெண்களை உற்சாகப்படுத்த ஏகப்பட்ட சென்னைவாசிகள் ஆஜர். உயர உயரமாக வலம் வந்த சர்வதேச பிளேயர்களுக்கு இந்திய அணியில் ஈடு கொடுத்தது கீத்து அன்னா ஜோஸ். உயரம் ஆறடி இரண்டு அங்குலம்!
மற்ற இந்தியப் பெண்கள் சராசரியாக 5.6 அடி உயரத்தில் இருந்தார்கள். இதனாலேயே பல ஆட்டங்களில் இந்தியப் பெண்கள் திணறியது சோகக் கதை. இந்திய-சீன அணிகள் மோதிய ஆட்டத்தில் அவ்வளவு அனல். இந்திய அணிக்கு ஆதரவாக சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டு ரசிகர்கள் களம் இறங்க, சீன ரசிகர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளுமான ஆக்ரோஷம். இந்திய ரசிகர் களோடு சேர்ந்து 'கமான் இந்தியா' என்று உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார்கள் திபெத் ரசிகர்கள். ம்ஹ¨ம்... கடைசி வரை வெற்றிக்கனியைப் பறிக்கவில்லை இந்தியா. சீனா, கொரியா, தாய்லாந்து, ஜப்பான் என வரிசைகட்டித் தோற்ற இந்திய அணி ஆறாவதாக மலேசியாவிடம் ஆறுதல் வெற்றி பெற்றது.
|