விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி
ப.திருமாவேலன், படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி
இந்த வாரம்: சின்னக் குத்தூசி
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!''
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

'எனக்குப் பிடிக்கும்' என்ற பொதுத்தலைப்பில் வாரம்தோறும் ஒருவர் தங்களது விருப்பங்களைச் சொல்கிறார்கள்!

சின்னக் குத்தூசியின் எழுத்துக்கள் எதிரிகளைக்குத்திக் கிழிக்கும். ஆனால், அவரைச் சந்தித்தால் அன்பான வார்த்தைகள் கிழிசல்கள் தைக்கும். பத்திரிகை எழுத்துக்கு இவரே இலக் கணம். இளம் பத்திரிகையாளர்களுக்கு இவரே புகலிடம்!

'' மாதவி, தமிழ்ச் செய்தி, நாத்திகம், அலை ஓசை, எதிரொலி, முரசொலி இவை நான் விரும்பிப் படித்த பத்திரிகைகளின் வரிசை அல்ல. நான் வேலை பார்த்த பத்திரிகைகள்.

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

கொக்கிரக்குளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசீர்வாதம், ஆர்.ஓ.மஜாட்டோ, தெரிந்தார்க்கினியன், திட்டக்குடி அனீப், தர்மபுரி வெங்கடேசன்... இதெல்லாம் நான் வாசிக்கும் பத்திரிகை யாளர்களின் பெயர்கள் அல்ல. என் பெயர்கள்தான். வேறு வேறு பத்திரிகைகளில் விதவிதமான பெயர் களில் வலம் வந்தவன், கடைசியாக முரசொலியில் சின்னக் குத்தூசியாக அடைக்கலமாகி இருக்கிறேன். யாராவது எனக்கு போன் செய்தால், 'தியாகராசன்.. வணக்கம்' என்றுதான் கூறுகிறேன். ஆனால், என்னை யாரும் அப்படி அழைப்பதில்லை. அனைவருக்கும் நான் சின்னக் குத்தூசிதான்.

பெரியாரின் தளபதியாக இருந்த குருசாமி, 'விடுதலை'யில் குத்தூசி என்ற பெயரில் தினந்தோறும் பலசரக்கு மூட்டை எழுதுவார். அவரின் எழுத்தால் கவரப்பட்ட நான், சின்னக் குத்தூசியாக என்னை மாற்றிக்கொண்டேன். புனைபெயரே இயற்பெயரை மறைக்கும் அளவுக்குப் பத்திரிகைகள் மீது மோகம் கொண்டவனாக நான் வளரக் காரணம், எங்கள் திருவாரூர் குளத்தங்கரை.

என் அம்மா, பெரிய வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்து வந்தார்கள். அவர்களுடன் அந்தந்த வீடுகளுக்கு நானும் போய் வருவேன். அவர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் அங்கே இருக்கும் பத்திரிகைகளைப் படிப்பேன். ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் ஆகிய மூன்றும் அவர்களின் வீடுகளில் இருக்கும். அந்த வீடுகளுக்குப் பத்திரிகைகளை வாங்கி வர கடைக்கு என்னைத்தான் அனுப்புவார்கள். பத்திரிகைகளை வாங்கி வரும்போது திருவாரூர் குளத்தங்கரை படித்துறையில் வைத்துப் படித்து விட்டுத்தான் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

இந்த ஆர்வத்தால் சிறுவர் இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். பாப்பா மலர், டமாரம், மிட்டாய், அணில் என்று அப்போது வந்த அத்தனை பத்திரிகைகளுக்கும் எழுதினேன். கண்ணதாசனின் தென்றல், ஜீவாவின் தாமரை இதழ்களில் எழுதி இருக்கிறேன். நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடனில் 'ஓடும் ரயிலிலே' என்று 26 வாரத் தொடர்கதை எழுதினேன். அது 1956-ம் ஆண்டாக இருக்கலாம். 50 ஆண்டுகளைக் கடந்த பிறகும் தாள்களைக் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறது எனது பேனா!

பெரியார்தான் என்னை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தவர். பாடப் புத்தகங்கள் வாங்கித் தந்தவர் அன்னை மணியம்மை. கொரடாச்சேரியில் நான் பள்ளி ஆசிரியராக இருந்தபோது, எழுத்தாளர் பி.சி.கணேசன் பேராவூரணியில் தலைமை ஆசிரியராக இருந்தார். அவரது நண்பர்கள் அனைவரும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 'மாதவி' பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியராக நான்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல, வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனேன். இரண்டரை ஆண்டுகள் வந்தது மாதவி. திடீரென்று நின்றது. மறுபடி வாத்தியார் வேலை.

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

பழ.நெடுமாறன் எனக்கு அந்தக் காலத்து நண்பர். அவர் 'குறிஞ்சி' பத்திரிகை நடத்தி வந்தார். அவர் போராட்டம், சிறை என்று போய்விட்டால், நான்தான் குறிஞ்சியைக் கவனித்துக்கொள்வேன். நாங்கள் தி.மு.க-வில் இருந்த காலம் அது. அண்ணா வுக்கும் ஈ.வே.கி. சம்பத்துக்கும் பிரச்னை வந்தபோது சம்பத்துடன் நானும் விலகினேன். அவரின் 'தமிழ்ச் செய்தி' நாளிதழில் ஆசிரியர் ஆனேன். தன்னுடைய தமிழ் தேசியக் கட்சியைக் கலைத்துவிட்டு, காங்கிரஸில் அவர் இணைந்தபோது சில காலம் வேலை இல்லாமல் இருந்தேன். 'நாத்திகம்' இதழில் இடம் காலியாக இருப்பதாக நெடுமாறன் சொன்னார். அங்கு சேர்ந்தேன். அதன் பிறகு 'அலை ஓசை' போனேன்.

'அலை ஓசை'யில் வேலை பார்த்தாலும், 'நவசக்தி'க்குத் தலையங்கம் மட்டுமாவது எழுத வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக்கொண்டார். என்ன எழுத வேண்டும் என்று அவர் சொல்வார். நான் எழுதுவேன். 'அலை ஓசை' நாராயணன், தி.மு.க-வுக்கு எதிரான நிலை எடுக்கவே, அதிலிருந்து விலகினேன். ஆற்காடு வீராசாமி, 'எதிரொலி' ஆரம்பித்தார். நான்காண்டு காலம் அது நடந்தது. தொடர்ந்து நடத்த முடியவில்லை. ' 'இந்தியா டுடே' மாதிரி பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன்' என்று முரசொலி மாறன் என்னை அழைத்தார். முரசொலி அலுவலகம் போக ஆரம்பித்தேன். தினமும் நான் வந்துபோவதைக் கவனித்த கலைஞர், 'முரசொலியில எழுதுங்க' என்றார். 1984 முதல் முரசொலி என்னுடைய முகமானது. 96-ல் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டு வெளியே வந்தேன். நள்ளிரவில் கலைஞர் மிகக் கொடூர மான முறையில் கைதானபோது, 'முரசொலி'க்கு நானே போன் செய்து, இனி தொடர்ந்து எழுதுவதாகச் சொன்னேன். சொன்ன வாக்குறுதியை இன்று வரை காப்பாற்றி வருகிறேன். எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் கலைஞர். பத்திரிகைகள் குறித்த அவரது ஆர்வம், அர்ப்பணிப்பு, கவனம், துல்லியம் போன்றவை நான் அருகில் இருந்து அனுபவித்துப் பார்த்தது. அவர் இடத்தை நிரப்ப யாராலும் முடி யாது.

எல்லா நோயும் வருகிறது, போகிறது. சிலது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. இதனால் நடக்கும்போது தள்ளாடுகிறது. ஆனால், எழுதும்போது நடுக்கம் இல்லை. கையில் பத்திரிகையைப் பிடித்திருக்கும்போது உற் சாகத்தை உணர்கிறேன். மாத்திரைச் செலவு அதிகம் ஆனதால்தான் பத்திரிகைகள் வாங்குவதைக் குறைத்தேன். இல்லையென்றால், புதிதாக வரும் அத்தனை இதழ்களையும் என்னைக் கேட்காமல் எடுத்து வந்து தந்துவிடுவார் கடைக்காரர். இது பத்திரிகையாளர்கள் அனைவரும் வந்து போகும் இடம். 30 வருடங்களாக ஒரே மேன்ஷனின் ஒரே அறையில்தான் இருந்தேன். என் சேகரிப்பான பத்திரிகைகளை வைக்க இடம் இல்லாமல் பக்கத்து அறையையும் சேர்த்து வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். இந்தத் தூசிகள் அடைந்தே என் உடலைக் கெடுத்ததாக நண்பர்கள் சொல்கிறார்கள். 'ஏன் சார் இவ்வளவு பத்திரிகைகளைச் சேர்த்துவைக்கிறீங்க' என்று செல்லமாகக் கோபிக்கிறார்கள். சலூனில் முடி கிடப்பதை யாராவது குற்றம் சொல்வீர்களா? அதைப் போலத்தான் பத்திரிகையாளனது அறையில் இதற்கு இடமில்லாமல் எது இருக்க வேண்டும்?

''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி

அரசியல் இதழ்களுடன் மட்டுமல்ல சிற்றிதழ்களின் இலக்கிய ஆக்கங்கள் மீது அளவில்லாத பற்றுவைத்திருந்தேன். நான் ஓர் இயக்கம் சார்ந்த பத்திரிகையாளன்தான். எனவே, என்னுடைய எழுத்துக்கள் நடுநிலையானவை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், எப்போதும் நான் இயங்கிக்கொண்டு இருக்கப் பத்திரிகைகள் மட்டுமே காரணம்.

சமூகத்தின் கண்ணாடிகள் இந்தப் பத்திரிகைகள். அதிகாலை கண் விழிக்கும்போது உங்கள் முன் கிடக்கும் பத்திரிகையை நீங்கள் விரித்தால் உலகம் விரியும். புதிய செய்தி படிக்கும்போது புத்துணர்ச்சி வரும். ஒரு கேள்விக்குப் பதிலோ அல்லது புதிய கேள்வியோ உங்களது மனதில் உதிக்க நிச்சயம் பத்திரிகைகள்தான் காரண மாக இருக்கும். இந்தக் கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வது யார் என்று நினைக்கிறீர்கள்? அந்தக் காரியத்தை பத்திரிகை கள்தான் செய்கின்றன. 'காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்' என்று பத்திரிகை களைப் பார்த்து பாரதிதாசன் சொன்னது வெறும் புகழ் அல்ல. சமூகம் கொள்ள வேண்டியது எது, தள்ள வேண்டியது என்று இந்தக் காகித வாத்தியார்கள் உங்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

'பத்திரிகையைப் பெண்' என்று வர்ணித்தார் பாரதிதாசன். அந்தப் பெண்ணுடன்தான் என் குடித்தனம் நகர்கிறது. சின்னக் குத்தூசி திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சொல்பவர்கள் இனியாவது திருத்திக்கொள்ளுங்கள்!''

 
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி
''எனக்கு பத்திரிகை பிடிக்கும்!'' -இந்த வாரம்: சின்னக் குத்தூசி