ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!


ஸ்பெஷல் 1
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!
 
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

தாக்குதல் அபாயத்தில் தமிழகம்!

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

''இந்தியாதான் எங்களின் அடுத்த இலக்கு. பொறுத்திருந்து பாருங்கள்!'' - நியூயார்க் வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட 9 நாட்கள் கழித்து, டெல்லி திகார் சிறையில் இருந்த அல்-கொய்தா அமைப்பின் அப்துல் ரௌவ், தன்னைச் சந்திக்க வந்த உளவுத் துறை அதிகாரியிடம் சொன்னது இது. ''என்னுடன் சேர்த்து 125 அரேபிய அல்-கொய்தாக்கள் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள்'' என்று அப்போதே திடுக்கிடவைத்தான். இப்போது அவன் சொன்ன வார்த்தைகளை நிஜமாக்கி, மும்பையில் ரத்தத் தாண்டவம் ஆடியிருக்கிறார்கள். தேசத்தின் இதயப் பகுதியான மும்பையில், கிட்டத்தட்ட 3 முழு நாட்களை மிரட்டி எடுத்தவர்கள் வெறும் 12 தீவிரவாதிகள்!

காஷ்மீர், டெல்லி, மும்பை, ஹைதராபாத்... இந்த 4 நகரங்கள்தான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு விளையாடும் மைதானம். இதற்கான அதிபயங்கர ஆட்டக்காரர்களை அனுப்பிவைப்பது அல்-கொய்தா. தீவிரவாதிகள் பலர் உயிரோடு சிக்குவதில்லை. அப்படியே சிக்கினாலும், அவ்வளவு எளிதாக வாய் திறப்பதில்லை. மிக இளம் வயது தீவிரவாதிகள் சிக்கும்போது மட்டும் அவர்களிடம் இருந்து தேவையான விஷயங்களை ராணுவமும் பயங்கரவாத தடுப்புப் படையும் கறந்துவைத்துக்கொள்ளும்.

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

இந்திய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். இவர்களில் ரஜாவுக்கும் ஹம்சாவுக்கும் 22 வயது. ரானாவுக்கும் ஹைதருக்கும் 29 வயது. முகமது மட்டும் கொஞ்சம் மூத்தவர், 35 வயது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஐசி 841 விமானத்தைக் கடத்தியபோது, விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் இந்த முகமதுவும் அடக்கம். இந்த 5 பேர் வசம் இருந்த செல்போன்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், கராச்சி, பஹவல்பூர், முரிட் கே ஆகிய இடங்களுக்குப் பேசப்பட்டிருந்தன. அவை, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகங்கள். இப்போது நடந்த மும்பை அட்டாக்கிலும் இதே க்ரூப்பில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்தான் தங்கள் கைங்கர்யத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

பயங்கரவாதம் தூரத்தில் இல்லை. நமக்குப் பக்கத்திலேயே காத்திருக்கிறது. காஷ்மீரைக் காரணமாகக் காட்டி இந்த தீவிரவாத அமைப்புகள் தங்கள் ஆயுதங்களை இந்தியாவை நோக்கித் திருப்ப ஆரம்பித்திருக்கிறது. இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் முழு ஆசீர்வாதம் உண்டு. ''நான் எட்டாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டேன். ஒரு நாள் லாகூரில் கடைக்குப் போனபோது பொதுக்கூட்டம் ஒன்றில் லஷ்கர் அமைப்புத் தலைவர் ஆவேசமாகப் பேசியதைக் கேட்டேன். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை அவர் திட்டிப் பேசியதை பாகிஸ்தான் ராணுவத்தினர் தடுக்கவில்லை. ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளும் வேடிக்கைதான் பார்த்தனர். மறுநாளே அந்த அமைப்பில் உறுப்பினரானேன். சில கேசட்டுகளை எனக்குப் போட்டுக் காண்பித்தார்கள். முசபராபாத்தில் எனக்கு மூன்று மாதப் பயிற்சி தரப்பட்டது. முதல் வாரம் மரம் வெட்டச் சொன்னார்கள். அடுத்த வாரம் மளிகைப் பொருட்கள் வாங்க அனுப்பினார்கள். அதன் பிறகு கல் உடைக்கும் பயிற்சி. பிறகு, வெடிகுண்டுகளைக் கையாளக் கற்றுக்கொடுத்தார்கள். என்னோடு சேர்ந்து 80 பேர் பயிற்சி எடுத்திருப்பார்கள். ஆனால், 7 பேரை மட்டும் ஒரு ஜீப்பில் பூஞ்ச் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆளுக்கொரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள், 4 தோட்டா மேகஸின் தரப்பட்டது. அதன் பிறகு மலைப் பகுதியில் ஏற ஆரம்பித்தோம்'' என்ற வாக்குமூலத்தைக் கொடுத்த முகமது இர்பானுக்கு வயது 23. அவனுடன் வந்த கலில் உல் ரகுமான் வயது 18. இருவரும் இந்தியாவுக்குள் சதித் திட்டத்துடன் ஊடுருவி இந்திய ராணுவத்திடம் சிக்கிக்கொண்டவர்கள்.

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

''என்னைப் பள்ளிக்கூடத்துக்குத் தேடி வந்து அழைத்துப் போனார்கள். 'தற்கொலைப் படையில் சேர்ந்தால் பணம் கிடைக்கும்' என்றார்கள். 3 மாதப் பயிற்சி கொடுத்தார்கள். என் கையில் துப்பாக்கி தரப்பட்டது. அதை வைத்து நிறைய சாதிக்க முடியும் என்று நினைத்தேன். ரேடியோ கருவியை இயக்குவது, சங்கேத பாஷைகள், வெடிகுண்டுகளை ரிமோட் மூலம் இயக்குவது, கையெறி குண்டைப் பயன்படுத்துவது போன்ற பயிற்சிகள் தந்தார்கள். இந்தியாவுக்குள் ஊடுருவும்போது வரும் வழியில் இருக்கும் வீடுகளைக் கைப்பற்றி அதில் தங்குவோம். மாடி வீடுகளில் மட்டும்தான் தங்க வேண்டும். அதுவும் 48 மணி நேரத்துக்கு மேல் அடுத்த இடத்துக்குப் போய்விட வேண்டும்'' - இது கலில் உல் ரகுமானின் ஸ்டேட்மென்ட்.

இப்படிப் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தினந்தோறும் இந்திய எல்லைக்குள் வருவது இன்றும் தொடர்கிறது. ''தீவிரவாதிகளைத் தயாரிக்க, மூளைச் சலவை செய்ய ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தனியாகப் பயிற்சிப் பள்ளிகளே இருக்கின்றனவாம். பாகிஸ்தானிலும் இந்த வகைப் பள்ளிகள் நிறைய உண்டு. இந்தப் பள்ளிகளில் மதரீதியான பயிற்சி வகுப்பு என்று மாணவர்களைத் திரட்டுகிறார்கள். அதில் சிறந்த மாணவனை ஐ.எஸ்.ஐ. தங்களது நடவடிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. 6 வயது முதல் 16 வயது வரை இவர்களுக்கு போதனைகளை மட்டும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதன் பிறகே நிஜமான பயிற்சி கள் ஆரம்பிக்கின்றன!'' என்கிறது இந்தியப் பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை.

குளிர் மற்றும் மலைப்பிரதேசங்களில் தாக்குப்பிடிப்பது, வேவு பார்க்கும் உத்திகள், உளவு அமைப்புகள் பற்றிய தகவல்கள்தான் முதலில் கற்றுத் தரப்படுகின்றன. அதன் பிறகு சங்கேத பாஷைகள், ஊடுருவுவது எப்படி, தனி நபர்களைக் கொல்வது, நகரங்களின் வரைபடங்களை மனப்பாடம் செய்வது, துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது அடுத்ததாக கற்றுத் தரப்படுகிறது. பசியைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். உலர்ந்த திராட்சைகளையே சாப்பிடுகிறார்கள். நாடாளுமன்றக் கட்டடத்தைத் தகர்க்க வந்தவர்கள், அதற்கு முந்தைய நாள் மட்டும் 2,000 ரூபாய்க்கு உலர்ந்த திராட்சை வாங்கியதை டெல்லி பாதுகாப்புப் படை கண்டுபிடித்தது. (தாஜ் ஓட்டல் மாதிரி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி, பின் அழிக்கும் திட்டத்தோடு வந்திருந்தார்கள் தீவிரவாதிகள். நல்லவேளை, அது ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டது) ஜனநெருக்கடியான பகுதிகளில் ராணுவம், டேங்குகள், கவச வாகனங்களைத் தாக்குவது எப்படி என்கிற அதிரடிப் பயிற்சிகளும் உண்டு.

பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!

விடிவதற்கு முன் எழுந்து மலையில் ஓட்டம், உடற்பயிற்சிகள், ஆயுதப் பயிற்சி, அறிவியல் வகுப்புகள் என்று இவர்களின் ஒவ்வொரு நாளும் டிஃபென்ஸ் அகாடமியின் ஸ்டைலில் இருப்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இப்படிப் பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் உடனே வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. பயிற்சி முடித்ததும், 'சொல்லி அனுப்புறோம்' என்று அனுப்பிவைக்கப்படுகிறார்கள். தேவைப்படும்போது மட்டும் பயன்படும் இவர்களுக்கு 'ஸ்லீப்பர்' என்று பெயர். இப்படிப் பல ஸ்லீப்பர்கள் டெல்லி, மும்பை எனப் பெருநகரங்களில் அமைதியாக வசித்து வருகிறார்கள்.

இந்தியாவுக்குள் அனுப்பப்படும் ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனி அஜென்டாக்கள் வழங்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன் ஹர்கத்துல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் க்வாமன் அயூப் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து தான் வந்த நோக்கத்தை அவர் சொன்னபோது, இந்திய உளவுத் துறை அதிர்ந்தது. 'இந்தியாவில் இருக்கும் அமெரிக்க, இஸ்ரேலியர்களைக் கொலை செய்ய நாங்கள் வந்துள்ளோம். இரண்டு நாட்டுத் தூதர்களையும் தீர்த்துக்கட்டுவோம்'' என்ற அயூப், அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் அதிகமாகத் தங்கும் ஓட்டல்களின் பட்டியலை வைத்திருந்தார். இன்று மும்பையில் நடந்த தாக்குதலில் நாரிமன் ஹவுஸ் குறிவைக்கப்பட்டதன் பின்னணி இதுதான். யூதர்களின் முக்கிய அமைப்பான சபாக், இந்த நாரிமன் ஹவுஸின் சில தளங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. எனவே, இந்த இடம் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய முஜாஹிதீன் என்று செயல்பட்டு வந்த அமைப்பு, டெக்கான் முஜாஹிதீன் என்று பெயரை மாற்றிக்கொண்டதன் பின்னணி தமிழ்நாட்டுக்கும் அதிர்ச்சியானது. அதாவது, காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து 'ஆசாத் காஷ்மீர்' என்று சொல்லி வந்தவர்கள், அதைப் போல ஹைதராபாத்தும் சுதந்திரமான தனி நாடு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம், இந்தியாவுடன் தனது பகுதியை இணைத்துக்கொள்ள முதலில் சம்மதிக்கவில்லை என்றதும், இந்தியா தனது ராணுவத்தை அனுப்பி சண்டை நடத்தியது. 3 நாட்களில் நிஜாம் சரணடைந்தார் என்பது சரித்திரம். ஹைதராபாத் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி. அதைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்பது இந்த அமைப்புகளின் புதிய கோஷம். இதனால், மும்பை மாதிரியான அச்சுறுத்தல்கள் இனி நமக்கு அருகிலும் நடக்கக்கூடும்' என்கிற கவலையில் இருக்கிறது தமிழகப் புலனாய்வுத் துறை.

தனது பகையைத் தீர்த்துக்கொள்ள இது போன்ற விவகாரங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. இரண்டு நாட்டுக்கும் எல்லையாக இன்று இருக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஆயுதங்களோடும் நோக்கங்களோடும் உள்ளே நுழைகிறார்கள். இவர்களைத் தடுக்கப் பல அடுக்கு பாதுகாப்புகளை இந்தியா அமைத்துள்ளது. கட்டுப்பாட்டு கோட்டுக்கு உள்பக்கமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஊடுருவ வசதியான இடங்களில் ராணுவம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து உயர் தொழில்நுட்பவேலி, கண்காணிப்பு சிஸ்டம் உள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க மெகா ஜெனரேட்டர்கள் இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வருகிறார்கள். மின்வேலிக்குக் கீழே குறுகலான பள்ளம் தோண்டி வருகிறார்கள். ராணுவ வீரர்கள் இல்லாத இடங்களில் மின்வேலிகள் மீது பிளாஸ்டிக் ஏணிகள் போட்டும் ரப்பர் கையுறைகளைப் பயன்படுத்தியும் நுழைகிறார்கள். நிறைவேறா லட்சியத்துடன் நித்தமும் பயங்கரவாதிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இந்தியப் பிரஜையின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிக்கொண்டே போகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. 17-வது சம்பவம் நடப்பதற்கு முன்னதாகப் பேசித் தீர்க்க வேண்டும். அல்லது போரிட்டு முடிக்க வேண்டும்!

 
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!
பக்கத்தில் இருக்கிறது பயங்கரம்!